Mar 14, 2017

பேசாத வார்த்தைகள் - 13.03.17 : திருப்பூர் செட்டியார் கடை.



சினிமாக் காதலர்கள் எல்லோருமே, உணவுக் காதலர்களாகவும் இருப்பதில்லை. ஆனால் , பெரும்பான்மையான உணவுக் காதலர்கள் சினிமாக் காதலர்களாகவும் இருக்கிறார்கள்.  எல்லோருடைய நட்பு வட்டத்திலும் குறைந்தபட்சம் யாரேனும் ஒருவராவது சினிமா கம் உணவுக் காதலராக இருப்பார். எமது அலுவலகத்திலும் அப்படியொருவர் உண்டு. வயதிலும், பதவியிலும் மூத்தவர் என்றபோதிலும் தன்மையாக பழகக்கூடியவர். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு படம் இரண்டு, மூன்று ஹோட்டல் சிட்டிங் தவறாமல் இடம்பெறும் அவரது செட்யூலில்.

பலமுறை அழைத்தபோதும் , போகலாம் என்று திட்டமிட்ட போதும் மேற்படி காதலருடனான சிட்டிங் தள்ளிப்போய்கொண்டே இருந்தது . சென்ற மாதத்தில் ஒரு நாள் இரவு , திடீர் முடிவாக, அலுவலகம் முடிந்தவுடன் இன்னபிற இரு அலுவலக நண்பர்களுடன் செட்டியார் கடைக்கு படையெடுத்தோம் .

திருப்பூரில் , டவுன்ஹால் அருகில் , சிவா டெக்ஸ்டைல் எதிர்புறம் உள்ள வீதியில் நுழைந்து , வலது புறம் உள்ள சந்தின் கடைக்கோடியில் உள்ள கடைதான் தி பேமஸ் செட்டியார் கடை . அசைவத்திற்கு பெயர் பெற்ற கடை . கிட்டதட்ட ஒரு சாலையோர முனியாண்டி விலாஸ் போன்ற தோற்றம் . செட்டியார் கடைக்கு ஆடி காரில் வந்தெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று தோசைக்கல்லில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது. ஆனால் , அதுதான் உண்மை . சமயங்களில் உட்காருவதற்கு கூட இடம் கிடைக்காது.

கடைக்கு எதிர்புறம் மரத்தடியிலும் நாலைந்து டேபிள் சேர் போட்டிருக்கிறார்கள் . ஓபன் ரூஃப் பிரியர்கள் சிலர் பியர்களுடன் சமீபித்திருந்தார்கள் . தவிர்த்து, வெகு அருகிலேயே கூரையுடன் கூடிய உணவருந்தும் கூடமும் உண்டு . வண்டியை பார்க் செய்துவிட்டு மேற்படி கூடத்தில் தஞ்சமடைந்தோம். குதூகலத்துடன் ஒரு வாலிப பட்டாளமும் , ஒன்றிரண்டு குடும்பமும் ஏற்கனவே செட்டியார் கடையை காலி செய்யும் நோக்குடன் , கோழிகளையும் முட்டைகளையும் சுவீகரித்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாக நான் உணவு விசயத்தில் எந்த பரீட்சார்த்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை . வசந்த பவனோ , கையேந்தி பவனோ இல்லை தலைப்பாகட்டியோ , மெனு கார்டை அட்டை டூ அட்டை மேய்ந்துவிட்டு , நாலு இட்லி ஒரு வீட்டு தோசையோடு முடித்துக்கொள்வேன் . பட் , இந்த முறை அதற்கான வாய்ப்பே இல்லை . இதுவரை வாயில் நுழைந்திடாத , காதால் கேட்டிராத சில பல அயிட்டங்களை காதலர் ஆர்டர் செய்துகொண்டிருந்தார் .

நாங்கள் சென்றிருந்த அன்று பிரதோஷம் . என்னுடன் வந்த பிறிதொரு நண்பருடன் சேர்த்து நானும் பிரதோஷத்தன்று அசைவம் சாப்பிடுவதில்லை. எல்லோருக்கும் தலா ரெண்டு நெய் புரோட்டாவும் , சைடிஷாக ஒரு சில மாசலா கிரேவிகளையும் ஆர்டர் செய்தார். புரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள, காசு கொடுத்து கிரேவி வாங்கவேண்டுமேன்பதை என்னால் ஜீரணித்துகொள்ளவே முடியவில்லை . நெய் புரோட்டாவை சாப்பிடுவதற்க்கெல்லாம் முப்பத்தியிரண்டு பற்களும் முழு பலத்துடன் இருக்கவேண்டும் . அடித்து நொறுக்கி புரோட்டவை மென்று முழுங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

அடுத்தடுத்து ஆர்டர் செய்த அசைவ அயிட்டங்கள் ஒவ்வொன்றாக டேபிளில் படைக்கப்பட்டன . காதலர் எங்களுக்கு “பெப்பர் எக்” கை சிபாரிசு செய்தார் . பட் ,  பிரதோஷத்தன்று நாங்கள் டீ டோட்டலராக்கும் என்று சொல்லி மறுத்து விட்டோம் . முத்தமிடத்தூண்டும் இதழ்களைப் போல , அவர்களுக்கு படைக்கப்பட பெப்பர் எக் எங்களை கட்டி இழுத்தது  , அதன் வாசனை நாசி கடந்து , நரம்புகளையெல்லாம் தூண்டியது .  வெகு பிரயாசைப்பட்டும் அடக்கமுடியவில்லை. சக பிரோதஷ பார்ட்டியை பார்த்தேன் , அவர் கண்கள் , முட்டையை சைவத்தில் சேர்த்துக்கொள்ளலாமே என்று இரைஞ்சுவதாக பட்டது . இரண்டு சுற்று பார்வை பரிமாற்றத்திற்கு பின் ஏகமனதாக முட்டையை சைவத்தில் சேர்த்து இதழ்களில் வாய் பதித்தோம் .

அழகாக நறுக்கிய, நாட்டுகோழி முட்டையின் வெண் சுளையில் கொஞ்சம் அதிகப்படியாக மிளகுப்பொடி போட்டு , பொன் நிறத்தில் எண்ணெயில் வறுத்த அந்த முட்டையின் சுவை கட்டையில் போகின்ற வரை மறவாது . நாங்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ள  , மற்ற இருவரும் இன்னும் சில உயிரினங்களை கொன்று தின்று கொண்டிருந்தார்கள் . கடைசியாக இரண்டு பிளேட் தயிர் சாதம் கோரினார் காதலர் . இதென்னங்க காம்பினேஷன் என்று ஜெர்க் ஆனதற்கு, அதீத காரத்தை ஆற்றுப்படுத்த என்று பதிலுரைத்தார். எங்களுக்கு வேண்டாமென்று சொல்லி வெளியேறிய பத்தாவது நிமிடத்தில் வயிற்றிலுருந்து தொண்டை வரைக்கும் கப கப வென்று ஆசிட் . பெப்பர் தன் வேலையை காட்டு காட்டென்று காட்ட ஆரம்பித்துவிட்டது . மறுபடியும் போய் தயிர் சாதம் கேட்பது உசிதமில்லை என்று உஷ் கொட்டியவாறே பழரசக் கடையை தேடிக்கண்டுபிடித்து அடைக்கலமானேன் .

ஜிஞ்சர் வித் லெமன் சோடா ஆர்டர் செய்தோம் , நறுக்கிய இஞ்சி , அரை சிட்டிகை உப்பு , அளவான சர்க்கரை கொஞ்சமாக எலுமிச்சை என்று பெர்பெக்ட் கலவையில் மெல்லிய ஜில்லிப்புடன் கூடிய பானத்தை அருந்திய பின்தான் அமிலம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

நீங்கள் அசைவ விரும்பியா , உங்களுக்கு காரமெல்லாம்  கடலை மிட்டாய் சாப்பிடுவது போன்றா ..? அப்படியென்றால் உங்களுக்கான சரியான தேர்வாக செட்டியார் கடை இருக்கும் . காரம் ஆகாதுன்னு சொல்றவங்க கடை பக்கத்துல கூட போயிடாம  தூரமா ஓடி போயிடுங்க ...! அதான் நல்லது உடம்புக்கும் & பர்சுக்கும்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

Mar 1, 2017

பேசாத வார்த்தைகள் : கண்ணதாசன் , குருகுலம் , சுகன்யா ஸம்ரிதி யோஜனா.


     
அர்த்தமுள்ள இந்து மதம் உட்பட கண்ணதாசனின் பத்து புத்தகங்கங்கள் அடங்கிய மின் நூலை நண்பர் ஒருவர் கட்செவி அஞ்சலில் பகிர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 1000 பக்கங்கள். RANDOM ஆக தினமும் ரெண்டு மூணு பக்கங்களை வாசிக்கிறேன். இன்று அமராவதிபுதூர் குருகுலத்தை பத்தி ஒரு பத்தி ...!

குருகுலத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் விடுதி எண் உண்டு. கிட்டத்தட்ட பெயருக்கு இணையானது விடுதி எண் . விடுதி எண்னை சொன்னால் வீட்டு எண் வரை வரலாற்றையே சொல்லிவிடுவார்கள். கவியரசருக்கு 498 ஆம் எண். அவர் படித்த காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் பத்துக்கு பத்து சதுர அடி விவசாய இடத்தையும், நால்வருக்கொன்றாக பசு மாட்டையும் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்பதும் கல்வியாக இருந்திருக்கிறது. கூடவே குருகுல வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த  தறியில் அவரவருக்கான வேஷ்டியை மாணவர்களே நெய்துகொள்ள வேண்டுமாம். சில வருடங்கள் பாட்டு வகுப்பும், இசை வாத்திய வகுப்பும் கூட பயிற்றுவித்திருக்கிறார்கள் மாணவர்களுக்கு .

இதையேதான் இப்பொழுது CBSE, STATE BOARD என்று போர்டு வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருகுலத்தில் ஒழுக்கத்திற்கு தான் முன்னுரிமை. நீங்கள் ஏழாம் வகுப்பையே எட்டு வருடங்கள் படித்தாலும் பிரச்சினையில்லை. காந்திய கொள்கையை ஒற்றிய பாடத்திட்டத்தையும் , பழக்கவழக்கங்களையும் கொண்டியங்கும் கல்விச்சாலை. நாங்கள் படிக்கும்போது மேற்படி கண்ணதாசன் காலத்திய கல்வி முறை இல்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பான வாழ்வியலை அனுபவித்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுகின்றது இப்பொழுது.

பெரும்பாலானவர்கள் குருகுலம் என்றால் , நந்தா படத்தில் சூர்யாவை சேர்த்திருப்பார்களே அதுவா என்று கேட்கிறார்கள். இல்லை. அது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி. அது தண்டனை...! இது பெற்றவர்களின் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படும் உண்டு உறைவிடப் பள்ளி. காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலான ராணுவ ஒழுங்குடன் கூடிய டைம்டேபிள் . இருக்கப்பிடிக்காமல் , சாக்கடை பொந்துக்குள் புகுந்து தப்பித்தவர்கள், நடு சென்டரில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் எல்லாம் உண்டு. நமக்கு எலிப் பொந்தே போதுமானதாக இருந்தாலும், எப்படியும் அடித்து துவைத்து  மறுபடியும் குருகுலத்தில் தான்  கொண்டுவந்து காயப்போடுவார்கள் என்று தெரிந்தமையால் சமத்துப்பிள்ளையாகவே ஐந்து வருடங்களையும் கடத்தியாயிற்று. குருகுலத்தில் படிக்கும் போது மாணவர்கள் அனைவருமே அதை தண்டனையாகவே கருதினோம். இப்பொழுது கேட்டால் குருகுல வாசம்தான் தற்சமயம் இருக்கும் சிற்சில நல் பழக்கவழக்கங்களுக்கும் , ஓரளவேனும் நன்றாக இருப்பதற்கும் காரணம் என்று சொல்வோம்.

எனது விடுதி எண் 102. சமீபத்தில் இணையத்தின் வழியாக குருகுல மாணவர் ஒருவரின்  தொடர்பு கிடைத்தது. அண்ணே அவரா நீங்க...?! அடையாளமே தெரியலையே என்று ஜெர்க் ஆனார் . மேற்படி குருகுல வாசத்தில் ,அடியேன் பெரும்பாலும் தொள தொள சட்டையும், நெற்றி நிறைய பட்டையும், கழுத்தில் ருத்திராட்ச கொட்டையுமாகத்தான் திரிவேன். அதுதான் ஜுனியர் ஜெர்க் ஆனதன் காரணம். ஏதோ ஒரு மடத்தின் மடப்பள்ளியில், புளிச் சோறு உருட்டிக்கொண்டிருப்பான் என்று நினைத்த ஒருவன்,  ஜீன்ஸ் போட்டு மூஞ்சி புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போடுவேனென்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.
     
ஆயிற்று, குருகுலத்தை விட்டு வந்து பதினெட்டு வருடங்கள் ஆயிற்று. விரைவில் ஓர் எட்டு போய் வரவேண்டும்

**********************************************************************************************************************************
ASSET ம் இல்லை LIABILITY ம் இல்லை, கிட்டத்தட்ட ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கையைத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இது வருமான வரி கணக்கு பைசல் பண்ண வேண்டிய நேரம் . எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல எந்தெந்த வகையில் வரி செலுத்தாமல் எஸ்கேப் ஆகலாம் என்று ஆளாளுக்கு ஆலாய்ப் பறக்கின்றார்கள் .

மேற்படி வருமான வரி தொடர்பான , சேமிப்பு திட்டங்கள் பற்றி இணையத்தில் உலாவியதில் கண்ணில் பட்டது ஒரு உருப்படியான திட்டம் . இந்திய அரசின் , பிரதமர் மோடி அமைச்சரவையினால் அறிமுகப்படுத்தப்பட்டசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ( தமிழில் செல்வமகள் சேமிப்புத்திட்டம் ) .

ரெம்ப காம்பெக்டான ஒரு திட்டம் , கண்ணைக்கட்டும் கண்டிப்புகளோ , கழுத்தை நெரிக்கும் அளவிற்கான தவணையோ இல்லாத வெகு நெகிழ்வான ஒரு திட்டம் . பெண் குகந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டிருக்கின்றது .

திட்டத்தின் சாதக பாதகங்கள்

Ø      பெண் குழந்தைகளுக்கான எளிய சேமிப்புத்திட்டம் .
Ø      பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தொடங்கலாம்.
Ø      ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக லட்சத்து ஐம்பதினாயிரம் வரை கட்டலாம்.
Ø      நூரின் மடங்காக எவளவு வேண்டுமானாலும் எத்தனை தவணையில் வேண்டுமானாலும் கட்டலாம்.
Ø      பதினான்கு வருடங்கள் தொடர்ந்து கட்டவேண்டும்.
Ø      வேறு எந்த சேமிப்பு திட்டங்களிலும் கிடைக்காத அளவிற்கான வட்டி இதில் கிடைக்கும்
Ø      ஆரம்பித்த வருடத்தில் 9.1 சதவிகித வட்டியும் தற்சமயம் 8.6 சதவிகித வட்டியும் வழங்கப்படுகின்றது .
Ø      தபால் நிலையம் மற்றும் அரசு வங்கிகளின் எந்த கிளையில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் . எந்தக் கிளைக்கு வேண்டுமானாலும் மாற்றிகொள்ளும் வசதியும் உண்டு .
Ø      ஆதார் அட்டை , பான் கார்டு , பாஸ்போர்ட் இதில் ஏதாவது ஒன்றும குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் இருந்தால் போதும் .
Ø      EEE என்று சொல்லப்படும் வரிவிலக்கு வசதி உண்டு . அதாவது இதில் செய்யப்படும் முதலீடு ,கிடைக்கும் முதிர்வுத்தொகை மற்றும் வட்டி இவை மூன்றிற்கும் வருமானவரி விலக்கு உண்டு.

பாதகம் என்று பார்த்தால் ,

Ø      பதினெட்டு வயதிற்கு முன்பாக அவ்வளவு எளிதில் பணத்தை எடுக்க முடியாது.
Ø      21 வருடங்கள் கழித்துதான் முதிர்வுதொகை கிடைக்கும்.
Ø      ஒரு வேளை அதற்கு முன்பாகவே திருமணம் நிச்சயிக்கப்பட்டால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும்.
Ø      குழந்தையின் பதினெட்டாவது வயதில் கல்விக்காக ஐம்பது சதவிகிதம் மட்டுமே எடுக்கமுடியும் .
Ø      ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே முழு பயன் கிடைக்கும் .
Ø      நிலையற்ற வட்டி விகிதம்.
Ø      இணையத்தின் வாயிலாக கணக்கை ஆரம்பிக்கவும் இயலாது , பணம் செலுத்தவும் இயலாது .

இன்றைய கல்யாண கள நிலவரங்களை வைத்துப் பார்த்தால் , ஆக்சுவலி இந்த திட்டம் ஆண் குழந்தைகளுக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும் . இன்றைக்கே  திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆண்கள் . இன்னும் இருபது வருடங்கள் கழித்து நிச்சயமாக பையன் வீட்டார்தான் வரதட்சணை கொடுத்து பெண் எடுக்க வேண்டியதிருக்கும் .

என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .