Apr 27, 2013

வாய்ப்பாடு.....!






கார்மெண்ட்ஸ் பேக்கிங் சம்பந்தமாக அலுவலகத்தில் மேனஜருடன் பேசிக்கொண்டிருந்தேன் . சிறிய பெட்டியில் அதிகமான கார்மெண்ட்ஸ்களை அடைத்துவிடவேண்டுமென்று அதிகார வர்க்கத்தில் இருந்து  ஆணை வந்திருந்ததால் மும்முரமாக கணக்கு பண்ணிக்கொண்டும் , செய்முறை செய்துபார்த்துக்கொண்டுமிருந்தோம் .

இப்டி வச்சா எவ்வளவு புடிக்கும் , அப்டி வச்சா எவ்வளவு புடிக்கும் என்று மேனஜர் கேட்டுக்கொண்டே இருந்தார் , நானும் சொல்லிகொண்டே வந்தேன் .

ஏம்பா...! வித் வைஸ்ல எட்டு பாக்சும் லென்த் வைஸ்ல எட்டு பாக்சும் வச்சா எவ்ளோ வைக்கலாம்...?

“எட்டோ எட்டு அறுபத்தி நாலு சார்”ன்னு சட்டென வாய்தவறி வாய்ப்பாடு சொல்லிவிட்டேன் . அவர் என்னைப்பார்த்தார் நான் அவரைப்பார்த்தேன் . பேசவில்லை சிரித்துக்கொண்டோம் .

இரவு படுக்கைக்கு போனபின்பும் பால்யத்தில படித்த வாய்ப்பாட்டு மனதிற்குள் பாடிக்கொண்டே இருந்தது. அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்துக்கொண்டிருந்த போது கணக்கு வாத்தியார் செல்வேந்திரன் வாய்ப்பாடு சரியாகச் சொல்லாதவர்களை பாடு பாடுன்னு பாடுபடுத்திவிடுவார் . ஒவ்வொருமுறை வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதும், எந்தவித முன்னறிவிப்புமில்லாமல்  சிவா நீ பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லுன்னு பீதியைக்கிளப்புவார்.  எப்ப யார எப்டி கிளப்புவார்னு தெரியாது. நம்மள கிளப்பிடக்கூடாதுன்னு  அவுங்க அவுங்க இஷ்ட தெய்வத்த வேண்டிக்குவோம்.

ஒருமுறை புத்தகத்த பார்த்துக்கொண்டே சுப்பு ஒம்பதாம் வாய்ப்பாடு சொல்லுன்னு சொன்னார். வாத்தியார் தான் கவனிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த பத்தாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க ஆரம்பித்துவிட்டேன்  அடுத்த கணம் சாக்பீஸ் ஈட்டி பறந்து வந்து முன் நெற்றியை பதம் பார்த்தது.

ஏன்டா ராஸ்கல்..! ஏமாத்த பாக்குறியா..? யார்கிட்ட..........!

அதுக்கப்புறம் நடந்தது சென்சார் கட் ....!

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை நிறைய முறை சாக்பீஸ் ஈட்டிகளையும்,  டஸ்டர் அம்புகளையும் முகத்தில் வாங்கியிருக்கின்றேன் . இதோ இப்பொழுது முன் நெற்றியை தடவிப்பார்க்கிறேன்  சாக்பீஸ் வாசமும் , செல்வேந்திரன் சார் கோபமும் காற்றில் கலந்து என்னை நோக்கி வருவது போலவே இருக்கிறது .

திடீர்ன்னு இப்ப வாய்ப்பாடு கேட்கனும்னு ஒரு ஆசை ..! என்ன செய்யலாம் என்று யோசித்து  பக்கத்து வீட்டு குட்டிச்சுட்டியிடம் போய் கேட்டேன் ....

“குட்டிம்மா மாமாவுக்கு ஒரு வாய்ப்பாட்டு சொல்றியா ..?”

திரு திருவென முழித்தது ...

“மிட்டாய் வாங்கித்தர்றேன் செல்லம் ...”

ம்கூம் ... அதே பாவம் ... அதே முழி ...

நண்பர் வந்து , “பேபி..! அங்கிளுக்கு டேபிள்ஸ் சொல்லும்மா” என்று சொன்னதற்குப்பிறகு பேபி  இங்கி”லீசில்” எதையோ கக்க ஆரம்பித்தது.....!

பேபி ரோபோவாய் மாறி டேபிள்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சட்டென “குட்” சொல்லி பட்டென வெளியேறிவிட்டேன் . குழந்தை சரியாகத்தான் சொன்னது என்னால் தான் கேட்க முடியவில்லை . நான் பால்யத்தில் படித்த வாய்ப்பாடும் , பருவத்தில் கேட்ட வாய்ப்பாடும் , இப்பொழுது கேட்க நினைத்த வாய்ப்பாடும் இதுவல்ல .....!



14 comments:

  1. ஹா,,, ஹா,,, நிஜந்தான் தம்பி. என் சித்திதான் எனக்கு ஆசிரியரும் ஆனதால் வாய்ப்பாடு ஒப்பித்தல் என்பது தப்பிக்க முடியாததாகிப் போனது. இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த பேஸ்மெண்ட் எவ்வளவு ஸ்ட்ராங்குனு புரியுது. உங்களின் ஆதங்கம் மிகச் சரி. அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுவாட்டி பாராட்டுன ஒங்க பெரிய மனஸ்க்கு ரெமாப் நன்றின்னேன் ...!

      Delete
  2. ஹா,,, ஹா,,, நிஜந்தான் தம்பி. என் சித்திதான் எனக்கு ஆசிரியரும் ஆனதால் வாய்ப்பாடு ஒப்பித்தல் என்பது தப்பிக்க முடியாததாகிப் போனது. இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த பேஸ்மெண்ட் எவ்வளவு ஸ்ட்ராங்குனு புரியுது. உங்களின் ஆதங்கம் மிகச் சரி. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. அருமை! சின்ன வயதில் நான் வாய்ப்பாடு படித்த ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்! இப்போது டேபிள்ஸ் எனக்கும் பிடிப்பதில்லை! நன்றி!

    ReplyDelete
  4. அண்ணே, நானும் 'டேபிள்ஸ்' தான் படிச்சேன். நீங்க படிச்ச 'வாய்ப்பாடு' ஒரு சாம்பிள் சொல்ல முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. என்னது அண்ணனா ...! அய்யய்யோ அதுக்குள்ளார கண்டுபுடிச்சுட்டான்களே ...!

      தம்பீ...!

      நாங்க சொந்த மொழில , முட்டி போட்டு வாய்ப்பாடு படிச்சோம் ,
      நீங்க (இங்கி)லீசுக்கு எடுத்த மொழில சேர் போட்டு டேபிள்'ஸ் படிச்சுருக்கீங்க அதான் சாம்பிள் கேக்குறீக ...! சீனு சொன்னதே போதும்னு நெனைக்குறேன் ....!

      Delete
  5. ஒரொன்னா ஒன்னு
    ஈரொன்னா ரெண்டு

    இல்லல சத்தம் போதாது இன்னும் கத்தி சொல்லுங்க பாப்போம்

    ஒரொன் ஒன்னு
    ஈரான் ரெண்டு
    மூவொன் மூணு

    தொண்டை கிழியும், நிலம் அதிரும், எங்கள் சத்தத்தை மிஞ்ச பக்கத்துக்கு வகுப்பறை இன்னும் அதிகமாய் கத்தும்...

    மதிய உணவு இடைவேளை வாய்பாடு அனுபவங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு. இந்த அனுபவம் எனக்கு கிட்ட வில்லை.

      Delete
    2. //எங்கள் சத்தத்தை மிஞ்ச பக்கத்துக்கு வகுப்பறை இன்னும் அதிகமாய் கத்தும்... //

      ஓரெட்டா எட்டு
      ஈரெட்டா பதினாறு
      மூவெட்டா இருவத்தி நாலு
      நாலெட்டா முப்பத்தி ரெண்டு
      அய்யேட்டா நாப்பது ......! எலேய் சீனு சத்தம் கேக்குதாவுல ....!

      Delete
  6. மலரும் நினைவுகளைக் கிளப்பிவிட்ட சுப்பு வாழ்க... நான் படிக்கிற காலத்தில் பதினாறாம் வாய்ப்படு வரை சொல்லிக்கொடுத்தார்கள்... அப்பவே ஒரு ஆர்வத்தில் இருபதாம் வாய்ப்பாடு வரை கற்றுக்கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா ...! டூ விட்ட ஸ்கூல் பையன் பழம் வுட்டுட்டாரு .....!

      //அப்பவே ஒரு ஆர்வத்தில் இருபதாம் வாய்ப்பாடு வரை கற்றுக்கொண்டேன்...//

      அப்பவே நீங்க பெரிய அப்பாடக்கருன்னு சொல்லுங்க ....!

      அய்யய்யோ...! மறுபடியும் டூ விட்டுராதீங்க ஸ்கூல் பையன் ....!

      Delete
  7. நண்பர் (ஆசிரியர்) தளம் பிறகு தருகிறேன்... வாசிக்கவும்... (URL ஞாபகம் இல்லை) .

    ReplyDelete
    Replies
    1. அண்ணேன் என்ன சொல்லுறீக ....!

      Delete

Related Posts with Thumbnails