Jan 15, 2017

பேசாத வார்த்தைகள் : 15.01.2017 - ஆயிரங்கால் மண்டபம்




ஆயிரங்கால் மண்டபம்

புது வருடத்தை புத்தகத்துடன் தொடங்கலாம் என்ற நல்லெண்ணத்தின்பால் அருகிலுள்ள கிளை நூலகத்தினை அணுகினேன். நூலகங்களில் புத்தகம் தெரிவு செய்வதற்கு ஒரு தனித்திறமை தேவை . அது எமக்கு இன்னமும் கைவரப்பெறவில்லை. பகுதி புத்தகங்கள் அரசியல் புத்தகங்களாகவும் , மிகுதி புத்தகங்கள் அரசியலால் வந்த புத்தகங்களாகவும் இருக்கிறது .

நூலகப் பணி நேரம் முடியும் நேரம் அது  , பகுதி நேரப் பணியாளர் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தார் . சிக்னல் போடுவதற்கு பத்து நொடிகள் இருக்கும் போதே வண்டியை எடுத்து விடவேண்டும் இல்லையேல் , ஒலி எழுப்பியே நம்மை ஒழித்துவிடுவார்கள் . கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தேன் . பணியாளர் ஓங்கி அறைந்தார் சன்னலை . கண்ணை மூடி , கண நேர இங்கி பிங்கியின் முடிவில் ஜெயமோகனின் ஆயிரம் கால் மண்டபத்தினை தெரிவு செய்து நீட்டினேன் . நூலக அம்மையார் என்னை வெளிறிய முகத்துடன் வெளியேற்றினார் .

ஆறு வருடங்களில் வெவ்வேறு பத்திரிகைகளிலும் , இதழ்களிலும் ஜெமோ அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு . 1999  ல் அகரம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட  புத்தகம் . 2017 , சனவரி முதல் தேதி , மிகச்சரியாக பன்னிரெண்டு மணிக்கு முகநூல் நிலைத் தகவலுடனும் , ஆண்டவன் கருணையால் , அவ்வளவு எளிதில் விரும்பிடாத நான்கு ஜீவன்களின் விருப்பக்குரியுடனும் முன்னுரையை தொடங்கினேன் . நம் புத்திக்கு இரண்டு பத்திக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை.

வேலைக்கு சேர்ந்த புதிதில் எப்பாடுபட்டாவது ஆங்கிலதில் புலவராகிவிடவேண்டும் என்ற சபத வெறியில் ஆங்கில இந்து பத்திரிக்கை வாங்கி , அதுவும் சொந்தக் காசில் வாங்கி பத்தி பத்தியாக பாத்தி கட்டிய நினைவுகள் வந்து போயின . ஒரு பத்தி வாசித்து அர்த்தம் விளங்குவதற்குள் பத்து பதினைந்து முறை அகராதியை புரட்டிப் பார்த்து ஓய்ந்த நாட்கள் அவை . இப்போது புத்தகத்தை வேலைக்காகாது என்று மூடி வைக்கவும் மனமில்லை . புத்தாண்டின் ஆரம்பமே அரைகுறையாக இருப்பது அபசகுனமல்லவோ...!

அர்த்தம் , அகராதியை எல்லாம் ஓரங்கட்டி விட்டு கதைக்குள் நுழைந்தேன் . முதல் கதை புத்தகத்தின் தலைப்பை தாங்கி வரும் “ஆயிரங்கால் மண்டபம்” . செண்பகக் குழல் வாய் மொழி என்னும் சிறுமியின் பார்வையில் சித்திக்குட்டி என்ற பெண்ணின் மீது நடத்தப்படும் மண வன்முறையை சொல்லிச் செல்கிறது . மனிதர்களின் மனம் எவ்வளவு கல்லாக இருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக சித்திக்குட்டி கற்சிலையாகிவிட்டார் என்று புரிந்து கொண்டேன் . கதையின் முதல் பத்தியில் வரும் மண்டப விவரணையில் மனம் லயித்து ஒரு சுகானுபவத்தை உணர முடிகின்றது .

அடுத்ததாக , “தேவகி சித்தியின் டைரி” . கட்டிப்பெட்டித் தனமான ஒரு குடும்பத்தில் திருமணமாகியிருக்கும், சுயமாக சிந்திக்கும் , சம்பாதிக்கும் திறமையுள்ள ஒரு பெண்னின் சுய விருப்பு, வெறுப்புகள் எவ்வாறு அவர் வாழ்வை புரட்டிப்போடுகின்றன என்பதினை விவரித்திருக்கிறார். மேற்படி கதையை வாசிக்கும் போது சமீபத்தில் படித்த ஒரு நிலைத்தகவல் நினைவிற்கு வந்தது .

ஓர் அவசர வேலை நிமித்தம் தனது வயோதிக தாயாரை தொடர் வண்டியில் வழியனுப்பச் செல்லும்  ஒரு மகன் மற்றும்  தாய்க்கு இடையேயான உரையாடல் அது . முன்னேற்படில்லாத பயணம் என்பதினால் தாயை , பெண்கள் பெட்டியில் ஏற்றி விட முயற்சிக்கிறார் மகன் . தாய், வேண்டாமென மறுத்து பொது பெட்டியிலேயே ஏற்றி விடச் சொல்கிறார். காரணம் கேட்ட மகனிடம் பின்வருமாறு கூறுகிறார் .

எவளும் எடம் தரமாட்டாளுகப்பா ....!

அடுத்து “ஒன்றுமில்லை” கதை . எளிதில் விளங்கக்கூடிய , நடைமுறைத் தமிழில் உள்ள ஒரு சிறு கதை . அதீத நம்பிக்கை வார்த்தைகள் தாம் சமயங்களில் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன என்ற பொருள் படும் கதை . 

சாதரணமான கருதிய ஒன்று எப்படி அசாதரணமாக மாறுகின்றது என்பதினை கருவாகக் கொண்ட மருத்துவம் சார்ந்த புனைவு. அதில் இப்படி ஒரு வரி வருகிறது , அனேகமாக எலோருக்கும் இந்த வரிகள் வாய்த்திருக்கும் அல்லது வாய்க்க விரும்பியிருப்போம்.

“வலியில்லாத , மரண பயமில்லாத , நோயாளியாக இருப்பது போல ஆனந்தமான விஷயம் இன்னொன்று இல்லை . கவனம் , பிரியம், ஆதரவு ஆகியவற்றுக்குப் பாத்திரமாக அதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் வேறு இல்லை .”

அடுத்தது , “வெள்ளம்” . கனவுக்குள் கனவு போல ஒரு கதை என்று வாசித்து முடித்ததும் நானாக முடிவு செய்துகொண்டேன் . வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மூச்சு திணற ஆரம்பித்துவிட்டது . வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கூட இந்த அளவிற்கு மூச்சடைத்திருக்குமா என்பது சந்தேகமே . ஏ.டி.எம். வரிசையைப் போல வாக்கியங்கள் நீண்டு கொண்டே போவது அயற்சியை அதிகரிக்கின்றது . ஒரு வழியாக வாசித்து முடித்த போது சுழலில் சிக்கி மீண்ட அனுபவம் . சர்வ நிச்சயமா எனக்கு புரியவில்லை இருந்தாலும் வாசித்து முடித்தேன். ஒரு வேளை பிறிதொரு நாள் , மீள் வாசிப்புக்கு உட்படுத்தும்போது நம் வாசிப்புத் தரத்தினை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் நாலைந்து கதைகள் பாக்கியிருக்கின்றன அது அடுத்த பதிவில் .


என்றென்றும் புன்னகையுடன் ☺
ஜீவன் சுப்பு .



Jan 13, 2017

பேசாத வார்த்தைகள் – 23*01*2015 – வருஷப் பழசு ..!



பேசாத வார்த்தைகள் 23*01*2015 – வருஷப் பழசு ..!

ஷிப்மெண்ட் , டார்கெட் , ஓவர் டைம் ன்னு மெசின் லைஃப் வாழ்ந்திட்டு இருக்குற திருப்பூர்ல இருந்து, எப்பிடி இவ்வளவு பேரு சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்குறாங்க ....? வருடங்களுக்கு முன்பு ஆச்சர்யப்பட்டு கேட்டமுந்தைய நிறுவன GM ன் கேள்விக்கு இப்பொழுதுதான் காரணம் உணர்ந்தேன் . ஸ்ட்ரெஸ்............! வாழும் கலைக்கும் , வேதாத்ரிக்கும், ஈஷா யோகத்திற்கும்  மிக அதிகமான கிளைகளும், தேவையும் உள்ள ஒரே ஊராக திருப்பூர் இருப்பதிலிருந்தே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம் அழுத்தத்தின் வீரியத்தை.


திருப்பூர் மாதிரியான 24 * 7 தொழில் நகரவாசிகளுக்கான, மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் சோஷியல் மீடியாதான் . அலுவலகம், குடும்பம் என கமிட்மென்ட்களுக்கு நடுவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் தனிநபரின் சுயத்தை சற்றேனும் தாங்கிப்பிடிப்பதில் ப்ளாக் , Facebook போன்ற மீடியாக்களின் பங்கு அதிகம்.


அண்மையில் அலுவலக நிமித்தம் வேறொரு நிறுவன மேலாளரிடம் தொலைபேசிக்கொண்டிருந்தேன் . பேச்சு பர்சனல் ஆக திரும்பியபொழுது சொந்த ஊர், குடும்பத்தை பற்றி விசாரித்தவர் காரைக்குடி ஏரியா என்று சொன்னதும் வரிசையாக கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார் . எப்டி சார் இவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரியும்னு கேட்க நினைத்த தருணம் அவரே , திருப்பூர் எழுத்தாளர் ஒருத்தர் உங்க ஊர் அருமை பெருமையெல்லாம் எழுத்திட்டு இருக்காரு நான் வருசமா படிச்சுட்டு வர்றேன்ன்னு சொன்னார். யாரு சார்…? ஜோதிஜியான்னு கேட்டதும் அப்டியே ஷாக்காயிட்டார். அட...! உங்களுக்கு ப்ளாக் பத்திக்கூட தெரியுமான்னு ஆச்சர்யப்பட்டவரிடம் ,நம் இலக்கியத் தொண்டைப்பற்றி தொண்டை அடைக்க அடைக்க சொன்னதோடு இல்லாமல்குறுஞ்செய்தியாக நம் இலக்கிய விலாசத்தையும் அனுப்பிவைத்தோம்.


அடுத்த ஒரு வாரத்திற்கு அவரிடமிருந்து அழைப்பே இல்லை , சரி பல்ப்பு வாங்குறதுன்னு முடிவாகிடுச்சு, இனி அவரா கொடுப்பாருன்னு எதிர்பார்க்காம நாமளே வாண்டடா வாங்கிக்கலாம்னு அழைத்தால் அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. Felt that வட போச்சே மொமென்ட். ஆர்டர ஆன் டைம்க்கு கொடுக்காட்டியும் , வேலைக்கு ஆப்பு வைக்காம பினிஷ் பண்ணிக்கொடுத்திட்டு இருக்கும் ஒரே ஒரு சப்ளையரையும் சொந்த செலவுல சூன்யமாக்கிட்டோமேன்னு நினைத்தமாத்திரத்தில் , அவரிடமிருந்து அழைப்பு ....! ஆங்...! ஒங்க பிளாக்க பார்த்தேன்... பிளாக் நல்லாருக்கு, அந்த சைடுல கொடுத்துருக்க லிங்க் எல்லாம் சூப்பர் .... பாட்டு படமெல்லாம் கூட நல்லாருக்கு ....! அம்புட்டுத்தேன்...கடசி வரைக்கும் நம்ம இலக்கிய சேவையை பற்றிய ஒரு சிறு விமர்சனம் கூட இல்லை ....! U Know …? He is a Gentleman.


மேற்படி மேலாளருடனான பிறிதொரு சுமூகமான உரையாடலில் , என்ன சார் என் எழுத்தப்பற்றி எதுவுமே சொல்லலையே என்று வினவினேன் . காமிடியா எழுதுறீங்க ( உ.கு- நீ எழுதறதே  காமிடிதாண்டா),, ஆனா ஒன்னும் செழுமையா இல்லையே ,  கருத்து செறிவா எழுதுங்கன்னு சொல்லி, சொல்லாமாலேயே முடித்துக்கொண்டார் உரையாடலை . எனக்கும் கருத்து செறிவா எழுதனும்னு ஆசைதான் ,  என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன் .. வரமாட்டீங்குதே ....! என்னதான் தலைய சொறிஞ்சாலும் முடி கொட்டுற அளவில் பாதிகூட கருத்து கொட்டமாட்டீங்குதே ...!


ஆங்..! முடின்னதும் ஞாபகத்திற்கு வருது ...! இப்பல்லாம் முடி உதிர்தல் அப்டிங்குற பதமே வழக்கொழிந்து விட்டது. ஆமா…!முடி கொட்டுதல் தான் இப்ப ட்ரெண்ட்...! ச்சும்மா கொத்து கொத்தா கொட்டுது . அந்த அளவு வாட்டர் பொல்யூசன் . எல்லா ஊர்லயும் வாட்டர்ல பொல்யூசன் இருக்கும் , ஆனா, நம்ம திருப்பூர்ல பொல்யூசன்லதான் வாட்டரே இருக்கு . முன்பு மாதம் ஒருமுறை சலூன்போனவன் , இப்பொழுது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போகிறேன். அநேகமாக அடுத்த வருடம் சைடு ஒதுக்கத்தான் சலூனுக்கு போவேன்னு நினைக்கிறேன்.L. அடுத்த வீட்டு ஆன்டி சொன்ன டிரடிசனல் சீயக்காய் லருந்து , அமேசான் காடுகளில் தயாராகும் எர்வொமேட்டின் வரை ட்ரை பண்ணியாச்சு ... ம்கூம்.. எருமமாட்டுல பெஞ்ச மழை மாதிரி ,நோ ரிசல்ட் . எட்டுப்புள்ளி கோலம் போடுற அளவுக்கு முன்நெற்றிமுன்னேறியதுதான் மிச்சம்.


போதாதற்கு இந்த சலூன்காரர்கள் பண்ணும்  அட்டகாசம் ஆகப்பெரிய கொடுமை ...மூனே முடி இருந்தாலும் குறைந்தது  100  வசூலிக்கின்றார்கள். என்ன கொடுமை சார் ...? சமீபத்தில் ஒரு சலூன் விளம்பரம் பார்த்தேன் , நாடெங்கிலும் கிளைகள் கொண்ட சங்கிலித் தொடர் சலூன் ஒன்றின் விளம்பர பதாகை அது .  ஆடி ஆஃபர் ...! கெட் 500 டிஸ்கவுன்ட் ஆன் எனி சர்வீஸ். முதலில் ஒன்னும் தோணலை கொஞ்சம் தூரம் வண்டி நகர்ந்தபின் தான் அந்த டவுட் வந்ததது. அடங்கொக்காமக்கா...! டிஸ்கவுன்ட்டே 500 ரூவான்னா , அப்ப பில் எவ்ளோடா பண்ணுவீங்க. ஒருவேள முடிய நடுவாய்ங்களே அதுக்கா இருக்குமோங்குற டவுட்டுல ரிவர்ஸ் போய் பாத்தேன், இல்ல முடிய வெட்டுரதுக்குத்தான் போட்ருக்காய்ங்க. சரி அப்டி என்னத்ததான் பண்றாய்ங்கன்னு தெரிஞ்சுக்க போன் போட்டா . ஒரு யுவதி ஆங்கிலத்தில் கட்டண விவரத்தை சொல்லி  அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணட்டான்னு குழைந்தாள்(ர்). நான் நிலை குலைந்தேன் .....! நீங்கல்லாம் நல்லாவருவீங்க யுவர் ஆனர்.


மொத வேலையா செல்ப் கட்டிங் பண்றது( நோ..... நோ ... போடுரதில்ல. பண்றது... பண்றது...) எப்டின்னு யூ டியூப்பில் தேடவேண்டும் .


அடுத்த பதிவில் எழுத்தாளர் தாமிராவின் –“பர்வதமலையில் ஒரு ராஜகுமாரி”பற்றியும், PK ப(பா)டம் பற்றியும் செழுமையான நடையில் , செறிவான கருத்துகளுடன் உங்களை சந்திக்கிறேன்.


பிகு : போகிப் பண்டிகையை முன்னிட்டு இரண்டு வருடங்களாக ட்ராப்டில் இருந்த பழைய கழிதல் பதிவிது . இனி புதியன புகலாம் .



என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு