Jul 23, 2013

இசையும் , மழையும் - ரசித்த பதிவும் ...!








இசையையும் , மழையையும் பிடிக்காதவர்கள் யாரேனும் இந்த உலகத்தில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை . எல்லோரும் பிடிக்குமென்றே சொல்கின்றார்கள் . முகநூல் முதல் ரெஸ்யூம் வரை எனக்கும் பிடிக்குமென்றே சொல்லிவருகின்றேன் . ஆனால் என்னால்  எந்தவொரு மழைப்பொழுதையும் , இசைத்துளியையும் ரசித்து, லயித்து சொல்லமுடியவில்லை ....! எத்தனை பேரால் சொல்ல முடியுமென்று தெரியவில்லை . உங்களால் முடியுமென்றால் நீங்கள் ஒரு ரசிகன் பாஸ் ...!

முன்னிரவு மழையையும் , பின்னிரவின் இசையையும் அழகாக , அமைதியாக லயித்து , ரசிக்கவேண்டுமேன்று நினைக்கும் ஒவ்வொருமுறையும் , மனம் அவசர ஊர்தியாய் பறந்துவிடுகின்றது .   நடிப்பதற்கு , இசைப்பதற்கு , வரைவதற்கு , பாடுவதற்கு , எழுதுவதற்கு எப்படி பொறுமையும், திறமையும்  தேவைப்படுகின்றதோ , அதைப்போலவே ஏன் அதைவிட அதிகமாகவே பொறுமையும் , திறமையும் தேவப்படுகின்றது ரசிப்பதற்கு ...!

ஆழமாக , அழகாக , ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சில ஜீவன்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கின்றது , ரசனை மிக்க அந்த ஜீவன்களால் தான் இந்த உலகம் இன்னும் ஜீவித்திருக்கின்றது என்று திடமாக நம்புகின்றேன்  .

ரசிப்பதே ஒரு கலை எனும்பொழுது , ரசித்ததை அப்படியே எழுத்தில் வார்த்து வாசிப்பவர்களையும் நேசிப்பவர்களாக , ரசனைமிக்கவர்களாக மாற்றும் செயலை என்னவென்று சொல்ல  ...!

இந்தியாவின் முதன்மையான பத்திரிகை என்று “மார்”தட்டிக்”கொல்லும்” பத்திரிகைகள் எல்லாம் நடிகைகளின் “....பை” மட்டுமே பிரதானமாக அட்டைப்படமாக போட்டு , ரசித்து லயித்து எழுதும் காலத்தில் , அழகழகான ரசனைகளை மிக அற்புதமாக வார்த்திருக்கிறார்கள் நம் வலையுலக நண்பர்கள் . நான் மிக ரசித்த இரண்டு பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்  . இந்தப்பதிவுகளையும் , பதிவர்களையும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம் . தவறவிடக்கூடாத இந்தப்பதிவுகளை , தவறவிட்டவர்களுக்கு  மீட்டெடுத்துக்கொடுக்கும் முயற்சிதான் இந்தப்பதிவு ....!.

ரசனையின் உச்சமான இந்த இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு இதுதான் தோன்றியது ....... அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து , நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு.
    
பாடல் கேட்ட கதை – இளையராஜாவின்இயற்பியல் பகுதி - குமரன் .

வாரியார் – சித்திரமே செந்தேன் மழையே – தேவா சுப்பையா .

இந்த ஒரு பதிவு மட்டுமல்ல , இவர்கள் எழுதும் அத்துனை பதிவுகளுமே ரசனையின் உச்சம்தான். இவர்களைப் பற்றிய இந்தப்பதிவால்  நான் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் . மிக அழகான அனுபவத்தை தந்த தேவா அண்ணனுக்கும் , குமரன் அண்ணனுக்கும்( !) கடைநிலை ரசிகனின் கனிவான நன்றிகள் ...!

  


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .

Jul 18, 2013

செம்மொழியான தமிழ்மொழியே ...!





“சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க” , “கொஞ்சம் நடிங்க பாஸ்” இந்த ரெண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் . ரெம்ப, ரெம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி . ரெம்ப சாதாரணமான விசயங்கள, மக்கள் எப்படி புரிஞ்சுவச்சுருக்காங்கன்னும் , எந்த மாதிரி அதை வெளிப்படுத்துராங்கன்னும் பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும் . (அடுத்தவங்க பல்பு வாங்குறத பார்க்குறது  யாருக்குத்தான் பிடிக்காது...! ).

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் , எனக்கு ஓர் ஆச வரும் , மேற்படி நிகழ்ச்சி மாதிரி தமிழ்நாட்டின் ஏதாவதொரு ஊரின் பொது எடத்துல , படிச்ச பத்து பேர நிறுத்தி வெள்ளக் காகிதம் கொடுத்து, ஒரு பக்கத்துக்கு தமிழ்ல எழுதுங்க மக்களே ன்னு சொல்லனும்னு ...! அப்டி எழுத வச்சு, அதப்படிச்சுப்பாத்தோம்னு வைங்க.. ச்சும்மா சிப்பு சிப்பா இருக்கும் . வடிவேலு , சந்தானம் காமெடில்லாம் பிச்சை எடுக்கணும், அப்டி அதகளமா இருக்கும்.

சாமி சத்தியமா பத்துக்கு நாலு பேரு , நாலு வரிக்கு மேல தாண்டமாட்டாங்க ... சொச்சத்துல பாதி பேரு, வரிக்கு ரெண்டு எழுத்துப்பிழையோடு தான் எழுதிருப்பாங்க . எழுத்துப்பிழை தவிர்த்து , இலக்கணப்பிழை , சந்திப்பிழையல்லாம் பாத்தோம்னா ஒருத்தரும் தேரமுடியாது . அதுதான் இன்றைய நிலை .

பள்ளிப்பருவத்தோடு முடிஞ்சுபோச்சு தமிழ்ல எழுதுறது . கல்லூரில, கடமைக்கு ஒரு தாள் தமிழ் . மற்றபடி வேலைக்கு வந்த பிறகு எங்கும் ஆங்கிலம் . தமிழ்ல எழுதுரதுக்கான வாய்ப்பே இல்ல . ஏன், பொதுவா எழுதுறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு அல்லது போக்கடித்துவிட்டோம் . தினசரி நாம ஏதாவது எழுதுரோமான்னு யோசிச்சு பத்தா, கையெழுத்து போடுவத தவிர வேறெதுவும் இருக்குற மாதிரி தெரியல  . அதுவும் சில நேரங்கள்ல டிஜிட்டல் கையெழுத்து இல்லைன்னா பஞ்சிங் ன்னு ஆயிடுத்து . ரெண்டாவது, கையெழுத்துப் போடுரதையெல்லாம் எழுத்துலேயே சேர்க்கமுடியாது . கைக்கு வந்தத கிறுக்குறது தானே கையெழுத்து ...!

கடிதம் ..? காணமல் போன பட்டியல்ல கூட இன்னைக்கு கடிதம் என்ற ஒன்னைக் காணமுடியல  . திருமணப்பத்திரிக்கைகள் கூட இன்னைக்கு ஆங்கிலம் தாங்கி தானே வருது...! நேர்ல கொடுக்குற ஒருசிலர் , பேரே எழுதுறதில்ல, மொட்டையாத்தான் கொடுக்குறாங்க ...!

ஏதோ தப்பித்தவறி வலைப்பூவுல எழுதுறதுனால, வட மாநில நடிகைகள் சொல்வது போல  கொஞ்சும் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்கு . இதக்கூட முழுமையான தமிழ் ன்னு சொல்லமுடியாது தமிங்கிலீஸ் தான் . கைப்பட காகிதத்துல எழுதும்போதுதான் நம்ம லட்சணம் நமக்கே தெரியுது .  இந்த காற்புள்ளி , அரைப்புள்ளி , ஆச்சர்யக்குறியெல்லாம் எங்க போடனும்னு தெரியாத தற்குரிகள்ல நானும் ஒருத்தேன்னு சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை . கொஞ்சம், நா எழுதுன பதிவுகள(!) படிச்சுப்பாத்தா , கோபிநாத் எப்டி நிமிசத்துக் பத்துத்தடவ வேற, வேற ன்னும் , சரிதானேன்னும் சொல்றமாதிரி, குறைந்தபட்சம் நாலு வரிக்கு ஒரு எடத்துலயாவது மூணு புள்ளியும் ஓர் ஆச்சர்யக்குரியும் போட்டிருப்பது நல்லாவே தெரியுது ...!

திடீர்ன்னு இவனுக்கு என்ன தமிழ்ப்பற்று வந்துருச்சுன்னு உங்களுக்கு தோணலாம், அதற்கு காரணம் சமீபத்தில படித்த ஒரு பதிவு . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு ரெம்பப்பிடிக்கும் . அவரயே ஒருத்தரு கயுவி,கயுவி ஊத்திருக்காரு . பரவலான வாசிப்பு அனுபவமும் , எழுதுகின்ற  அனுபவமும் இருக்க அவருக்கே இப்டின்னா ...?

சரின்னு இதப்படிச்சு முடிச்சு வீட்டுக்கு போனா அடுத்த அதிர்ச்சி அங்கே செலவுச்சிட்டையில காத்திருந்தது  ...!

பொதுவா , அம்மா எப்ப கடைக்கு போய் வந்தாலும் செலவுக்கணக்கு கண்டிப்பா எழுதீருவாங்க, அது அரரூவாயா இருந்தாலும் சரி ஆயிரம் ரூவாயா இருந்தாலும் சரி ...! பெரும்பாலும் நா வீட்டுல இருக்கும்போது என்னையதான் எழுதச்சொல்லுவாங்க . டாக்டர்களுக்கு போட்டியா அண்ணாச்சிக கிறுக்கீருக்கத, முட்டக்கிளாஸ் வெளக்கு வெளிச்சத்துல படிச்சு சிட்ட எழுதுறதுங்குறது சிறுவயதுல ஒரு பெரிய சவால் . உ.ப , து.ப ல்லாம் போட்டு சிட்டய முடிச்சா ரெண்டரையோ , மூனரையோ இடிக்கும். இதர செலவுன்னு போட்டு கணக்கு முடிக்கலாம்னா அம்மா வுடாது . யோசிச்சு யோசிச்சு கடசில கணக்கு நேர் பண்ணீரும் . அதுவரைக்கும் தூங்காது , தூங்கவும் வுடாது  ...! படிக்காட்டியும் , கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும்  இந்தியன் பாட்டி மாதிரி, ஒத்த ஒத்த எழுத்தா, அழுத்தி அழுத்தி எழுதி  அம்மா செலவு சிட்ட போட்டுட்டுதான் இருந்தாங்க  . இப்பத்தான் போடுறதுல்ல , உண்மைய சொன்னா போட முடியல. இப்பல்லாம், பெரும்பாலும் அண்ணாச்சி கடையில கூட ஆங்கிலத்துல தானே ரசீது தர்றாங்க, அதான் .  

நம்ம வீட்டுக்காரம்மா போன மாசம்தான் பட்டயப்படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்துருக்காக . அதுனால இந்த மாச செலவு சிட்டய அவுகதான் எழுதீருந்தாக. அதுலதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது ....! அது .....


மல்லிகை சாமான் வாங்கிய வகையில் செலவு ருபய் : 1150.00

என்னம்மா இப்டி எழுதீருக்கன்னு கேட்டா , நா என்ன பண்றது தமிழ்ல எழுதி நாலஞ்சு வருசமாச்சு, காலேஜ்ல புல்லா இங்கிலீசுலதான் படிச்சேன் , எழுதுனேன் அதான் அப்டிங்குராக .
என்னத்தச்சொல்ல ...!

ஆங்கிலோ இந்தியன் வீடுகள்ல வேல பாக்குற படிக்காத வேலைக்கார அம்மாவுக்கு , ஆங்கிலம் பேசத்தெரியும் , ஆனா படிக்கவோ , எழுதவோ தெரியாது . அந்த மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு நம்ம நெலம.


செம்மொழியான தமிழ்மொழியே
உனக்கிது பெரும் வலியே...!


வேண்டுகோள் : இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம் . என்னன்னு சொன்னீங்கன்னா திருத்திக்குவேன் .

சிபாரிசு : “அம்மா ,ஆடு , இலக்கணம்” அப்டிங்க்குற தலைப்புல கட்டுரையாளர் / எழுத்தாளர் என்.சொக்கன், தமிழ்பேப்பர் தளத்துல தமிழ் இலக்கணத்தொடர் எழுதீட்டு வர்றார் . தேவைப்படுபவர்கள் (சு)வாசித்து எழுதிப்பழகலாம் .


Jul 8, 2013

ஏதேதோ எண்ணங்கள்...!






ஞானும் ஞானி ...!

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தவமிருக்கும் ஒவ்வொரு முறையும் , உறவுகளுடனும் , நட்புகளுடனும் இன்னும் கொஞ்சம் பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் , கோபத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும் , பொறுமையாக இருக்கவேண்டும் , இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அழகனா, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நல்ல எண்ணங்கள்  மனத்தில் தோன்றுகின்றது . ஆனால் , உடல் கொஞ்சம் கொஞ்சமாக நலமாக ஆரம்பிக்கும் அதேசமயம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போக ஆரம்பித்துவிடுகின்றது.

அன்னக்கொடியும் அமீரும் ...!

அன்னக்கொடி படம் பார்த்த பின் அகில உலகத்திலேயே அளவில்லா ஆனந்தப்பட்டிருக்கக்கூடிய  ஒரே ஒருவர் – அமீர் . // என்ன மாமா தப்பிச்சுட்டோம்ல ....! //


ஹைய்யோ மானஸி ...!

லீலை படத்தின் ஒருகிளி பாடலில் பார்த்து ரசித்த “மானSEE”யை அதற்கப்புறம் எங்குமே ‘SEE’ர்க்கவில்லை . வெகு நாட்கள் கழித்து இதோ இப்பொழுது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் .
ஹையோ “மானSEE” ....! எவ்ளோ அழகான எக்ஸ்பிரசன்ஸ் ....! சான்சே இல்ல ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

சாலையில், நொறுங்கிய கண்ணாடிச்சிதறல்களை பார்க்கும் பொழுதும்  , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் ஆக்சிலேட்டரின் வேகம் தானாகவே குறைந்துவிடுகின்றது .  // அன்னிச்சை செயலா ? இல்லை உயிர்பயமா ?  //


வலிக்குது ....!

பகல் பொழுதுகளில் வரும் உடல் உபாதைகளைக்காட்டிலும் , இரவுகளில் வரும் உபாதைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் அப்படியொரு வலி வருகின்றதோ . யப்பா ...! முடியலப்பா முடியல...! வலி தாங்க முடியல ...!

பேச்சு எங்கள் மூச்சு ...!

விஜய் டிவியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” . அரைகுறை ஆடல் பாடல் நிகழ்ச்சியெல்லாம் ஆறு சீசன் தொடரும்போது, அவசியமான ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் ஒரே ஒரு சீசனோடு முடித்துக்கொண்டது , ரெம்ப வருத்தமாகவும் , கோவமாகவும் இருந்தது .

கோவம் இப்பொழுது சந்தோசமாக மாறிவிட்டது . இதோ போன வாரத்தில் இருந்து அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த சீசனை . ஞாயிறுகளில் காலை பத்து மணி முதல் பதினோருமணி வரை ஒளிபரப்புகின்றார்கள் . தவறவிடக்கூடாத நிகழ்ச்சி , அவசியம் பாருங்கள் .

சென்ற சீசனின் வெற்றியாளர் விஜயன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் , கவித சூர்யா வழங்குகிறார் .நன்றாகவே தொகுக்கின்றார் . என்ன SO தான் பாவம் பாடய்ப்படுத்துகின்றது .


என்ன கொடும சார் இது ...?

மேற்படி நிகழ்ச்சியில் பேசிய ஒரு பேச்சாளர் , இந்திய வரலாற்றிலேயே என்று சொல்லுவதற்குப்பதிலாக , இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே என்று சொல்லிவிட்டார் ....! தொலக்காட்சிபெட்டிகளின் வீரியம் அந்த அளவு இருக்கின்றது ....! இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்தமாக மழுங்கடித்துவிடுவார்கள் .


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .




Jun 26, 2013

கலவரக்காரனின் காதல் கடிதம் ...!






காதல் கடிதம் பரிசுப்போட்டியில் வலுக்காட்டாயமாக என்னை இழுத்துவிட்டதன் மூலம் , காதல் பூமியில் கலவரக்காரனை கட்டவிழ்த்துவிட்டான் சீனு ...! 

ஆங்கிலம் , பெண்கள் இரண்டுமே எப்பவும் எனக்கு அலர்ஜி தான் . ஆங்கிலத்தில பேசும்போது உணரும் அதே பதற்றத்தை பெண்களிடம் பேசும்போதும் உணர்வதுண்டு .  மனம் பதறி  தடதடக்க  ஆரம்பித்துவிடும் . காரணம் இல்லாமல் இல்லை, வீட்டிற்கு ஒற்றைப்பிள்ளை  . படித்தது குருகுலத்தில் . மொத்தத்தில் பெண்வாசமே இல்லை ....!

முப்பது  வருடங்களாக எனக்கு தெரிந்த , அறிந்த , பேசிய பழகிய ஒரே பெண் என் அம்மாதான் . அதிலும்  பதினைந்து வருடங்கள் விடுதி வாழ்க்கை . இப்பொழுது இரண்டு வருடங்களாக மனைவி . அதுவும் அம்மா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருந்தவர்,  இரண்டு வாரங்களுக்கு முன்தான் என்னுடன் வந்து இணைந்துள்ளார் .

பெண்களுக்கும் எனக்குமான தொடர்பு வானுக்கும் பூமிக்குமானது . எப்பொழுதாவது பெய்யும் மழை தான் ஒரே தொடர்பு . அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ இதுவரையில் என் வாழ்க்கையில் அப்படியொரு காதல் மழை பெய்யவே இல்லை , வறண்ட பாலைவனம்தான் . மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் நான் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டேன் பயந்துகொண்டு ...!

இன்று பாலைவனத்தில் பெய்யப்போகும் இந்த காதல் மழை ஒரு கற்பனைக் கான(த)ல் மழை...!


“தேவி”யில் ஆரம்பித்து , “அன்பே”, “ஆருயிரே” என்று தொடர்ந்து , “அழகான ராட்சசியே” என்பது வரை ஆளாளுக்கு அவர்களின் காதலியை ஆயிரமாயிரம் விதங்களில் விளித்துவிட்டார்கள் . நான் எப்படி விளிப்பது என்று விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருக்கின்றேன் . இப்படியே விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருந்தால் தாடி வைத்த முரளி ஆவதற்கான அதிகபட்ச வாய்ப்புக்கள் இருப்பதாகப்படவே, இப்பொழுதே ஆரம்பிக்கிறேன் உனக்கான... இல்லை... எனக்கான இல்லை ... இல்லை...  நமக்கான காதல் கடிதத்தை ...!

…………………………………………..!

( உனக்கான வெற்றிடத்தை நீயே இட்டு நிரப்பிக்கொள் எனக்காக ...! ).

ஒருவழியாக கடிதத்தை ஆரம்பித்தாயிற்று. அடுத்து ....? வழமை போல காதலாகி கசிந்துருகவேண்டும் இல்லையா ...! இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லா இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கின்றேன் .....! காதல் கசிந்துருகவில்லை , மெழுகுவர்த்தி உருகியதுதான் மிச்சம் . சரி , குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தால்...! ஆரம்பித்தால்...? கவிதை அருவியாகக்கொட்டவில்லை,  வேர்த்துத்தான் கொட்டுகின்றது ...! என்ன செய்ய…? வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றேன் ...?

கவிதையில் பொய் “அழகு” என்று சொல்கிறார்கள் . கவிதை எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருமுறையும் உன்பெயரையே எழுதி முடிக்கின்றேன் என்று “அழகு” சொல்ல எனக்கும் ஆசைதான் ...! என்ன செய்ய...? எவ்வளவு முயன்றாலும் கவிதை மட்டும் வரவே மாட்டேன் என்கின்றது . ( அப்ப , கடிதம் மட்டும் நல்லா வருதாக்கும்னு மனதுக்குள் ஒரு நக்கல் விக்கல் எடுக்குமே..? ஐ நோ , ஐ நோ ..! ).

சரி சொந்தமாகத்தான் கவிதை எழுத முடியவில்லை , மதன் கார்க்கியையோ , நா.முத்துக்குமாரையோ காப்பியடித்து கவிதை எழுதலாம் என்றால் தன்மானம் தடுக்கின்றது . என்ன செய்ய ...? கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்றே வளர்ந்துவிட்டேன்  ....! நோ ...! நோ ...! அதுக்காக கோணல் கவிதையெல்லாம் சொல்லி உன்னைக்கண்கலங்க  வைக்கமாட்டேன் ...! தைரியமாக மேலே படிக்கலாம் ....! ஹா ...! ஹா ...!

மொத்தத்துல என்னதாண்டா சொல்ல வர்ற ன்னு கேட்குமே உன் மனம் ...! என்னது கேட்கவில்லையா ...? ஆனால் என் மனம் கேட்கின்றது ...! பதில் தான் இல்லை என்னிடம் .  இதுதான் நான் என்று அறுதி உறுதியிட்டு எதையும் சொல்ல முடியவில்லை என்னால் . நிறம்மாறும்  பச்சோந்தியைப்போல மாறிக்கொண்டே இருக்கின்றேன் . நேற்றைய விருப்பம் , வெறுப்பு , கோபம் , பிரியம் , ஆசை எல்லாம் இன்று அப்படியே இல்லை அதே நேரத்தில் இல்லாமலும் இல்லை . நாளை எப்படி இருக்குமென்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை . ( கமல் படம் பாத்துட்டு வந்து கடிதம்(!) எழுதியிருப்பானோன்னு மைல்டா ஒரு டவுட் வருமே ..! ஹா...! ஹா ...! ஐ நோ ...! ஐ நோ ...!).

எவ்வளவு தான் டார்ட்டாயிஸ் மாதிரி  சுத்தி சுத்தி யோசித்துப்பார்த்தாலும் முதன் முதலில் உன்னை எங்கே பார்த்தேன் என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆல் அவுட் ஆகிவிடுகின்றேன் . அதற்காக அப்படியே விட்டுவிடமுடியுமா ...? மீண்டும், மீண்டும் யோ...சிக்கி...ன்றேன் ....!

யுரேகா ...! யுரேகா ...! என்னை அழிக்க வந்த அணுகுண்டை கண்டுகொண்ட கணத்தை  கண்டுபிடித்துவிட்டேன் ...! ஆம் , நீயொரு அணுகுண்டுதானே...! என்ன, அணுகுண்டு மொத்தமாக அழிக்கும் , நீ அனு அனு வாக அழிக்கின்றாய் ..! அவ்வளவுதான் வித்தியாசம் .

தண்ணியடிக்க வரும்பொழுதுதான் முதன் முதலாக உன்னைப்பார்த்தேன் . நோ...! நோ...! அந்தத்தண்ணி இல்லம்மா, நம்ம தெரு முனையில இருக்கும் அடிபைப்பில் தண்ணியடிக்க வரும்பொழுது தான் முதன்முதலில் உன்னை  பார்த்தேன் . தப்புத்தப்பா யோசிக்கக்கூடாது, என்ன சரியா ...? பேசுறதையும் , எழுதுறதையும் பார்க்கும்பொழுது தண்ணியடிச்சுட்டு உளறுவது மாதிரி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் , அழகில்லாமலும் இருக்கும். உண்மை எப்பொழுதுமே பார்ப்பதற்கும் , படிப்பதற்கும் , கேட்பதற்கும் அழகற்று உளறுவது போல தானே இருக்கும் ...! 

அரைத்தூக்கத்தில் , அதிகாலை வேளையில் தண்ணியடிக்க வந்த என் மனம் தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டது நங்கை உன்னைப்பார்த்த பின். கிஞ்சித்தும் ஒப்பனையின்றி, தூக்கத்தில் கலைந்த முடி முன் நெற்றியில் நடனமாட ,  மங்கை நைட்டியை மடித்துக்கட்டி பக்கத்துவீட்டு அட்ராசிட்டி அத்தையிடம் நீ மல்லுக்கட்டிய பொழுதுதான் முதன் முதலில் உன்னைப்பார்த்தேன் . யப்பா ...!  நீ பேசியதெல்லாம் தேனாக காதில்  வந்து பாய்ந்தது என்று சொன்னால் என்னைப்போன்ற பொய்யன் இந்த உலகத்தில யாரும் இருக்கமாட்டார்கள்  , நீ பேசிய வார்த்தைகள் எல்லாமே ஈயத்தைக்காய்ச்சி ஊத்துவதை போலத்தான் இருந்தது . ஆனாலும் எனக்குப்பிடித்தது ... ஏனென்றால் நீ பேசியது உண்மையையும் , நியாத்தையும் . அந்த நிலையில்  உன்னைப் பார்த்ததும் காதலெல்லாம் வரவில்லை , கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது   .

அதற்கடுத்தடுத்த நாட்களிலும் அதிகாலையில் கொஞ்சம் பயத்துடனும் , கொஞ்சம் குறுகுறுப்புடனும் தண்ணியடிக்கவந்தேன் உன்னைப்பார்ப்பதற்காகவே. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி முகமூடி போட்டுக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருக்கும் நீயும் , உன் நடவடிக்கைகளும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது  .

தண்ணீர் மெதுவாக வருகின்றது என்று அனைவரும் வருத்தப்படும்போது எனக்கு மட்டும் சந்தோசம் கரைபுரண்டோடும், உன்னை இன்னும் சிறிது நேரம் பார்க்கலாமே என்று. விடுமுறை முடிந்து விடுதி திரும்பும் மாணவன் எப்படி பேருந்து மெதுவாகச் செல்லவேண்டும் , பள்ளி மெதுவாக வரவேண்டும் என்று மனத்திற்குள் எண்ணுவானோ, அதேபோல நானும் சமயங்களில் தண்ணீர் மெதுவாக வரவேண்டுமென்று எண்ணியம்துண்டு.  

எதிர்பார்த்த ஒரு நாளில் எனக்கு பிறந்த நாள் என்று ஆரஞ்சு மிட்டாயுடன் என் முன்னே நீ நின்றது இன்னும் என் கண்ணில் அப்படியே இருக்கின்றது . சம்பிரதாய வாழ்த்து கூட சொல்லாமல் , ஓ அப்படியா என்று உடல்மொழியில மட்டும் சொல்லிவிட்டு , மிட்டாயை மட்டும் எடுத்துக்கொண்டேன் . சில நாட்கள் ஆரஞ்சு மிட்டாயை அப்படியே வைத்திருந்து பின் சில பல வண்டுகள் தேனெடுக்க முயல்வதை அறிந்த அடுத்த நொடியே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டேன்- என்ன செய்ய ஆசையும் , பொறாமையும் கொண்ட  சராசரி  மனிதன்தானே   நானும் ...!

நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!

ஒவ்வொரு காதலும் கண்டிப்பாக கல்யாணத்தில் தான் முடியவேண்டும் என்றோ , இல்லை கருமாதியில் தான் முடியவேண்டுமென்றோ அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை . அப்படிப்பட்ட காதல் தான் வெற்றிபெற்ற காதல், அமரக்காதல் , என்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை . காதலையும் கல்யாணத்தையும் என்னால் தொடர்பு படுத்தவே முடியவில்லை . நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவரை காதலிக்கின்றோம் . அதற்க்காக காதலிக்கும் அத்தனை போரையும் திருமணம் செய்து கொள்ளமுடியுமா இல்லை திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்று ஒவ்வொருமுறையும் மரித்துத்தான் போகமுடியுமா ...? நான் ஒரே ஒருவரை மட்டும் தான் என் வாழ்வில் காதலித்தேன் என்று யாராவது சொன்னால் அதை விட பெரிய வேஷம் வேறெதுவும் இல்லை என்றுதான் நான் சொல்வேன் .

ஒருவேளை பரஸ்பரம் விருப்பமிருந்தும் நாம் இணையமுடியாவிட்டாலும் , அதற்காக நான் வருந்தமாட்டேன் . நீயும் வருந்தவேண்டிய அவசியமில்லை . காதலின் வெற்றியை திருமணத்தின் மூலமும் , தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதின்மூலமும் மதிப்பிடுவது முட்டாள்தனமாகவே எனக்கு படுகின்றது . திருமணம் என்பதை  ஒரு சடங்காக, ஒரு விதிமுறையாகத்தன்  பார்க்கின்றேன் . வரைமுறை மீறாதாவர்களுக்கு விதிமுறை தேவையில்லை என்பவர்களின் எண்ணமே என் எண்ணம்  .

ஒருவேளை நாம் இணைந்தால் , நான் உனக்கு முழு சுததந்திரம் தருவேனென்று சொல்லமாட்டேன் . உனக்கான சுதந்திரமும் , உனக்கான கட்டுப்பாடுகளும் உன்னிடம் தான் இருக்கின்றது . உன் நிறை குறைகளுடன் உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் . அதே போல் நீ என்னை அப்படியே  ஏற்றுக்கொள்ள மட்டுமே விரும்புகின்றேன் . உனக்காக நானும் , எனக்காக நீயும் ஏன் நமது தனிப்பட்ட விருப்பங்களை , வெறுப்புகளை மாற்றிக்கொள்ளவேண்டும் . எனக்கு அதில் உடன்பாடில்லை. வற்புறுத்துவதும் , வற்புறுத்தப்படுவதும் கூட வன்முறைதானே ? நீ நீயாக இரு நான் நானாக இருக்கின்றேன் . உனக்கு கொடுக்க என்னிடம் எந்த வாக்குறுதிகளும் இல்லை, கட்டுப்பாடுகளும் இல்லை . உன்னை ,உன் செயலை எனக்கு பிடித்திருக்கின்றது , நாம் இணைந்து வாழ்ந்தால் நான்றாக இருக்குமென்று தோன்றுகின்றது . உனக்கும் என்மீது காதலிருந்தால் , இணைய விருப்பமிருந்தால்,இணைய சாத்தியப்பட்டால் சந்தோசம் .

நாம் இணைந்தாலும் இணையாவிட்டாலும் , தனிமையான ஜன்னல் ஓரத்து பேருந்துப்பயணமும்  , பின்னிரவின் நிசப்தமும்  , தெருவோர குழாயடிச்சண்டையும் , மொட்டைமாடி தூக்கமும் , வண்ணதாசனின் புத்தகங்களும் ஆரஞ்சுமிட்டாயும் இன்னும் எத்தனை எத்தனயோ விசயங்கள் எப்பொழுதும் என் காதலை உயிர்ப்புடனேயே  வைத்திருக்கும் ...!


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு .


இது எனது  சொந்தப் படைப்பு என்று உத்திரவாதம் கொடுக்கின்றேன்  ...!


Jun 22, 2013

ஸ்ரீராம் பார்த்தசாரதி மீட்டும் ஆனந்த யாழ் ...!




ஆயிரக்கணக்கான திரைப்பாடகர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில குரல்கள் மட்டும் ரெம்பப்பிடிக்கும் . அப்படி எனக்கு ரெம்பப்பிடித்த இருவரில் ஒருவர் “ஸ்ரீராம் பார்த்தசாரதி” மற்றொருவர் “பல்ராம்” . இருவருக்குமே தனித்தன்மையான குரல் . ஏதோ ஒரு வகையில் என்னைக்கட்டிபோட்டுவிடும் குரல்கள் இருவருடையதும்.

ஸ்ரீராம் குரலை எங்கு எப்பொழுது கேட்டாலும் எனக்கு பழைய அல்லது பால்ய நினைவுகள் தான் வந்து வருடும் . ஆங்கிலத்தில் NOSTALGIA என்று சொல்வார்கள் அதேபோலத்தான்  . அந்த நினைவுகளில்  சந்தோசம் , துக்கம் எல்லாம் கலந்தே வரும் , அது ஏனென்றே தெரியவில்லை . ஆனால் ரெம்பப்பிடிக்கும். அதனால் தெரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை ..

ஸ்ரீராம் குரல்ல எப்பவுமே ஓர்  Ancient Touch இருப்பதாகத்தான் எனக்குத்தோன்றுகின்றது . அது எந்தவகையான பாடல்களாக இருந்தாலும் சரி . “அதைக்கூடவா” என்று தொடங்கும் ஜெயம்கொண்டான் படத்தில் வரும் பாடல் , கஜினியில் “சுட்டும் விழிச் சுடரே” , கோ படத்தின்  – “வெண்பனியே” , பிதாமகனில் – “இளம்காத்து வீசுதே” என ஸ்ரீராம் பாடிய பாடல்கள் எல்லாமே கடும்குளிருக்கு இதமாய் இருக்கும் கம்பளி போல் அவ்வளவு பிடிக்கும் .

நேற்றுதான் முதல்முறையாக ராமின் “தங்கமீன்கள்” கேட்டேன் . யுவனின் ஆன்மாவிலிருந்து இசை என்று போட்டிருந்தார்கள் . உண்மைதான் மிகையில்லை . ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாட்டுகள் என்று நினைக்கின்றேன் . “ஆனந்த யாழ்” ஒரே ஒரு பாடல்தான் கேட்டேன் , கேட்கிறேன் , கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் . மற்ற பாடல்கள் கேட்கவே இல்லை . ஒன்றே  போதும் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது  .

அப்பா தன் மகளை பற்றிப்பாடும் பாடல் . நிச்சயமாக அப்பாக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ரெம்ப்பப்பிடிக்கும் .. மிக எளிமையான , ரசனையான வரிகள் , அதிராத இதமான இசை இதையெல்லாம் விட ஸ்ரீராமின் மயிலிறகான குரல் .

இந்தப்பாடலை ராம் எப்படிக்காட்சிப்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை . பறவையே எங்கு இருக்கிறாய் “ என்று கற்றது தமிழ் –ல் வரும் பாடல் காட்சியமைப்பு, நிச்சயமாக நான்றாகவே செய்வார் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது .


இதுவரை இந்த பாடலை கேட்கவில்லை என்றால் நிச்சயமாக் கேட்டுப்பாருங்கள் ....! ஒன்று உங்கள் குழந்தையின் நினைவுகள் வந்து போகும் இல்லை உங்கள் பால்யத்தின் அப்பாவுடைய  நினைவுகள்  உள்மனதில் வந்துமோதும் .

பாடல் வரிகள் இணையத்திலிருந்து ....

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

நா.முத்துக்குமார் .

பாடல் ...



என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .