Jul 31, 2013

கணினி கற்ற கதை ...!






தொடர்பதிவில் எம்மைக் கோர்த்துவிட்ட ஸ்பை க்கு ஒரு கொட்டு ....!

முட்டையப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ...? எனக்கு C ++ பாடம்  தான் ஞாபகத்துக்கு வரும் ...! ( ஏன்னு ல்லாம் விலாவாரியா சொன்னா , எம்மேல் நீங்க வச்சுருக்க கொஞ்சநஞ்ச  மரியாதையும்(?) மானாவாரியா மண்னைக்கவ்விரும்...! ஸோ... நீங்களே யூகிச்சுக்குங்க).  

இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில், அறந்தாங்கி பாலிடெக்னிக்- கணினி செய்முறைக்கூடத்தில் தான்   கூட்டத்தோடு கூட்டமா , எதுவுமே செய்யாம எட்டி நின்னு எக்கிப் பார்த்தேன் . அதுதான் கன்னி  கணினி தரிசனம் . கணினியே தொடாம C,C++ லாம் படிச்ச(?) பாக்கியவான் அடியேன். கல்லூரியில் பசையுள்ள பசங்கல்லாம் தனியா கணினி வகுப்புக்கு போயி , பேருக்கு பின்னாடி என்னென்னமோ எழுதிக்குவாங்க ...! மெயில் ஐடி வச்சுருக்கவனை எல்லாம் , மெர்சிடிஸ் கார் வச்சுருக்கவன பாக்குற மாதிரி “ஆ” ன்னு  பார்த்த நாட்கள் அவை .

அப்புறம் படிச்சு முடிச்சு பெங்களூரு , சென்னை , கோவை , திருச்சி , திருப்பூருன்னு நாலு வருசத்துல அஞ்சு ஊருல வேல பாத்து, மறுபடி  கோவை யிலேயே செட்டிலானவரைக்கும் கம்ப்யூட்டருக்கும் நமக்கும் காத தூரம் . சொந்த பந்தமெல்லாம் கம்ப்யூட்டர் படிக்கலையா , கம்ப்யூட்டர் படிக்கலையான்னு கெடக்கிற கேப்புல எல்லாம் கிடா வெட்டி, கம்ப்யூட்டர ஒரு விரோதியாகவே ஆக்கிப்புட்டாங்க .

இரண்டாயிரத்து ஆறு வரைக்கும் கம்ப்யூட்டர் ல , “கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்” கூட தெரியாது . வேற வழியே இல்லாம கடசில கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கவேண்டிய நிர்பந்தம், இல்லாங்காட்டி வேல பணால். அப்றமென்ன இப்ப வரைக்கும் கம்ப்யூட்டர் கத்துக்கிறேன்னு ஒரே அட்ராசிட்டிதான்....!

சீனியர் இல்லாத ஒரு நாள்ல , ஜி.எம் ஒரு புரெடக்சன் ரிப்போர்ட் கேக்க , நான் word னே தெரியாம அத ஒப்பன் பண்ணி கால்குட்டேர் லையே கணக்குபோட்டு எடுத்துட்டு போனேன் . பாத்தோன்ன பாரட்டுவாருன்னு பாத்தா பிராண்டிட்டாரு ....!

என்னய்யா ரிப்போர்ட்டு இது ...? தப்பு தப்பா இருக்கு ...! போ... போயி எக்சல் ல போட்டு எடுத்துட்டு வா ன்னு தொரத்திவிட்டுட்டாறு ...! என்னடா இது லூசுத்தனமா இருக்கு , எக்சல்ல்ல லக்கேஜ் வேணா போடலாம் .... எப்டி ரிப்போர்ட் போடமுடியும் ...? நமக்கு எக்சல்லும் ஓட்டத்தெரியாதேன்னு சொல்லமா கொள்ளமா ரூமுக்கு ஓடியாந்துட்டேன் . மறுநாள் சீனியர் சொல்லி தான் எக்சல் ண்ணா என்னன்னே தெரிஞ்சுது ...!

மொத மொதல்ல பிரின்ட் அவுட் எடுத்தது அத விட பெரிய காமெடி . வேறோருமொர, அதே ஜி.எம் மீட்டிங்க்ல  இருக்கும்போது ஒரு WORD FILE ல ஒரு பார்ட்டியோட பேர சொல்லி , அந்த டீடெயில பிரிண்ட் எடுத்துட்டு வான்னும் ,அர்ஜன்ட் ன்னும்  சொல்லிட்டு போன வச்சுட்டாரு. சரி பிரின்ட் அவுட் தானேன்னு நானும் பிரின்ட் கொடுத்து எடுத்துக்கிட்டு இருந்தேன் . ஒரு பத்து நிமிஷம் இருக்கும் பாதி மீட்டிங்க்லேயே பாஞ்சு வந்தாரு நம்ம ஜி.எம்மு ...

“என்னய்யா பண்ணுற ...?”

“பிரின்ட் எடுத்துட்டு இருக்கேன் சார் ... “

நாப்பது பக்கம் வந்துருச்சு , இன்னும் பத்து பக்கம் வந்தா நீங்க கேட்ட பார்ட்டி டீடேயிலு வந்துரும் சார்ன்னு சொல்லி முடிக்கவும் , அவர் தலயில அடிச்சுக்கவும் சரியா இருந்துச்சு ...!

கம்ப்யூட்டர்ல , ஒவ்வொரு எழுத்தா டைப்பண்ணிட்டு இருக்கும்போதே சட்டுன்னு , அய்யய்யோ U வக்காணூம் , E காணும்னும் , கேணியக்கானும்ங்குற மாதிரி நா போட்டு வச்சுருந்த ரிப்போர்ட்ட காணும்ன்னு அப்பப்போ  EDP STAFFS ச கலவரப்”படுத்துன” நாட்கள் லாம் மறக்கவே முடியாது .

ஒரு முறை ஊருக்கு போயிருந்த போது, சொந்தக்காரர் ஒருத்தர் என்னோட வேல , சம்பளம் , படிப்பெல்லாம் பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு . நானும் சொல்லிட்டு இருந்தேன் .

“இந்த சம்பளத்த வச்சு என்ன பண்றது” ...? “ஆமா ஒனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா ...?”

“கொஞ்சம் , கொஞ்சம் தெரியும் மாமா ...?

“ம்ம்ம் ..! M.S. OFFICE தெரியுமா ...?”

“தெரியாது மாமா ...”  

இதோட நிறுத்திருந்தா அநியாயமா அவர் என்னோட பேசுறதையே நிறுத்திருக்க மாட்டாரு ...!

அடுத்து நாங் கேட்ட கேள்வி இதுதாங்க ...!

“மாமா ! M.S. OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”

“...........”

ஒன்னு முறையா படிச்சுருக்கோணும் , இல்லாங்காட்டி சின்னவயசுலே இருந்து கம்ப்யூட்டர் அறிமுகமாயிருக்கோனும் ரெண்டுங்கெட்டான இருந்தா பெரும் பாடுதான்  ....!

தத்தி, தத்தி இதோ இப்போ வலைப்பதிவு வரையிலும் வந்துருக்கேன் ... அதுக்கு முக்கியமான காரணம் நா வேல பாக்குற நிறுவனம் , என்னோட சீனியர்ஸ் , சக நண்பர்கள் , பத்திரிகைகள் . இதோ இத வாசிச்சுட்டு இருக்க நீங்க .... எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ ......!
  
ஏதோ, அஞ்சு பெற கோர்த்துவிடனுமாமே ....! இன்னும் எழுதாமா யாருனாச்சும் இருக்கீங்களா ...? நல்லாருப்பீங்க நீங்களா வந்து மாட்டிக்குங்க மக்களே....!


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .



Jul 26, 2013

பிளாக்குல ட்வீட்டு ...!



                          



சாப்புடுற சாப்பாட்டுல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா, ச்சீ ச்சீ இத மனுஷன் சாப்புடுவானா ன்னு தூரப் போடுறோம் – குப்பை ன்னும் சொல்றோம்.

ஒடம்புல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா வியாதின்னும், வந்தவன நோயாளின்னும் சொல்றோம் .

ஆனா, அளவுக்கும், தேவைக்கும் அதிகமா மண்ணையும் , பொன்னையும் சேக்குரவன பணக்காரன்னும் , பொழைக்க தெரிஞ்சவன்னும் சொல்றோம் ...!”

நியாயமாஆஆரே......? இது.. நியாயமாஆஆரே......?



ஆரஞ்சு மிட்டாயும் , கோலி சோடாவும் இப்பல்லாம் கெடைக்கவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்ளும் என் அருமை அம்மாவுக்கு எப்படிப் புரியவைப்பேன் மன்மோகன் சிங்கின் மகத்துவத்தையும் , உலகமயமாக்கலின் உச்சத்தையும் ...! // BY அமெரிக்க இந்தியத் தமிழன் //.


தலயில சொட்டையும் , வயித்துல தொப்பையும் இல்லாதவர்கள் தான் எங்களுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் – இளம்பெண்கள் ஆசை // இதுக்குப்பேர் ஆசை இல்லங்க பே...ரா...சை...! //.


சீனிவாசனுக்கும் , ராசகொமாருக்கும் ஒரே ஒரு வித்தியாசந்தேன் . முன்னவர் POWER STAR, பின்னவர் POW”D”ER  STAR...! // யப்பா எம்பூட்டு பவுடரு ...! //


பெட்ரோல் டேங் FULL பண்ணுவதென்பது , நடுத்தரவர்க்கத்தின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது //// BY ரிசர்விலேயே வண்டி உருட்டும் மிடில்கிளாஸ் மாதவன் //





என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .



Jul 23, 2013

இசையும் , மழையும் - ரசித்த பதிவும் ...!








இசையையும் , மழையையும் பிடிக்காதவர்கள் யாரேனும் இந்த உலகத்தில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை . எல்லோரும் பிடிக்குமென்றே சொல்கின்றார்கள் . முகநூல் முதல் ரெஸ்யூம் வரை எனக்கும் பிடிக்குமென்றே சொல்லிவருகின்றேன் . ஆனால் என்னால்  எந்தவொரு மழைப்பொழுதையும் , இசைத்துளியையும் ரசித்து, லயித்து சொல்லமுடியவில்லை ....! எத்தனை பேரால் சொல்ல முடியுமென்று தெரியவில்லை . உங்களால் முடியுமென்றால் நீங்கள் ஒரு ரசிகன் பாஸ் ...!

முன்னிரவு மழையையும் , பின்னிரவின் இசையையும் அழகாக , அமைதியாக லயித்து , ரசிக்கவேண்டுமேன்று நினைக்கும் ஒவ்வொருமுறையும் , மனம் அவசர ஊர்தியாய் பறந்துவிடுகின்றது .   நடிப்பதற்கு , இசைப்பதற்கு , வரைவதற்கு , பாடுவதற்கு , எழுதுவதற்கு எப்படி பொறுமையும், திறமையும்  தேவைப்படுகின்றதோ , அதைப்போலவே ஏன் அதைவிட அதிகமாகவே பொறுமையும் , திறமையும் தேவப்படுகின்றது ரசிப்பதற்கு ...!

ஆழமாக , அழகாக , ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சில ஜீவன்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கின்றது , ரசனை மிக்க அந்த ஜீவன்களால் தான் இந்த உலகம் இன்னும் ஜீவித்திருக்கின்றது என்று திடமாக நம்புகின்றேன்  .

ரசிப்பதே ஒரு கலை எனும்பொழுது , ரசித்ததை அப்படியே எழுத்தில் வார்த்து வாசிப்பவர்களையும் நேசிப்பவர்களாக , ரசனைமிக்கவர்களாக மாற்றும் செயலை என்னவென்று சொல்ல  ...!

இந்தியாவின் முதன்மையான பத்திரிகை என்று “மார்”தட்டிக்”கொல்லும்” பத்திரிகைகள் எல்லாம் நடிகைகளின் “....பை” மட்டுமே பிரதானமாக அட்டைப்படமாக போட்டு , ரசித்து லயித்து எழுதும் காலத்தில் , அழகழகான ரசனைகளை மிக அற்புதமாக வார்த்திருக்கிறார்கள் நம் வலையுலக நண்பர்கள் . நான் மிக ரசித்த இரண்டு பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்  . இந்தப்பதிவுகளையும் , பதிவர்களையும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம் . தவறவிடக்கூடாத இந்தப்பதிவுகளை , தவறவிட்டவர்களுக்கு  மீட்டெடுத்துக்கொடுக்கும் முயற்சிதான் இந்தப்பதிவு ....!.

ரசனையின் உச்சமான இந்த இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு இதுதான் தோன்றியது ....... அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து , நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு.
    
பாடல் கேட்ட கதை – இளையராஜாவின்இயற்பியல் பகுதி - குமரன் .

வாரியார் – சித்திரமே செந்தேன் மழையே – தேவா சுப்பையா .

இந்த ஒரு பதிவு மட்டுமல்ல , இவர்கள் எழுதும் அத்துனை பதிவுகளுமே ரசனையின் உச்சம்தான். இவர்களைப் பற்றிய இந்தப்பதிவால்  நான் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் . மிக அழகான அனுபவத்தை தந்த தேவா அண்ணனுக்கும் , குமரன் அண்ணனுக்கும்( !) கடைநிலை ரசிகனின் கனிவான நன்றிகள் ...!

  


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .

Jul 18, 2013

செம்மொழியான தமிழ்மொழியே ...!





“சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க” , “கொஞ்சம் நடிங்க பாஸ்” இந்த ரெண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் . ரெம்ப, ரெம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி . ரெம்ப சாதாரணமான விசயங்கள, மக்கள் எப்படி புரிஞ்சுவச்சுருக்காங்கன்னும் , எந்த மாதிரி அதை வெளிப்படுத்துராங்கன்னும் பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும் . (அடுத்தவங்க பல்பு வாங்குறத பார்க்குறது  யாருக்குத்தான் பிடிக்காது...! ).

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் , எனக்கு ஓர் ஆச வரும் , மேற்படி நிகழ்ச்சி மாதிரி தமிழ்நாட்டின் ஏதாவதொரு ஊரின் பொது எடத்துல , படிச்ச பத்து பேர நிறுத்தி வெள்ளக் காகிதம் கொடுத்து, ஒரு பக்கத்துக்கு தமிழ்ல எழுதுங்க மக்களே ன்னு சொல்லனும்னு ...! அப்டி எழுத வச்சு, அதப்படிச்சுப்பாத்தோம்னு வைங்க.. ச்சும்மா சிப்பு சிப்பா இருக்கும் . வடிவேலு , சந்தானம் காமெடில்லாம் பிச்சை எடுக்கணும், அப்டி அதகளமா இருக்கும்.

சாமி சத்தியமா பத்துக்கு நாலு பேரு , நாலு வரிக்கு மேல தாண்டமாட்டாங்க ... சொச்சத்துல பாதி பேரு, வரிக்கு ரெண்டு எழுத்துப்பிழையோடு தான் எழுதிருப்பாங்க . எழுத்துப்பிழை தவிர்த்து , இலக்கணப்பிழை , சந்திப்பிழையல்லாம் பாத்தோம்னா ஒருத்தரும் தேரமுடியாது . அதுதான் இன்றைய நிலை .

பள்ளிப்பருவத்தோடு முடிஞ்சுபோச்சு தமிழ்ல எழுதுறது . கல்லூரில, கடமைக்கு ஒரு தாள் தமிழ் . மற்றபடி வேலைக்கு வந்த பிறகு எங்கும் ஆங்கிலம் . தமிழ்ல எழுதுரதுக்கான வாய்ப்பே இல்ல . ஏன், பொதுவா எழுதுறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு அல்லது போக்கடித்துவிட்டோம் . தினசரி நாம ஏதாவது எழுதுரோமான்னு யோசிச்சு பத்தா, கையெழுத்து போடுவத தவிர வேறெதுவும் இருக்குற மாதிரி தெரியல  . அதுவும் சில நேரங்கள்ல டிஜிட்டல் கையெழுத்து இல்லைன்னா பஞ்சிங் ன்னு ஆயிடுத்து . ரெண்டாவது, கையெழுத்துப் போடுரதையெல்லாம் எழுத்துலேயே சேர்க்கமுடியாது . கைக்கு வந்தத கிறுக்குறது தானே கையெழுத்து ...!

கடிதம் ..? காணமல் போன பட்டியல்ல கூட இன்னைக்கு கடிதம் என்ற ஒன்னைக் காணமுடியல  . திருமணப்பத்திரிக்கைகள் கூட இன்னைக்கு ஆங்கிலம் தாங்கி தானே வருது...! நேர்ல கொடுக்குற ஒருசிலர் , பேரே எழுதுறதில்ல, மொட்டையாத்தான் கொடுக்குறாங்க ...!

ஏதோ தப்பித்தவறி வலைப்பூவுல எழுதுறதுனால, வட மாநில நடிகைகள் சொல்வது போல  கொஞ்சும் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்கு . இதக்கூட முழுமையான தமிழ் ன்னு சொல்லமுடியாது தமிங்கிலீஸ் தான் . கைப்பட காகிதத்துல எழுதும்போதுதான் நம்ம லட்சணம் நமக்கே தெரியுது .  இந்த காற்புள்ளி , அரைப்புள்ளி , ஆச்சர்யக்குறியெல்லாம் எங்க போடனும்னு தெரியாத தற்குரிகள்ல நானும் ஒருத்தேன்னு சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை . கொஞ்சம், நா எழுதுன பதிவுகள(!) படிச்சுப்பாத்தா , கோபிநாத் எப்டி நிமிசத்துக் பத்துத்தடவ வேற, வேற ன்னும் , சரிதானேன்னும் சொல்றமாதிரி, குறைந்தபட்சம் நாலு வரிக்கு ஒரு எடத்துலயாவது மூணு புள்ளியும் ஓர் ஆச்சர்யக்குரியும் போட்டிருப்பது நல்லாவே தெரியுது ...!

திடீர்ன்னு இவனுக்கு என்ன தமிழ்ப்பற்று வந்துருச்சுன்னு உங்களுக்கு தோணலாம், அதற்கு காரணம் சமீபத்தில படித்த ஒரு பதிவு . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு ரெம்பப்பிடிக்கும் . அவரயே ஒருத்தரு கயுவி,கயுவி ஊத்திருக்காரு . பரவலான வாசிப்பு அனுபவமும் , எழுதுகின்ற  அனுபவமும் இருக்க அவருக்கே இப்டின்னா ...?

சரின்னு இதப்படிச்சு முடிச்சு வீட்டுக்கு போனா அடுத்த அதிர்ச்சி அங்கே செலவுச்சிட்டையில காத்திருந்தது  ...!

பொதுவா , அம்மா எப்ப கடைக்கு போய் வந்தாலும் செலவுக்கணக்கு கண்டிப்பா எழுதீருவாங்க, அது அரரூவாயா இருந்தாலும் சரி ஆயிரம் ரூவாயா இருந்தாலும் சரி ...! பெரும்பாலும் நா வீட்டுல இருக்கும்போது என்னையதான் எழுதச்சொல்லுவாங்க . டாக்டர்களுக்கு போட்டியா அண்ணாச்சிக கிறுக்கீருக்கத, முட்டக்கிளாஸ் வெளக்கு வெளிச்சத்துல படிச்சு சிட்ட எழுதுறதுங்குறது சிறுவயதுல ஒரு பெரிய சவால் . உ.ப , து.ப ல்லாம் போட்டு சிட்டய முடிச்சா ரெண்டரையோ , மூனரையோ இடிக்கும். இதர செலவுன்னு போட்டு கணக்கு முடிக்கலாம்னா அம்மா வுடாது . யோசிச்சு யோசிச்சு கடசில கணக்கு நேர் பண்ணீரும் . அதுவரைக்கும் தூங்காது , தூங்கவும் வுடாது  ...! படிக்காட்டியும் , கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும்  இந்தியன் பாட்டி மாதிரி, ஒத்த ஒத்த எழுத்தா, அழுத்தி அழுத்தி எழுதி  அம்மா செலவு சிட்ட போட்டுட்டுதான் இருந்தாங்க  . இப்பத்தான் போடுறதுல்ல , உண்மைய சொன்னா போட முடியல. இப்பல்லாம், பெரும்பாலும் அண்ணாச்சி கடையில கூட ஆங்கிலத்துல தானே ரசீது தர்றாங்க, அதான் .  

நம்ம வீட்டுக்காரம்மா போன மாசம்தான் பட்டயப்படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்துருக்காக . அதுனால இந்த மாச செலவு சிட்டய அவுகதான் எழுதீருந்தாக. அதுலதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது ....! அது .....


மல்லிகை சாமான் வாங்கிய வகையில் செலவு ருபய் : 1150.00

என்னம்மா இப்டி எழுதீருக்கன்னு கேட்டா , நா என்ன பண்றது தமிழ்ல எழுதி நாலஞ்சு வருசமாச்சு, காலேஜ்ல புல்லா இங்கிலீசுலதான் படிச்சேன் , எழுதுனேன் அதான் அப்டிங்குராக .
என்னத்தச்சொல்ல ...!

ஆங்கிலோ இந்தியன் வீடுகள்ல வேல பாக்குற படிக்காத வேலைக்கார அம்மாவுக்கு , ஆங்கிலம் பேசத்தெரியும் , ஆனா படிக்கவோ , எழுதவோ தெரியாது . அந்த மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு நம்ம நெலம.


செம்மொழியான தமிழ்மொழியே
உனக்கிது பெரும் வலியே...!


வேண்டுகோள் : இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம் . என்னன்னு சொன்னீங்கன்னா திருத்திக்குவேன் .

சிபாரிசு : “அம்மா ,ஆடு , இலக்கணம்” அப்டிங்க்குற தலைப்புல கட்டுரையாளர் / எழுத்தாளர் என்.சொக்கன், தமிழ்பேப்பர் தளத்துல தமிழ் இலக்கணத்தொடர் எழுதீட்டு வர்றார் . தேவைப்படுபவர்கள் (சு)வாசித்து எழுதிப்பழகலாம் .


Jul 8, 2013

ஏதேதோ எண்ணங்கள்...!






ஞானும் ஞானி ...!

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தவமிருக்கும் ஒவ்வொரு முறையும் , உறவுகளுடனும் , நட்புகளுடனும் இன்னும் கொஞ்சம் பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் , கோபத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும் , பொறுமையாக இருக்கவேண்டும் , இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அழகனா, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நல்ல எண்ணங்கள்  மனத்தில் தோன்றுகின்றது . ஆனால் , உடல் கொஞ்சம் கொஞ்சமாக நலமாக ஆரம்பிக்கும் அதேசமயம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போக ஆரம்பித்துவிடுகின்றது.

அன்னக்கொடியும் அமீரும் ...!

அன்னக்கொடி படம் பார்த்த பின் அகில உலகத்திலேயே அளவில்லா ஆனந்தப்பட்டிருக்கக்கூடிய  ஒரே ஒருவர் – அமீர் . // என்ன மாமா தப்பிச்சுட்டோம்ல ....! //


ஹைய்யோ மானஸி ...!

லீலை படத்தின் ஒருகிளி பாடலில் பார்த்து ரசித்த “மானSEE”யை அதற்கப்புறம் எங்குமே ‘SEE’ர்க்கவில்லை . வெகு நாட்கள் கழித்து இதோ இப்பொழுது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் .
ஹையோ “மானSEE” ....! எவ்ளோ அழகான எக்ஸ்பிரசன்ஸ் ....! சான்சே இல்ல ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

சாலையில், நொறுங்கிய கண்ணாடிச்சிதறல்களை பார்க்கும் பொழுதும்  , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் ஆக்சிலேட்டரின் வேகம் தானாகவே குறைந்துவிடுகின்றது .  // அன்னிச்சை செயலா ? இல்லை உயிர்பயமா ?  //


வலிக்குது ....!

பகல் பொழுதுகளில் வரும் உடல் உபாதைகளைக்காட்டிலும் , இரவுகளில் வரும் உபாதைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் அப்படியொரு வலி வருகின்றதோ . யப்பா ...! முடியலப்பா முடியல...! வலி தாங்க முடியல ...!

பேச்சு எங்கள் மூச்சு ...!

விஜய் டிவியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” . அரைகுறை ஆடல் பாடல் நிகழ்ச்சியெல்லாம் ஆறு சீசன் தொடரும்போது, அவசியமான ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் ஒரே ஒரு சீசனோடு முடித்துக்கொண்டது , ரெம்ப வருத்தமாகவும் , கோவமாகவும் இருந்தது .

கோவம் இப்பொழுது சந்தோசமாக மாறிவிட்டது . இதோ போன வாரத்தில் இருந்து அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த சீசனை . ஞாயிறுகளில் காலை பத்து மணி முதல் பதினோருமணி வரை ஒளிபரப்புகின்றார்கள் . தவறவிடக்கூடாத நிகழ்ச்சி , அவசியம் பாருங்கள் .

சென்ற சீசனின் வெற்றியாளர் விஜயன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் , கவித சூர்யா வழங்குகிறார் .நன்றாகவே தொகுக்கின்றார் . என்ன SO தான் பாவம் பாடய்ப்படுத்துகின்றது .


என்ன கொடும சார் இது ...?

மேற்படி நிகழ்ச்சியில் பேசிய ஒரு பேச்சாளர் , இந்திய வரலாற்றிலேயே என்று சொல்லுவதற்குப்பதிலாக , இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே என்று சொல்லிவிட்டார் ....! தொலக்காட்சிபெட்டிகளின் வீரியம் அந்த அளவு இருக்கின்றது ....! இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்தமாக மழுங்கடித்துவிடுவார்கள் .


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .