"நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ...!"
ஊரிலிருந்து திரும்பி வந்த அம்மா சொன்ன வார்த்தைதான் இது . ஒட்டு மொத்த
தமிழகமே தண்ணீர் பஞ்சத்தை நோக்கி காட்டாற்று வெள்ளம் போல முன்னேற , எங்கள்
சிவகங்கைச் சீமை அதற்கும் ஒரு படி மேலே வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது .
ஆற்றுப்பாசனமோ , வாய்க்கால் பாசனமோ ஏதொன்றும் இல்லை . வானம் பார்த்த பூமி ,
இப்பொழுது வானத்தையும் பார்க்க முடியாததாகி தகிப்பது பெருங்கொடுமை . சிவகங்கை
மாவட்டத்தின் எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி தான் எங்கள் ஊர். தண்ணீர் வசதி
ஏதுமில்லாத போதும் , இயற்கையிலேயே அமைந்த மலைகளும் , அதிலிருந்து வரும் ஊற்றுகளும்
, மூதாதையர்கள் நுட்பமுடன் அமைத்த ஒன்றை ஒன்று தொடர்புடைய குளங்களும் , ஊருணிகளும்
இது வரை காப்பாற்றியது .
மினரல் வாட்டரெல்லாம் வருவதற்கு முன்பே எங்கள் ஊர் தண்ணீர் அக்கம் பக்கத்து
ஊர்களில் மினரல் வாட்டர் கணக்காக விற்கப்பட்டது . பொன்னமராவதியிலோ ,
கொப்பனாபட்டியிலோ இல்லை அக்கம் , பக்கம் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள வீட்டில்
குடிக்க பூலாங்குறிச்சி தண்ணீர் தந்தார்கள் என்றால் , அவர்கள் கொஞ்சம் வசதி
படைத்தவர்கள் என்று அர்த்தம் . அனுதினமும் அதிகாலையிலும் , அந்தி மாலையிலும்
அக்காக்களும் , அண்ணன்களும் சாரை சாரையாக மிதிவண்டியில் ரப்பர் டியூபுடன் , பிளாஸ்டிக் குடங்களுடனும் தண்ணீர் சுமந்து
செல்வார்கள். முறையே வீடுகளுக்கும் , விற்பதற்கும் . இப்படி இருந்த ஊரில் இன்று
மினரல் வாட்டர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள் .
கேணிக் கயிறு , வாளியை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு , எங்கள் வீட்டு கிணற்றில்
மொந்து குளித்த நாட்கள் எல்லாம் போய் இன்று இரண்டு செட் கயிறு வாங்கி பிணைத்து
இறைத்துக் கொண்டிருக்கிறோம் . அப்படியே இறைத்தாலும் , வாளியில் வரும் தண்ணீரை விட
உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வை நீர் தான் அதிகமாக இருக்கின்றது . ஆடு ,
மாடுகளெல்லாம் அடிமாட்டுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது . வெயில் மழை
பொழிந்து கொண்டிருக்கின்றது.
பொதுவாக விவசாயம் தவிர வேறெந்த தொழிற் வாய்ப்பும் , வசதியும் இல்லாத தேய்ந்த
தென் மாவட்டமான எங்கள் மாவட்டத்தில் வீட்டுக்கொருவர் மலைசியாவிலோ, சிங்கப்பூரிலோ
கொண்டுவிற்கப் போயிருப்பார்கள் . என் உடன் படித்த நண்பர்களில் என்பது
சதவீதத்திற்கும் மேலே மேற்படி ஊர்களில் தான் வாழ்கிறார்கள் இல்லை
பிழைக்கிறார்கள் . இப்பொழுது இந்த நிலைமை
மாறிவிட்டது , வீட்டிற்கு ஒருவர் இல்லை இருவராகிவிட்டனர் . போகிற போக்கில் ஒட்டு
மொத்த சிவகங்கை மாவட்டமும் சிங்கைக்கோ , மலைசியாவிற்கோ புலம் பெயர்ந்தாலும்
ஆசார்யப்படுவதற்கில்லை .ஆனால், அப்பொழுதுகூட எங்கள் தொகுதி மாண்புமிகு ஏதோவொரு
கிராமத்தின் ATM ஐ திறந்து கொண்டு, இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது என்பார் .
வைரமுத்து சொன்ன தண்ணீருக்கான மூன்றாம் உலகப்போர் வரும் தலைமுறையில் அல்ல ,
நம் தலைமுறையிலேயே வரப்போகின்றது . வெகுவிரைவில் , நீங்களும் , நானும்
தண்ணீருக்காக கட்டிப் புரண்டு சண்டை போடப்போகின்றோம் .
திரையரங்குகளில் காண்பிக்கப்படும்
“நான் தான் முகேஷ் “ என்ற விளம்பரப் படத்தில் புகையிலைக்குப் பதிலாக
தண்ணீரையும், பாடப் புத்தகங்களில் தீண்டாமைக்குப் பதிலாக விளை நிலங்களை , விலை
நிலங்களாக்குவது ஒரு பாவச் செயல் என்று போடும் நாள் வந்துவிட்டதென்றே
நினைக்கின்றேன் . அரசுகளையும் , அதிகாரிகளையும் குறைசொல்வதை விட்டுவிட்டு , ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் தண்ணீரின்
அவசியத்தையும் , முக்கியத்துவத்தையும் உணர்ந்தாலொழிய தண்ணீருக்காக சிந்தப்போகும்
செந்நீரை யாராலும் தடுக்கவோ / தவிர்க்கவோ முடியாது
நீ எதிர் பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்தே ஆரம்பி என்று சொல்வார்கள் .
அதன்படி , என்னால் முடிந்த அளவு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும்,
மக்காத பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் பைகளையும் , கட்டை பைகளையும்
பயன்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்து அதன்படி நடக்க ஆரம்பித்துள்ளேன் . கண் கெட்ட
பிறகான சூரிய நமஸ்காரம் தான் ... கண்ணோடு போகட்டுமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு
.
செலவழிக்கும் ஒவ்வொரு அதிகபட்ச தண்ணீர் துளியும் , தண்ணீர் கிடைக்காமல் நாக்கு,
நாடி, நரம்பெல்லாம் வறண்டு போய் மாண்டு போன யாரோ ஒருவருடைய செந்நீர் என்றும் . பிளாஸ்டிக் பைகளை கைகளில் தொடும்போதெல்லாம் ,
தண்ணீர் இல்லாமல் மாண்டு போன ஒரு குழந்தையின் சடலத்தை தொடுவது போலவுமே உணர்வதாக
கற்பிதம் செய்து கொள்கின்றேன் நான் . நீங்கள் ......?
நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா
....!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .