போனவாரம்
தமிழ்த்தாய்க்கு சிலை...!
இந்த
வாரம் தமிழுக்கு உலை ...!
கல்லூரிகளில்
இனி கட்டாயம் ஆங்கிலமாம்...! விசித்திரமாக இருக்கின்றது . விழிகளை விற்று
சித்திரம் வாங்குவதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத்
தெரியவில்லை .
கிராமத்திலிருந்து
வரும் மாணவர்கள் , பத்தாம் வகுப்பு வரையோ பன்னிரெண்டாம் வகுப்பு வரையோ தமிழில்
படித்து விட்டு , பின் எப்படி கல்லூரியில் அனைத்தையும் ஆங்கிலத்தில்
படிக்கமுடியுமென்று தான் தெரியவில்லை . தனிப்பட்ட முறையில் மிகுந்த சிரமப்பட்டேன்
. இதோ இன்று வரை பட்டுக்கொண்டிருக்கின்றேன் . பத்தாம் வகுப்பு முடிந்து
பாலிடெக்னிக் சேர்ந்தபொழுது மொழிதெரியா நாட்டில் சிக்கிக்கொண்ட மாதிரிதான்
இருந்தது . அதுவும் முதல் வருடம் கணிணியையே பார்த்திராத என்னைப்போன்ற மாணவர்களுக்கு C , C ++ என்று பாடங்களை வைத்தது பெரும் கொடுமை கூடவே
கணிதம் ஒன்று கணிதம் இரண்டு என்று இரண்டு பி(க)ணக்குகள் வேறு . இந்த பாடங்களில் சரி பாதி மாணவர்கள் அவுட் . அதைவிட
கொடுமை அடுத்த முறை அரியர் எழுதிய அத்தனை போரையும் தேர்ச்சி பெற வைத்தது.
கடந்த
ஆறு மாதங்களில் அதிகமான சம்பளத்துடனும் , சலுகைகளுடனும் கூடிய அருமையான இரண்டு
வேலை வாய்ப்புகள் தவறிப்போனது. ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால்
மட்டுமே இருவிடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன் . இயல்புக்கு திரும்ப இரண்டு
வாரமானது . இடைப்பட்ட காலத்தில் ஏகத்துக்கும் எரிந்து விழுந்தேன் அம்மாவிடமும்
, அப்பாவிடமும் ஆங்கிலப் பள்ளியில் என்னை சேர்க்காத காரணத்திற்காக. நிராகரிப்பின் வலியைக்காட்டிலும் ரணமான வேறு வலி
இவ்வுலகில் இருகின்றதா எனத்தெரியவில்லை .
தமிழில்
புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆங்கிலத்தில் பாடங்களை புரிந்து கொள்ளமுடியவில்லை ,
புத்தகத்தின் பக்கங்களை திருப்புவதை விட, டிக்சனரியின் பக்கங்களை தான் அதிகம் புரட்ட
வேண்டியிருக்கிறது . அதே சமயம் , சில தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் படிப்பதென்பது
ரஷ்ய , சீன மொழியில் படிப்பதைப்போன்று அவ்வளவு சிரமமாக இருக்கின்றது , அந்தக்கொடுமைக்கு ஆங்கிலமே பரவாயில்லை என்று தான்
தோன்றுகிறது .
இன்று வாழ்வாதாரமான
தமிழ் மொழியை பொருளாதாரமான ஆங்கிலம் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது . இன்றைய இயந்திர வாழ்க்கையில் , நல்லதொரு
பொருளாதார நிலையைப்பெற ஆங்கிலம் அதி அவசியம் தான் , அதிலேதும் மாற்றுக்கருத்து
இல்லை . ஆனால் கட்டாயம் என்று திணிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .
திணிக்கப்படும் எதுவுமே வாந்தியாகத்தானே வெளியே வரும் ...? வாந்தி சில சமயம்
வாழ்க்கையையே பறித்துவிடுகின்றதே.
பள்ளிக்கூட
நாட்களில் எப்பொழுதும் பிடித்தமான வகுப்பு விளையாட்டு வகுப்பு தான் , எந்தவிதமான
தேர்வும் , மதிப்பீடும் , மனனமும் கிடையாது . எந்தவிதமான கட்டாயமும் கிடையாது
ஆனால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் எல்லோரும் விருப்பத்தோடு விளையாடுவோம் . வாழ்வாதாரமான தமிழையும் ,
பொருளாதாரமான ஆங்கிலத்தையும் பரீட்சை
எழுதும் ஒரு பாடமாக வைக்காமல், விளையாட்டு வகுப்பை போன்றே , செயல் வழிக்கற்றல்
மூலமாக ஆரம்பப்பள்ளிகளில் இருந்தே முறையாக
சொல்லிக்கொடுத்தார்களேயானால் நிச்சயமாக அது எல்லோருக்கும் பயனாக இருக்கும் .
அதை விடுத்து கட்டாயம் என்று திணித்தார்களேயானால் அது சர்வநிச்சயமாக அழிவையே தரும்
மொழிக்கும் , மனிதர்க்கும் .
ஒருவேளை
ஆங்கில வழி கட்டாயமாக்கப்பட்டால் , அனைவரின் ஒருமித்த கருத்துக்கு பின்னரே அது
நடைமுறைக்கு வரவேண்டும் . இல்லையெனில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் அரசியல்
சடுகுடுவில் மாணவர்கள் சிக்கி சின்னா பின்னமாகிவிடுவார்கள். ஏற்கனவே சமச்சீர்
கல்வியில் அதுதானே நடந்தது .
என்றென்றும்
புன்னகையுடன்
ஜீவன்சுப்பு