May 29, 2017

பேசாத வார்த்தைகள் : 280517 – ஒரு புத்தகம் ; இரண்டு படம் ; மூன்று பாடல்.


ஒரு புத்தகம் : சுஜாதாவின் “வானில் ஒரு மவுனத்தாரகை”.

ஜெமோவின் ஆயிரங்கால் மண்டபத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து முழுதாக ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. அதன் பிறகு நூலகத்தை எட்டாமல் கூட   பார்க்கவில்லை. போன வாரம் சந்தைக்கு போயிருந்தபோது நூலாக அம்மையாரிடம் வசமாக சிக்கிவிட்டேன். ஆயிரங்கால் மண்டபத்தை தடவிக் கண்டுபிடித்து கொண்டுசேர்த்தேன். பத்து ரூபாய் அபராதம் .

சுஜாதா புத்தகம் ஏதேனும் உண்டுங்களா என்று வினவியவனுக்கு சுட்டு விரலை நீட்டினார் . இரண்டு நாடகங்கள் , ஒரு கேள்விபதில் மற்றும் ஒரு சிறுகதை நான்கையும் கொண்டுபோய் நீட்டினேன். புது புஸ்தகம் என்று சொல்லி ஒன்றை மட்டும் இரவல் ஏட்டில் குறித்தார் . மேடம், நாலும் வேணுமே தரமாட்டீங்களான்னேன் . நிமிர்ந்து பார்த்தார் . எதுவும் பேசவில்லை . சந்திரமுகி படத்தில், ரஜினி வடிவேலுவைப்பார்த்து சொல்லும் “முருகேசா” வசனத்தை மனதிற்குள் நினைத்திருக்கக்கூடும்.

சுஜாதா எழுதிய புத்தகத்தை வாசித்ததை விட சுஜாதாவைப் பற்றி சிலாகித்து எழுதியததைப் படித்ததுதான் அதிகம். சுஜாதா எழுதியதில் நான் ஒரே ஒரு புஸ்தகத்தை மட்டுமே வாசித்திருக்கிறேன் ( அனிதா or நைலான் கயிறு ) . ஷோசியல் மீடியாவில் சுஜாதாமேனியா அதீதம். சுஜாதைவை பிடிக்கும்னு சொல்றதும் ; பேசுறதும் ; எழுதுறதும் தேய்வழக்கு என்று சொல்வது கூட தேய்வழக்கு தான்.

இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த ரெஸ்யூம்களையும் நீங்கள் பார்த்தீர்களேயானால் ஒரு விசயம் பொதுவாக இருக்கும் . அது .., Hobby – Hearing Music. போலவே சுஜாதா பிடிக்கும்னு சொல்றதும். வருடங்களுக்கு முன் வீட்டுக்காரம்மாவை ஒரு நேர்முகத்தேர்வுக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன் . ரெஸ்யூமை வாசித்த தேர்வர், எந்த மியூசிக் பிடிக்கும்னு கேட்டிருக்கிறார் . இளையராஜாவை சொல்லியிருக்கிறார் அம்மிணி. ஓக்கே அவரின் சமீபத்திய ஆல்பம் பெயர் என்ன , நீங்கள் விரும்பி கேட்கும் பாடல் எது ... ஏன் ...? அவ்வளவுதான் கேள்வி. ஐடி கம்பெனில அடிமாடாய் வேலைக்கு சேர்வதற்கும் இந்தக் கேள்விக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்கலாம்தான். பதிலுக்கு திருப்பி , உனக்கு பிடித்த விசயத்திலேயே நீ அப்டேட்டா இல்லையே, பணத்துக்காக குப்பை கொட்டப்போற விசயத்திற்கா நீ அப்டேட்டா இருக்கபோறன்னு கேட்டா ...?

சுய அனுபவம் ஒன்றும் உண்டு . அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு புதிதாக ஒரு லேடி புரொபசர் வந்து சேர்ந்தார் . அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் கன்சர்வேட்டிவ் புரோபசர்கள் தான் அதுவும் நாற்பது பிளஸ் வயசுகளில் . எங்களுக்கு வந்திருந்தவருக்கு முப்பதுக்குள்தான் . அடுத்த டிப்பார்ட்மென்ட் பசங்களுக்கேல்லாம் சகலதுவாரங்களில் இருந்தும் புகையுடன் கூடிய தீ. முதல் அமர்வில் , பரஸ்பரம் அறிமுகம். ஒவ்வொருவராக அறிமுகப்படுதிக்கொண்டோம் . கவனம் கவரும் நோக்கில் அவனவன் அடுத்தவன் ஹாபிசை எல்லாம் அடித்துவிட்டான்கள். நானும் விட்டேன். பாலகுமாரன் , ஓஷோ புத்தகங்கள் பிடிக்குமென்று . எல்லோர் சொன்னதையும் தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தவர் என்னிடம் மட்டும் இரண்டு கேள்விகள் கேட்டார் . சமீபத்தில் பாலகுமாரனின் எந்த புத்தகத்தை வாசித்தீர்கள் , கதையைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் . இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அப்புறம் எப்படி கடைசியா படித்ததை சொல்லுவது . மென்று முழுங்கி , நெளிந்து மறந்துட்டேன்னு சொல்லி உட்கார்ந்தேன் . ஒருத்தர இம்ப்ரஸ் பண்ணப்போயி ஒட்டு மொத்த கிளாஸ்க்கு முன்னாடியும் பல்ப்பு. வாலி படத்துல தல சொல்ற மாதிரி, தெரியாதத தெரியாதுன்னுதான் சொல்லனும்னு பட்டறிந்த தருணம்.

ஓக்கே. கம் டு சுஜாதா. நான் பிறந்த வருடத்தில் , வார , மாத இதழ்களில் அவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு . அப்பவே ஏகப்பட்ட ஆங்கில நெடி . முதல் கதையான “வானத்தில் ஒரு மவுனத்தாரகை” கதை தான் புத்தகத்தின் தலைப்பும் கூட . முதல் கதை அறிவியல் | விஞ்ஞானம் வகையறா. மெதுவாக ஆரம்பித்து ஜிவ்வென்று பறக்கின்றது. அடுத்தடுத்த கதைகளில் சில சினிமாத்தனம் சில அட வகையறா. தேனிலவு என்ற கதையில் கீழ்வரும் பத்தி ஒன்று .

“ ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். மற்றொரு கை அதை விலக்கி ‘ஏதாவது பாட்டுப் போடுங்களேன்” என்றால் சோபனா. அவன் காருக்குள் இருந்த காசெட் ரிகார்டரை தட்ட கீச்சுக் குரல் ஒலித்தது.”

வாசித்துக் கடந்த பின் அடுத்த பத்தியில் ,  இரண்டாவது முறையாக ரவியின் இடக்கை மறுபடியும் அவளை நாடியதுன்னு போட்டிருந்ததை பார்த்தவுடன் மனம் சடன் பிரேக் போட்டது, யோசித்தேன், அப்ப மொதல்ல எப்ப என்று. ரிவர்சில் போய் படித்துணர்ந்தேன். கிளுகிளுப்பான ஒரு பத்தியில் உள்ள விசயத்தையே முழுமையாக உணரமுடியவில்லையே, நாமெல்லாம் எப்போ குறியீடுகள் அடங்கிய மிகுபுனைவு புதினத்தை பின் நவீனத்துவ பாணியில் படைப்பது. எண்ட குருவாயூரப்பாவ்....!

சுஜாதாவே கூறியுள்ளபடி தேனிலவு, ஜன்னல், அரங்கேற்றம் மூன்றும் சிறப்பு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு படம்.

ஆனந்தம் – மலையாளம்.








முதலாமாண்டு கல்லூரி மாணவர்களின் இன்டஸ்ட்ரியல் விசிட் தான் படம்.  மொத்த மாணவர்களில், அறுவர் அடங்கிய ஒரு குழுவின் நடவடிக்கைகளை கொண்டே நகர்கிறது IV & படம் . குழுவில் ஒரு காதல் ஜோடி , ஒரு முக்கோண காதல் ஜோடி , மற்றும் இரண்டு தனியர்கள். மாணவர்களின் கங்காணியாக பாலினத்திற்கு ஒருவர் வீதம் இரண்டு புரபசர்ஸ் . (அதென்னப்பா மலையாளப் படங்களில் சித்தரிக்கப்படும் ஆண் புரபசர்ஸ் எல்லோரும் முன்வழுக்கையுடனேயே இருக்கிறார்கள் . சேட்டன்கள் தேங்காய் சேர்ப்பதில்லையோ..?)

பயணம் போகிற பாதையில் கூட எந்த ஒரு திருப்பமும் இல்லை . முதலில் கெம்பி அதைத்தொடர்ந்து கோவா இதுதான் IV இன் ஸ்பாட்ஸ். அறுவருக்குள் நடக்கும் சம்பாஷனைகள், சேஷ்டைகள் , குறும்புகள் , கோபம் தாபம் இதெல்லாம் தான் படம். துள்ளுவதோ இளமைக்கு வாய்ப்பிருந்தும் இளமையை துள்ளவிடவில்லை. இன்றைய தேதிக்கு இதை “நீட்” மூவி என்று சொல்லமுடியாதுதான். பட்சே Neat மூவி. பக்கா வெஜிடேரியன் . நான் வெஜ் பிரியர்களை திருப்திப்படுத்தும் விதமாக மீன் மேக்கர் போல , ஆங்காங்கே சோமபானங்களுடன் கூடிய டிஸ்கோதேக்கள் , ஆதுரமான அரவணைப்புகள் , தழுவல்கள் ஒன்றிரண்டு இதழ் ஒத்தடங்கள்கூட உண்டு. படம் பார்த்தவுடன் தோன்றிய ஒன்று வாழ்கையில் ஒரு முறையாயினும் கெம்பி மற்றும் கோவா சென்று இரவாட்டங்களை கண்டுகளிக்கவேண்டும் என்பதே.

“வெகுதூரம் போகும்போது சேர்ந்தே போங்கள் “ . “ பொறுப்புகள் , கடமைகள் எல்லாம் முடிந்தபிறகே சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைசி வரை அது முடியாது . ஏனெனில் வாழ்வின் கடைசி நொடி வரையிலும் பொறுப்புகளும்  , கடமைகளும் துரத்திக்கொண்டே தானிருக்கும்”. போகிறபோக்கில் ஆங்காங்கே வருகின்றன வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.



அனுராக கரிக்கின் வெள்ளம் – மலையாளம்.

படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை . சிம்பிள் ஸ்டோரி பட்சே ஃபீல்குட் ஸ்க்ரீன்பிளே. ஆஷா சரத்தை தவிர வேறெந்த நடிகரையும் யான் அறிஞ்சில்லா .  ஆஷா சாரத் ஆசம் ஆக்டிங். அதுவும் உதடு மடித்து கண்களால் சிரிக்கும்போது மனதை மொத்தமாக களவாடுகிறார் . இளவயதில் கதாநாயகியாக ஏதும் நடித்திருக்கிறாரா என்று கூகிளிடத் தோன்றும் தோற்றம் & நடிப்பு . ஹீரோயின் குரலும், சிரிப்பும் குல்பி . “ஹீலிட்டா ரெண்டு இஞ்சு கூடிடும் ஆண்டி” என்று காதலனின் அம்மாவான ஆஷா சரத்திடம் கொஞ்சிக் கெஞ்சும்போது நாம் உருகிப்போய்விடுகிறோம் . கண்களாலே நடித்து கவனம் ஈர்க்கும் ஹீரோவின் தங்கையாக வருபவர் இன்னும் சில வருடங்களில் கதாநாயகியாக மிளிர்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு தென்படுகிறது. ஹீரோவின் மெக்கானிக் நண்பனை மகேஷிண்ட பிரதிகாரத்தில் பார்த்த நினைவு . சிரிப்பில் –சிறப்பு . படம் நெடுக மிதமான ஒப்பனையில் வெகு இயல்பாக வலம் வரும் கதாநாயகிக்கு கிளைமாக்சில் , மேக்கப் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உதட்டுக்கு ஈயம் பூசியது போல சாயம் பூசி அழ வைத்தது எல்லாம் வன்மம். ஜனரஞ்சக ரசிகருக்கு அஜீரணமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் எதார்த்தம்  லவ்லி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மூன்று பாடல்

மறு வார்த்தை பேசாதே – என்னை நோக்கி பாயும் தோட்டா

இசை , புயலா இல்லை தழுவல் இளவரசரா என்று தெரியவில்லை . பாடல் தாமரையாகத்தானிருக்கும். “பிடிவாதம் பிடி , சினம் தீரும் அடி” –காதலியின் செல்லச்  சிணுங்கல் போல வரிகள். சித் ஸ்ரீராம் குரலில் கேட்ட சில பாடல்கள் எல்லாமே ரோலர் ஹோஸ்ட் பயணம் போலத்தான். உச்சஸ்த்தாதியில் ஆரம்பித்து சடாரென கீழிறங்கி மயிலிறகாய் வருடுவார். மேற்படி பாடலில் அது கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது . கண்ட்ரோல்டு சிங்கிங் . பாடல் வரிகளின் விகுதியில் ஸ்ரீராம் கொடுக்கும் மிகுதியான அழுத்தம் கேட்பதற்கு சுகம். பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை, சைவம் படத்தின் “அழகோ அழகையும்” , ஆரம்பம் முதல் முடியும் வரை தொடர்ந்து ஒலிக்கும் பீட்ஸ், நெஞ்சினிலே படத்தில் வரும் “மனசே மனசே குழப்பமென்ன” வையும் நினைவுபடுத்துகின்றன. இதற்குமேல் பாடலையும், இசையையும் ஸ்டான்ஸா ஸ்டான்ஸாவாக விவரித்து சிலாகிக்கும் அளவிற்கு நாம் இசையில் பண்டிதமில்லை.

காந்தாரி யாரோ – மகளிர் மட்டும்

ஜிப்ரான் இஸ் Back . வாகை சூடவா, திருமணம் எனும் நிக்காஹ் , களவாணி என்று ஜிப்ரான் செவி ஈர்த்த ஆல்பங்கள் வரிசையில் “மம”வும் நிச்சயம் இடம்பிடிக்கும் . ஜிப்ரான் ஸ்பெஷாலிட்டியே வித்தியாசமான இசைக்கருவிகளின் கோர்வைதான் . மேற்படி ஆல்பத்திலும்\ அது தொடர்கிறது. பத்மலதாவின் யூனிக் வாய்ஸ் தனி ஆவர்த்தனம். காந்தாரி, காதம்பரி , கடவுளின் துகள் என்று பாடல் வரிகளின் வார்த்தைகள் இதிகாச , விஞ்ஞான கலவையாக கவர்கின்றன. மதன்கார்க்கி...?

மனோகதம் பவான் – அனுராக கரிக்கின் வெள்ளம்.

பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து, வீடு விடுபட்டு வீதியில் வந்து வானையும், பூமியையும் பார்க்கும்போது, இரவு கரைந்து பகல் புலரும் அந்த அரவமற்ற பொழுது  எவ்வளவு ரம்மியமாக இருக்குமோ அவ்வளவு ரம்மியம் இந்த பாடல் . வசீகரிக்கும் பெண்குரோலோடு , மெஸ்மரிசம் செய்யும் ஆண் குரல் ஹரிச்சரன் . இசை இதம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.




May 8, 2017

திருச்சி – CONCLUSION..!


உணவகம் | சிற்றுண்டியகம்




திருச்சி மலைக்கோட்டை வாசலின் நேர் எதிர்த்தாற்போல உள்ள வீதியில் , இரவு பத்து மணிக்கு மேல திருவரங்கத்துக்காரர்கள் தள்ளுவண்டி உணவகம் நடத்துவார்கள். ஒன்றிரண்டு கடைகள் அல்ல ; சேர்ந்தார்போல இருபது , முப்பது கடைகள் . தயிர்சாதம் முதல் அக்கார வடிசல் வரை விதம் விதமாக, தரமான பதார்த்தங்கள்  மலிவான விலையில் கிடைக்கும் .  ஐந்து ரூபாய்க்கு ஒரு பதார்த்தம் என்று தட்டில் வைத்துத் தருவார்கள் . வகைக்கு ஒன்றாக நாலு தட்டு வாங்கி சாப்பிட்டால் திவ்யமாக இருக்கும். நள்ளிரவு வரை கூட்டம் தட்டேந்திக்கொண்டிருக்கும் அந்த வீதியை ,  மறுநாள் காலையில் பார்த்தீர்களேயானால் அசந்து போய்விடுவீர்கள் . சில மணி நேரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உணவு வியாபாரம் நடந்ததற்கான அறிகுறியாக ஒரு சோற்றுப்பருக்கையைக் கூட உங்களால் காண முடியாது . அவ்வளவு சுத்தம் . இபொழுதும் மேற்படி கடைகள் நடந்து கொண்டிருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

மலைகோட்டை தெப்பக் குளத்தின் அருகே உள்ள உணவகம் ஹோட்டல் ரகுநாத் . மேட்டுக்குடி மக்களுக்கானது ( ஹை கிளாஸ் வெஜ் ரெஸ்ட்டாரென்ட்!) . அவர்களது மலிவு விலை உணவகம் ஒன்றும் ஓரமாக இருந்தது . தற்போதைய அம்மா உணவகம் போல . சமையல், பதார்த்தங்கள் எல்லாம் ஒன்றே தான் . பரிமாறும் இடமும் அளவும் சிறியது. அப்புறம் மதியம் மட்டும் தான் மலிவு விலைச் சாப்பாடு . பதினைந்து ரூபாயோ இருபது ரூபாயோ கொடுத்ததாக நினைவு . அன்றைய நாட்களில் அங்கே தினமும் டோக்கன் வாங்குவதே எம் அன்றாட லட்சியம் . முக்கால் வயிற்றிற்குதான் போதுமானதாக இருக்கும் ஆனாலும் சுவை அலாதி.

அடுத்தது நம்ம ஏரியா . சிந்தாமணி கேண்டீன் . அரசு சார்ந்த உணவகம் , டெய்லரிங், ஜவுளி என்று வரிசையில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சிந்தாமணி அங்காடிகளில் உணவகமும் ஒன்று . புதிதாகப் போகிறவர்கள் கூகுள் இட்டால் கண்டுபிடிக்க முடியாது. கூட்டத்தின் கூச்சலைத் தாண்டும் அளவிற்கு கூக்குரல் இட்டீர்களேயானால் நடைபாதைக் கடைக்கார்கள் கை காட்டுவார்கள். பெரும்பாலான நகரங்களில் சிந்தாமணி சீந்தாமணியாகத்தான் காட்சி அளிக்கும் . ஆனால், திருச்சி விடிவிளக்கு. போளி , குழிப்பணியாரம் போன்ற இடைப் பலகாரங்கள் சுவையாகவும் , சல்லிசாகவும் கிடைக்கும் . அன்றைய நாட்களின் காலைகளில் சிந்தாமணியில் தான் கை நனைப்பேன் . இந்த முறை இரவில் போனபோது புரோட்டவும், குழிப்பணியாரமும் கிடைத்துண்டேன்.

மெயின்காட்கேட் நிறுத்தம் தாண்டி காந்தி மார்க்கெட் செல்லும் நேர் சாலையின் மத்திய நூலகம் அருகில் , கல்யாணி கவரிங் கடைக்கு வலதுபுறம் கற்பகம் ரெஸ்ட்டாரென்ட் என்று ஒன்று உண்டு . இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருகின்றது. வேலை பார்த்த கடைக்கு நேர் பின்புறமாக அமைந்திருந்தது . கடையில் இரண்டு வேளையும் கொடுக்கும் தேநீரைத் தவிர்த்து அதற்குண்டான காசை கையில் பெற்றுக்கொண்டு கற்பகத்தில் மாலை வேளைகளில் காஃபி சாப்பிட்டதுண்டு. கற்பகம் காஃபிக்கென்றே பிரத்யேக ருசியுண்டு . குறிப்பாக கண் முன் காஃப்பிக் கொட்டையை அரைத்து சுடச்சுட டவரா செட்டில் போட்டுத்தரும் காஃபியின் ருசி அடுத்த நாலைந்து மணி நேரங்களுக்கு உங்கள் நாவில் நிலைத்திருக்கும் . பாலைத்தொட்டு பொட்டு வெச்சுக்காலம் என்று கிராமங்களில் பாலின் கெட்டிதன்மைக்கு ஒரு உதாரணம் சொல்வார்கள் . போலவே கற்பகம் காஃபியும் .

மைக்கேல் ஐஸ்கிரீம் பார்லர் . திருச்சியினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற வெயில் நகரத்தின் COOL DESTINATION. மெயின்காட்கேட் அஞ்சலகத்தின் அருகில் கடை . கண்ணாடித் தடுப்புகள், குளிரூட்டப்பட்ட அறை , மெல்லிய இசை , வண்ணம் பூசப்பட்ட சுவர்களின் , வாய்களில் ஐஸ்கிரீம்கள் வழிய செயற்கைப் புன்னகையுடன் கூடிய விளம்பரக் குழந்தைகளின் போஸ்டர் என்று   ஐஸ்கிரீம் பார்களுக்கென்று உள்ள எந்தவொரு உள்கட்டமைப்புகளோ , அலங்காரங்களோ இல்லாத ஒரு பனிக்கூழகம் . இருபது நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் போடப்பட்டிருக்கும் டீக்கடை டைப் மர பெஞ்ச் , ஐஸ்கிரீம் பெட்டிகள் அவ்வளவே . நிற்பதற்கு இடமில்லாமல் மக்கள் நாக்கைச் சொட்டிகொண்டு நடைபாதையிலே நிற்கிறார்கள் . நானும் போய் நின்றுகொண்டேன் . நின்று கொண்டே சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை . பத்துப் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் மர பெஞ்சில் இடம் கிடைத்தது . மொத்தமே எட்டு வகைதான் . குறிப்பாக வெரைட்டிகளின் பெயர் உச்சரிக்கும் வகையில் உள்ளது சிறப்பு. குறைந்தபட்ச விலை எட்டு ரூபாய் , அதிகபட்சம் பதினைந்து அவ்வளவே . பேமிலி பேக்கும் உண்டு. இருபது பேர் அமரக்கூடிய இடத்தில் மடிமீது ஒருவாரக சேர்த்து  நாற்பது பேர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார்கள். 

பரிசாரகரை கண்டுபிடிப்பது கூவத்தூரில் ஒளிந்திருக்கும் எம்.எல்.ஏ வைக் கண்டுபிடிப்பதை விட சிரமாமாக இருந்தது. தாவிப்பிடித்து கேசர் பாதமும் , பிஸ்தாவும் ஆர்டர் செய்தேன் . வகைக்கு ஒன்றாக சின்ன குழிக்கிண்ணங்கள் இரண்டில் கரண்டியுடன்  மேசை மீது வைக்கப்பட்டது. பொதுவாக ஐஸ்கிரீமை ஸ்பூன் பை ஸ்பூனாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள் . ஆனால் நமக்கு அந்தளவுக்கு பொறுமை இல்லை மேலும் மைக்கேல் பார்லரில் அது முடியாததும் கூட . கவுதம் மேனன் டைப்பில் நாம் சுவைத்துக்கொண்டிருந்தால் , நடைபாதையில் நிற்பவர்கள் ஹாட்டாகி நம்மை  கூழாக்கிவிடுவார்கள் . வேகமாகவே புசித்து ருசித்து வெளியேறினேன் . கேசர் பாதம் நல்ல சுவை . பிஸ்தா ஓக்கே. வகைக்கு ஒன்றாக நாலைந்து கிண்ணங்களை சுவீகரிக்கிறார்கள் மக்கள் . ரேபான் கிளாஸ் , அர்மானி ஜீன்ஸ் , அடிடாஸ் டீ சர்ட் என்று ஒரு மேட்டுக்குடி பிராண்டட் நபர் அருகிலேயே மேல் பட்டன் இல்லாத , தலை வாரத கேசத்துடன் ஒழுகிய மூக்கைத் துடைத்துக்கொண்டே ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தருண் விஜய் சொன்ன சகிப்புத்தன்மையை பிரதிபலித்துக் கொண்டிருந்தான் .

திருச்சியில் சூடு தலையில் இருந்து தரை வரை கொதிக்கின்றது . உக்கிரம் தாங்காததால் திருவரங்கம் , திருவானைக்கோவில், ஐயப்பன், கோர்ட் சித்தர் விசிட் திட்டத்தை கைவிட்டு திருப்பூருக்கு திரும்பியாயிற்று .


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு

May 4, 2017

பேசாத வார்த்தைகள் : திருச்சி ...!




பேசாத வார்த்தைகள் : திருச்சி ...!

இரண்டாயிரத்து இரண்டு மற்றும் மூன்றாம் வருடத்தின் சில மாதங்கள் திருச்சியில் குப்பை கொட்டினேன் . மலைக்கோட்டை எதிரில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்கியிருந்து எசன்ஸ் கடைக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன் . இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் கடையிலிருந்து சத்திரத்திற்கு போய்வர . ஒரு மிதிவண்டி , அதன் பிறகு எப்போதாவது ஒருமுறை திருச்சி போய்வருவதுண்டு பெரும்பாலும் அது சிலமணி நேரப் பயணமாகவே இருக்கும் .

பல வருடங்களுக்குப் பிறகு உறவினர் வீட்டில் இருக்கும் மனைவியையும், தர்ஷினியையும் பார்த்துவரும் பொருட்டு இரண்டு நாள் நிகழ்வாக பயணப்பட்டேன் திருச்சிக்கு . வழக்கம்போல ஜன் சதாப்”தீ” மிகச்சரியாக மூன்று மணி நேரத்தில் திருச்சியை அடைந்தது . அங்கிருந்து அரசுப்பேருந்தில், ஒருமணி நேர அக்னிப்பயணத்திற்கு பிறகு சமயபுரம் சென்றடைந்தேன் .

கடந்த கால நினைவுகளை ரீ-கலெக்ட் செய்யும் விதமாக , இரண்டு நாள் பயணத்தில்  சந்திக்க வேண்டியவர்கள்/ வேண்டிய இடங்கள் என்று ஒரு லிஸ்ட் வைத்திருந்தேன் . சமயபுரம் மாரியம்மன் , மலைக்கோட்டை பிள்ளையார், ஸ்ரீரங்கம் பெருமாள்  , சென்ட்ரல் ஐய்யப்பன் , வண்ணத்துப்பூச்சி பார்க் , கோர்ட் சித்தர் மற்றும் சில மைக்கேல் ஐஸ்கிரீம் பார்லர் உள்பட சில உணவகங்கள்/சிற்றுண்டியகங்கள்.

திட்டப்படி ஞாயிறு மாலை சமயபுரம் . ஆனால் , குழுமியிருந்த கூட்டத்தை பார்த்து மலைக்கோட்டைக்கு எடுத்துவிட்டேன் ஓட்டத்தை. சென்னை ரெங்கநாதன் தெருவிற்கு சவால் கொடுக்கும் விதமாக மலைகோட்டை NSB சாலை . ( ஆமா ..! NSB ன்னா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோடு தானே ..?) இதுபோன்ற நெருக்கடியான சாலைகளில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் மூச்சுதிணறலை, இருபுறமும் விரிந்திருக்கும் ஏதோவொரு ஜவுளிக் கடலின் கண்ணாடிக் கதவுகளின் வழியாக கசிந்துவரும் ஏ.சி காற்றுதான் ஆசுவாசப்படுத்தி உயிர் மூச்சை மீட்டுக் கொடுக்கிறது . பெரும்பாலும் ஜவுளிக் கடைகள்  எல்லாம் மாடி மேல மாடி வைத்து உயர்ந்துதானிருக்கும்  திருச்சி சாரதாஸ் மட்டும் பரந்து, விரிந்து அகண்டு இருக்கின்றது . கடல்களைக் கடந்து போய்கொண்டே இருந்தால் கடைகளோடு கடைகளாக கோவில் முகப்பு . புதிதாக போகிறவர்கள் கண்டிப்பாக கண்டுபிடிப்பது சிரமம்தான் .

தாயுமானவர் சன்னிதிக்கு வெகு சமீபத்தில் கும்பலாக மக்கள் செருப்பைத்தூக்கிக்கொண்டு நின்றார்கள் . நானும் நின்றேன் . நல்லவேளை காலணி காப்பாளர் ஆதார் அட்டை கேட்கவில்லை . காலணி காப்பகத்தின் நிலை வெகு பரிதாபம். பெட்டிக்கடைகூட வைக்கமுடியாத இடத்தில் நாறிக்கொண்டிருக்கிறது . சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலாம் . இல்லையெனில் அடிவாரப்பிள்ளையாரையே நம்மாட்கள் காவலுக்கு வைத்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது . பத்து நிமிட தவத்திற்கு பின் காலணி காணாமல்போகாது என்பதற்கான கேரண்டி கார்டை பெற்றுகொண்டு அடிவார விநாயகருக்கு உக்கி போட்டு , உச்சிப் பிள்ளையாருக்கு முக்கி போட ஆரம்பித்தேன் .

திருச்சியில் குப்பை கொட்டினேன் என்று சொன்னேன் அல்லவா , அப்பொழுதெல்லாம் தினமும் காலை குளித்து முடித்து மலைமீதேறி உச்சிப் பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன் . அதே நினைப்பில் தான் இப்பொழுதும் ஏறினேன் . படி ஏறத்துவங்குவதற்கு முன்பான சமதளத்தில் ஒரு தடுப்பு . உலோகத் துப்பறிவாளர் பீப்படித்துக்கொண்டிருந்தார் . எனக்கும் அடித்தார் . தொடர்ந்து கோவில் சிப்பந்தி பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் இருந்த ரசீதைக்  கிழித்து கைகளில் திணித்தார் . என்னவென்று வினவினேன் . கேமரா மொபைலுக்கு இருவது ரூபாய் கட்டணமாம் . நவீன கட்டணக் கொள்ளை(கை)யாக இருக்கிறது . இன்றைய தேதிக்கு பணியாரம் சுடும் பாட்டிகூட கேமரா மொபைல்தான் வைத்திருக்கிறது. 399 ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் கூட அதில் கேமரா வசதி இருக்கின்றது . போகட்டும் .

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மருதமலை , பழனி மலை  , சிவன்மலை படிக்கட்டுக்களை விட உச்சிப்பிளையார் மலைக்கோவில் படிக்கட்டுகள் குறைவுதான் ( தோராயமாக அறுநூறு படிகள்). ஆயினும் , மற்ற மூன்றைக்காட்டிலும் உ.பி மலை  சற்று சிரமம் . காரணம் குடவரைப் படிக்கட்டுகள். மற்ற மூன்றும் ஓப்பன் படிக்கட்டுகள் , அதிகாலையிலோ , மாலையிலோ போகும்போது இயற்கையோடு சேர்ந்து கொஞ்சம்  ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் . இங்கே அதற்கு வாய்ப்பில்லை . மூலவர் கர்ப்பகிரஹத்திற்குள் பிரவேசித்ததுபோலத்தான் . போதாதற்கு நிமிர்த்து வைத்த ஏணியை போன்ற படிகள் . முதல் சமதளத்தை அடைவதற்குள் பிரிட்டீஷ்காரன் இங்கிலீஸ் போல தஸ்புஸ் என்று நாக்கு தள்ளிவிட்டது . இன்னும் ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து மலை ஏறமுடியுமா என்பது மோடி அரசு பேங்கில் போடுவதாக சொன்ன பதினைந்து லட்சம் லட்சணம்தான்.

கிட்டத்தட்ட மலை ஏறுவது , பாதயாத்திரை போவது , நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சுவாமி தரிஷனம் செய்வது இதெல்லாம் கூட மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்வது போலத்தான். மூச்சு வாங்காமல் , முட்டியைப்பிடிக்காமல் , தரையில் அமராமல் , போற வர்றவர்களை வேடிக்கை பார்க்காமல்  உங்களால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சந்நிதியை அடைய முடியுமேயானால் நீங்கள் fit ஆக இருகின்றீர்கள் என்று அர்த்தம் .

உச்சிப்பிளையாருக்கு முன்பாக ஓர் அம்மன் சந்நிதி உண்டு . அங்கே, வெளிக்காற்று உள்ளே வரும்விதமாக இரண்டு இடங்களில் ஜன்னல் வைத்திருக்கிறார்கள் . ஜன்னலில் கொஞ்சம் முகத்தைக் கொடுத்து ஆக்சிஜனைப் பெற்றுகொண்டு மேற்கொண்டு நடையைக் கட்டினேன் . இப்பொழுது ஓப்பன் படிக்கட்டுக்கள் . வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்கும்விதமாக இடையிடையே சாமியானா பந்தல் போட்டிருக்கிறார்கள். நான் சென்றது இரவு நேரம். காற்று அசுர வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது. பலத்த காற்றில் பறந்த இளைஞர்ன்னு நாளைய தினமலரில் பெட்டிச்செய்தி வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் தடுப்புக்கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு பரந்து விரிந்த திருச்சியை ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுவனும் அவனது தாயாரும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே கடந்து போனார்கள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.

ஒட்டு மொத்த மலையும் செல்ஃபிகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பொதுவாக பொது இடங்களில் படம் எடுப்பதும், எடுதுக்கொள்வதும் எனக்குப் பிடிக்காதது . காரணம் வேறொன்றுமில்லை கூச்சம் . uneasy ஆக உணர்வேன் . ஆனால் , இங்கே தான் இருவது ரூபாய் கட்டணம் வசூலித்திருக்கிறார்களே அது செறிக்கவேண்டும் என்பதற்காக ஒரு காலை கம்பிக்குள் முட்டுக்கொடுத்துக்கொண்டு நாலைந்து புகைப்படங்களை கிளிக்கினேன் . காலும் கையும் ஆடிய ஆட்டத்தில் எடுத்த போட்டோக்கள் வீடியோவாகிவிட்டன.

மிச்சம் இருக்கும் படிகளையும் தவழ்ந்து ஏறி வரிசையில் நின்றேன் பத்து நிமிடக்காத்திருப்புக்குப் பின் விநாயகப்பெருமானின் திவ்ய தரிசனம் கிட்டிற்று . உண்டியலிலோ , தீபத்தட்டிலோ காணிக்கை என்று ஏதொன்றும் போடவில்லை . என்னளவில் காணிக்கை போடுவதைக்காட்டிலும் , குப்பை போடாமலிருப்பதே  நாம் செய்யும் பெரிய சேவை/காணிக்கை தான் . பெரும்பாலான நம் தமிழகக் கோவில்களைப் பார்த்தால் , மக்கள்\ கோவிலுக்கு கும்பிட வருகிறார்களா இல்லை குப்பை போட வருகிறார்களா என்று சந்தேகமே வந்துவிடும். கி.ரா அவர்களின் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ரை கூற்றை நிறுவும் செயல்களில்/இடங்களில் மேற்படி இடமும்/செயலும் ஒன்று .

குறிப்பு : எதிர்பார்த்ததைவிட பதிவு நீண்டுகொண்டே போவதால் திருச்சி Conclusion அடுத்த பதிவில் .



என்றென்றும்  புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.