Jan 6, 2020

பேசாத வார்த்தைகள் #060120


பேசாத வார்த்தைகள் #060120





புஸ்தகம் ~ ரூஹ்

வெகுநாட்களாக லக்ஷ்மி சரவணகுமாரையும் சரவணன் சந்திரனையும் போட்டு குழப்பிக்கொண்டிருந்திருக்கிறேன்.  இருவரும் வெவ்வேறு எழுத்தாளர்கள் என்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன்.

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டிக்காக லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய ரூஹ் வாசித்தேன். ஒரு நல்ல படைப்பு அதைப்பற்றிய மேலதிக தகவல்களை அறியத்தூண்டும். ரூஹ் என்றால் என்னவென்று இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ; உயிர் என்றார். 

கிறித்துவ தேவாலயங்களில் ஆற்றுப்படுத்துதல் மையம் என்றொரு அறை உண்டு. வேளாங்கண்ணியில் நான் பார்த்திருக்கிறேன். மன உளைச்சலில் அல்லல் படுபவர்கள் , வாழ்க்கையை வெறுத்து விரக்தியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் இவர்களுக்கான கவுன்சிலிங் கொடுப்பார்கள்.
எழுத்தாளர் அதுபோன்றதொரு மன உளைச்சலுக்கு ஆளாகி , தற்கொலை எண்ணம் மேலோங்கிய ஒரு காலத்தில் தனக்கான அமைதியை கடப்பா தர்ஹாவில் கண்டறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட ரூஹ் புஸ்தகம் ஓர் ஆற்றுப்படுத்தும் வேலையைத் தான் செய்கிறதென்பேன்.

"தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே" என்ற தத்துவார்த்தமான மேற்கோளுடன் ஆரம்பிக்கிறது நாவல். மிக அபாராமான அட்டைப்படம். இளையராஜா இசை போல வெகுவாக டிஸ்டர்ப் செய்கின்றது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக அட்டைப்படத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். வடிவமைத்தவருக்கு அன்பும் நன்றியும். புதுவீட்டில் இந்த புஸ்தகத்தின் அட்டைப்படத்தை சட்டகம் செய்து மாட்டவேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.

நிபந்தனையற்ற அன்பைப் பேசும் நாவல் ரூஹ் . அரிதாக எடுத்தாளப்படும் இஸ்லாமிய பின்புலத்தில் நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புதிய அனுபவம். அலைக்கழிக்கும் எண்ணங்களுடனும் போராடும் ஜோதி , அன்பை விதைக்கவே பிறப்பெடுத்திருக்கும் ராபியா , கடமையைக் கண்ணாக பாவிக்கும் மாலுமி அஹமத் இவர்கள் மூவரும்தான் நாவலின் பிரதானம்.

அயற்சியை ஏற்படுத்தும் நீண்ட வாக்கியம் , தமிழ் வார்த்தைக்கே அகராதியை தேடத்தூண்டும் வார்த்தைப் பிரயோகம் ஏதுமின்றி இயல்பான தமிழில் செழுமையான நடை .வழக்கம் போல எழுத்துப்பிழைகளையும் , மனதிற்கு நெருக்கமான முக்கிய வரிகளையும் அடிகோடிட்டுக்கொண்டே வந்தேன். இரண்டு மூன்று அத்தியாங்களிலேயே அது ஓர் அபத்தம் என்பதை  உணர்ந்தேன். மிக மிகக்குறைவான எழுத்துப்பிழைகள். பக்கத்திற்கு பக்கம் மனத்திற்கு நெருக்கமான வரிகள். அடிக்கோடிட வேண்டுமென்றால் சரி பாதி புஸ்தகத்தை அடிகோடிடவேண்டும். நிறுத்திக்கொண்டேன்.

நாவல் நடைபெறும் காலம் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. அஹமத் வரும் அத்தியாயங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பான மனவோட்டத்தையும் , ஜோதியின் தங்கை, நைஜீரியனுடன் , திருப்பூர் வரும் அத்தியாயங்கள் சமகால மனவோட்டத்தையும் தன்னியல்பாக ஏற்படுத்துகின்றது.

நாவலில் இருந்து சில மேற்கோள்கள்.

//

"சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்."

"நேசத்திற்குரியவர்களிடம் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல் துக்கத்தையும் தோல்விகளையும் இயல்பாய் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை."

"சக மனிதனை ஏமாற்றாமல் வாழ்வதும் சக மனிதனிடம் ஏமாறாமல் வாழ்வதும் எளிதான காரியமில்லை".

"மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்"

"விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல் துயரமானது வேறில்லை."

//


ஐந்து முதல் ஆறு மணி நேரத்தைக் கோரும் வாசிப்பு . தகும். நிச்சயமாக அச்சில் வரும் ; வரவேண்டும். ஒரு ஃபீல் குட் திரைப்படம் பார்த்த ; நான்கைந்து மணி நேரம் சூஃபி பாடல்களைக் கேட்ட உணர்வு புஸ்தகத்தை வாசித்த பின் ஏற்பட்டது. நண்பர்களுக்கு புஸ்தகத்தை சிபாரிசிக்கிறேன். நிச்சயம் உங்களுக்கு நிறைவான அனுபவத்தை தரும்.


@@@@@@@@@


படம் ~ காளிதாஸ்

இரு முறை முயற்சித்தும் லிமிடெட் காட்சி நேரத்திற்குள் செல்லமுடியாததினால் திரையரங்கம் சென்று பார்ப்பது தவறிப்போய்விட்டது. பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களை பைரசியில் பார்ப்பதை இரக்கமற்ற செயலாகத்தான் பார்க்கின்றேன். காளிதாஸை பைரசியில் பார்த்து முடித்ததும் குற்ற உணர்ச்சி அதிகமாகிவிட்டது.

கணிசமானவர்கள் சொன்னது போல இது கரு.பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் கதையல்ல. அது ஒரு பக்காவான பேமிலி டிராமா. ஒற்றைக் குழந்தைகளின் தனிமையை , ஏக்கத்தை , எதிர்பார்ப்பை சொல்லிய விதத்தில் பிரிவோம் சந்திப்போம் குறிப்பிடப் படவேண்டிய படம். சைக்காலிஜிக்கல் என்ற ஒற்றை விஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் காளிதாசும் , பி.சமும் வேறு வேறு தளம். காளிதாஸ் ஒரு கிரிப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். இரண்டு படத்திற்கும் ஒரேயொரு ஒற்றுமையை வேண்டுமானால் சொல்லலாம். இரு இயக்குனர்களும் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்.

திருக்குறளுடன் ஆரம்பிக்கும் படத்தில் , டைட்டில் கார்டிலேயே இயக்குனர் தனது இருப்பை பறைசாற்றியிருக்கிறார். படத்தில் இடம்பெரும் முக்கியமான ஆப்ஜெட்களை கொண்டே டைட்டில் கார்ட் டிசைன் செய்திருக்கிறார்கள். செம்ம.

சென்னையின் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அடுத்தடுத்து பெண்கள் சாகிறார்கள். எல்லா இறப்புக்கும் ஓர் ஒற்றுமை. Fall from height. கொலையா, தற்கொலையா என்று இனம் காண முடியாமல் காவல் துறை அதிகாரியான பரத் தடுமாறுகிறார். வழக்கின் தீவிரம் கருதி அசிஸ்டெண்ட் கமிஷனர் சுரேஷ் மேனேன் வரவழைக்கப்படுகிறார். அவர் வசம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து குற்றவாளியை கண்டுபிடிப்பதே காளிதாஸ்.

காளிதாஸாக பரத் . நிறைவான பங்களிப்பு. நாயகப் பாத்திரம் என்று சொல்லவே முடியாது. வாய்ப்புகள் வரத்தில்லாமல் , கிடைத்த வாய்புகளாலும் வெற்றியை நெருங்க முடியாமல் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட பரத் என்ற நடிகனை,  பக்குவமான ஒரு கலைஞனாக ஸ்ரீசெந்தில் மீட்டெடுத்திருக்கிறார். நடிப்பிலும் தோற்றத்திலும் அப்படியொரு முதிர்ச்சி & பக்குவம்.

பரத்துக்கு இணையான மூன்று பாத்திரங்கள். ஒன்று சுரேஷ் மேனன். அட்டகாசமான பெர்ஷனாலிட்டியில் அசத்துகிறார். அடுத்தது நாயகி ஆன் ஷீதல் . ஆனந்தி , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஐஸ்வர்யா ராஜேஷ் , வசுந்தரா இவர்களெல்லாம் அசரடிக்கும் அழகில்லையென்றாலும் வசீகரிக்கக்கூடியவர்கள் . இந்தப் பட்டியலில் ஆன் ஷீத்தலையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி ஆதவ் கண்ணதாசன் , சிங்கம் கான்ஸ்டபிள் , பழைய ஜோக் தங்கதுரை என்று அத்துனை பேரும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

பாரதியாரின் இரண்டு பாடல்கள் உட்பட அட்டகாசமான 5 பாடல்களையும் , சிறப்பான பின்னணி இசையையும் நல்கியிருக்கிறார் இசைஞர் விஷால் சந்திரசேகர்.
சுதா ரகுநாதன் குரலில் ஒலிக்கும் "மழை நனைய வைத்தது ஒரு நாள்" பாடல் ஆல்ரெடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. "ஆடவன் அன்பிலே பெண் மனம் குழையுதே" என்ற பாடல் தனித்துவமான குரலாலும், இசைக்கோர்வையாலும் , காட்சியமைப்பாலும் கவர்கிறது. திரைப்படங்களில் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாரதியாரின் பாடலாக "காக்கை சிறக்கினிலே" பாடலை சொல்லலாம். விவாதத்திற்கு உரிய இடங்களில் முண்டாசுக் கவிஞனின் இரண்டு பாடல்களையும் இணைத்திருக்கிறார்கள். . விஷாலுடன் இணைந்து அபய் இரண்டு பாடல்களுக்கும்  தன்னுடைய குரல்களில் உயிர் கொடுத்திருக்கிறார். சபாஷ் . ஒளிப்பதிவும் , எடிட்டிங்கும் சிறப்பு . பரத் & ஷீதல் தம்பதியின் வீட்டு உள் அலங்காரம் அபாரமான ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்ட் டைரக்டருக்கு ஆளுயர மாலை போடலாம்.


ஸ்ரீ செந்தில் வசனங்களில் எதார்த்தமும் பகடியும் இழையோடுகிறது. சிரிக்கவும் , சிந்திக்கவும் , ரசிக்கவும் வைக்கும் வகையில் வசனங்களை எழுதியிருக்கிறார். சீரியஸான ஒரு சேஸிங் காட்ஸியில் போகிற போக்கில் ஒரு அடல்ட் காமெடியை சொருகியிருப்பது ஓர் உதாரணம்.

கொஞ்சம் மெதுவாகவே "நடக்கும்" திரைக்கதையில் , கடைசி காட்சி வரை சஸ்பென்ஸை தக்கவைத்திருக்கிறார் ஸ்ரீ . ஒரு சிலர் கிளைமேக்ஸ் ஏமாற்றம் அளிப்பதாக எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படிப்படவில்லை. கொஞ்சம் ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் தந்ததது. ஓபனிங் சாங், பஞ்ச் டயலாக் , ஆக்ஷன் பிளாக் இல்லாமல் ஒரு போலீஸ் கதாபாத்திரம். Refreshing . காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவதும் , ஏமாறுவதும் ஒரு கட்டத்தில் நமக்கே கடுப்பை கிளப்பி , நாமும் களத்தில் இறங்கிவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு காவல்துறை வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் ஒரு காட்சியைக்கூட கழிக்க முடியாது. பக்காவான சைக்காலிஜிக்கல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஸ்ரீசெந்தில் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவராகத் தனித்துத் தெரிகிறார். ஒன் டைம் ஒண்டராக ஒதுங்கிவிடாமல் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவிக்க வேண்டும். காளிதாஸ் படத்தினை நண்பர்களுக்கு அழுத்தமாக சிபாரிசிக்கிறேன்.


டிஸ்கி : இயக்குனர் ஸ்ரீசெந்திலை உங்களுக்கு தெரியுமென்றும் நாம் எல்லோரும் ஒன்றாக விளையாடியிருப்பதாகவும் தம்பி ஒருவன் நினைவுபடுத்தினான். இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு , ஸ்ரீசெந்தில் எங்கள் விளையாட்டு கூட்டத்தில் ஒருவனுடைய விருந்தினர் அண்ணனாக எங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார். அவரோடு பேசி விளையாடி பொழுது களித்திருக்கிறோம். எனக்கு சுத்தமாக நினைவில்லை. ஸ்ரீசெந்திலுக்கும் நிச்சயம் நினைவிருக்காது. பரஸ்பரம் ஏற்கனவே அறிமுகமாகி கால ஓட்டத்தில் நினைவகன்று போயினும் , நமக்குத் தெரிந்திருந்த ஒருவர் நல்ல விஷயம் ஒன்றிற்காக பரவலான கவனத்திற்கும் , பாராட்டிற்கும் ஆட்படும்போது இயல்பாகவே நமக்குக் கூடுதல் சந்தோஷம் கிடைத்துவிடுகிறது.


@@@@@@@@@


குடியுரிமைச் சட்டம் , உள்ளாட்சித் தேர்தல் என்று நாடும் ,  மாநிலமும் வேறொரு சிந்தனையிலிருக்க மத்திய சர்க்கார் சத்தமேயில்லாமல் நடுத்தர மக்கள் மீது மற்றுமோர் சர்ஜிக்கல் அட்டாக் செய்திருக்கிறார்கள்.

நகைகளை அடமானம் வைத்து வங்கிகளில் வாங்கும் விவசாயக்கடன் திட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள். முறைகேடாக திட்டத்தை பயன்படுத்துகிறார்களாம். இதற்கு முன்பு வரை 7 சதவீத வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை நகைகடன் வாங்க வழிவகை இருந்தது . வருடா வருடம் முறையாக வட்டியை திரும்ப செலுத்தும் பட்சத்தில் மூன்று சதவீத வட்டிக் கழிவு மானியமாக வழங்கப்படும் . ஆக மொத்தத்தில் 4 சதவீத அதாவது அரைவட்டிக்கும் கீழே எளிதாக கடன் கிடைத்து வந்தது. இப்பொழுது திட்டமே ஸ்வாகா. பதிலாக 9 சதவீத வட்டியில் வாங்கிக்கொள்ளலாம் என்று வங்கித்தரப்பில் சொல்கிறார்கள். இதற்கு வட்டிக்கழிவு மானியம் கிடையாது.

நான் விசாரித்த வகையில் வாடிக்கையாக செய்திகள் வாசிக்கும் , கேட்கும் பழக்கம் கொண்டவர்கள் கூட , அட பாவிங்களா ! அப்படியா !? என்று விசனப்படுகிறார்கள்.

அரசாங்கம் சொல்வது போல சிலர் முறைகேடாக வட்டிக்கு விடுவதற்கு வாங்குகிறார்கள் தான். விவசாயத்திற்கு இந்த திட்டத்தை உபயோகிக்கிறவர்கள் குறைவுதான். ஆனால் அப்படி செய்பவர்களின் சதவீதம் சொற்பம். 90 சதவீத மக்கள் தங்களது அத்தியாவசிய தேவை மற்றும் நிகழ்வுகளுக்கு இதைத்தான் பெரிதினும் பெரிது நம்பியிருந்தார்கள். கல்விகட்டணத்திற்கு , அவசர மருத்துவ செலவுக்கு , சிறு சிறு சுப நிகழ்வுகளுக்கு , வீடு வாங்குவதற்கான முன்பணம் கொடுப்பதற்க்கு என்று. ஏற்கனவே பணப்புழக்கம் இல்லாமல் பொருட்களின் நுகர்வும் , அதைத்தொடர்ந்து தேவையும் உற்பத்தியும் கணிசமாக குறைந்து  போயிருக்கிறது. இந்த திட்டம் அதை இன்னும் மோசமாக்கும் என்றே நினைக்கிறேன்.

யானை போகும் வகையிலான ஓட்டைகளை அலட்சியப்படுத்திவிட்டு , எறும்பு நுழையும் அளவிற்கான நுண் துளைகளை அடைப்பதால் , பெரிய முன்னேற்றங்களை பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடமுடியும் என்று எப்படி நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. கேட்டால் வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இல்லை என்று சொன்னதைப்போல ஏதாவது சொன்னாலும் சொல்வார்கள் நமக்கு வாய்த்த அமைச்சர் மகான்கள்.

இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால் ஹைக்கோர்டில் கூட மலராது.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.




No comments:

Post a Comment

Related Posts with Thumbnails