Jun 9, 2020

#பேசாத_வார்த்தைகள்~090620




ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களோடு வந்திருக்கும் பொன்மகளைப் பார்க்க வாய்க்கவுமில்லை ; நேரவுமில்லை. வேண்டி , விரும்பித் தேடிப் போய் பார்த்தாயிற்று. படம் வந்த ஒரு வாரத்திற்கு எல்லோரும் அதைப்பற்றியே பேசியும், எழுதியும் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் பார்க்காமலிருப்பது ஏதோ ஒரு தசாப்தம் பின்தங்கியிருப்பதைப் போன்றதொரு நினைப்பு. இப்போதான் நார்மலான அப்டேட்டான மாதிரி ஒரு ஃபீல் வந்திருக்கிறது. படம் பேஷ்புக்ல ஊமக்குத்தா குத்திக்குதறியது போல மோஷமில்லை. பேஷ்புக்ல புழங்காதவர்களுக்கு ரெம்பவே புடிக்கும்கூட. 

படம் ஆரம்பித்து முதல் பதினைந்து நிமிடங்கள் சத்ய சோதனை . சீரியல் பார்க்குறோமா இல்லை படம் பார்க்குறோமா என்றிருக்கிறது. அடுத்த ஒண்ணே கால் மணி நேரம் ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்ப்போல , அதே நேரம் நிதானமாக நகர்கிறது. அதற்கடுத்து மறுபடியும் சீரியல் டோன். வாதிட்டுத் தோத்துருந்தா கூட படம் இன்னும் பெட்டராயிருக்கும்னு நினைக்குறேன். கண்ணீரும் கம்பளையுமா நீதி கேட்டு வெண்பா நிற்பது, எதார்த்தமெனினும், அதனால் தீர்ப்பு மாறுவது என்பது அட போங்கப்பா என்றாகிவிடுகிறது. வெண்பா அழ அதிலிருந்து ஒவ்வொருத்தரா அழ , கடைசியில் சுவத்தில மாட்டியிருந்த காந்தித்தாத்தா கூட கண்ணாடியைக் கழட்டிட்டு ரெண்டு செக்கண்ட் கண்ணைத் தொடைத்திருப்பார்.

லக்ஷ்மி சரவணகுமார் வசனங்கள் நல்லாயிருக்குறதுல ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஜோதி என்ற பெயர் அவர்தான் வைத்திருப்பார் என்றெண்ணுகிறேன். ஒரு பதிவில் இந்தப் படம் ஸ்மால் பட்ஜெட்லதான் முதலில் திட்டமிடப்பட்டது, பிறகு சூர்யா&ஜோதிகா கைக்கு போனதும் பெரிய பட்ஜெட்டாக மாறிடுச்சு என்று எழுதியிருந்தார் . ஸ்மால் பட்ஜெட் பொன்மகளாகவே வந்திருந்துருக்கலாம்.

திருமணத்திற்குப் பிறகான ஜோவுக்கென ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயல்கிறார்கள் போல. 36 வயதினிலே நீங்கலாக அனைத்துப் படங்களிலும் முறைப்பும் விறைப்புமாகவே வரும் ஜோதிகா இதில் கூடுதலாக கண்ணீருடனும். பட்ஜெட் பெரிதானதால் "பா" சீரிஸ் நடிகர்கள் , தியாகராஜனையெல்லாம் காஸ்டிங்கில் சேர்த்திருக்கிறார்கள். "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி ஃபுட்" என்று ஓர் ஆங்கிலச் சொலவடை உண்டல்லவா, அதுபோல ஆயிற்று. தொலைக்காட்சிகளில் குற்றம் நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று காண்பிப்பார்கள் , அதுபோல செயற்கையான திணிப்பாக இருக்கிறது மேற்படி நடிகர்கள் பங்கு . இளவரசு , ஜெய்பிரகாஷ் , எம்.எஸ்.பாஸ்கர் இதுபோன்ற நடிகர்கள் ஆப்டாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஜோதிகா பேசும் "வால்கையிழ" வஷனம் ~ ப்பா! நல்ல வசனத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க தேவதை. கோர்ட்டே கூண்டுமாதிரி தான் இருக்கு , ஒரு சிறிய ஊரின் கோர்ட் அப்படித்தான் இருக்கும்கூட , ஆனால் அதை டிசைன் டிசைனான கோணத்தில் படம் பிடித்திருப்பது ஏதோ வேடிக்கை காட்டுவது போலுள்ளது. "வா செல்லம்"பாடலின் அனேகக் காட்சிகளில் ஜோவின் தோற்றமும் முகபாவமும் காலம் சென்ற நடிகை ஸ்ரீ வித்யாவை நினைவுபடுத்துகின்றது ~அழகு. 

பார்த்திபன் தனக்கான வசனத்தை தானே எழுதியிருப்பார் போல , வழமைபோல வார்த்தைக் கபடி ஆடியிருக்கிறார். எனக்குப்பிடித்த வி.ஜே.ஆஷிக்கிற்கு அறிமுகம். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள். வெண்பா~ ஏஞ்சல் ஆள்மாறாட்டத்தை பார்த்திபன் வரையும் ஓவியம் மூலம் நுணுக்கமாக சொன்ன டைரக்டர், காவலாளிக்கு லஞ்சம் கொடுத்து கூட்டி வருவது போன காட்சிகளை யோசித்தவர் சென்டிமெண்டை தவிர்த்து அல்லது குறைத்து ஒரு கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராவே தந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்துருக்கும் என் பது எனது அபிப்பிராயம். மற்றபடி பார்த்திபன் சுப்பு சந்திப்பில் அந்த சர்வர் ஏன் தழும்ப தழும்ப சரக்கை கோப்பையில் ஊற்றுகிறார், எதுவும் குறியீடா!? போலவே பிரதாப் போத்தன் பொட்டி வாங்குவது, தியாகராஜனை கோர்ட்டுக்கு வரவழைப்பதற்காகவா இல்லை உண்மையிலேயே விலைபோய்விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை✨

★★★★★★

ஏ. கே.செட்டியார் அவர்களின் "உலகம் சுற்றும் தமிழன்" புஸ்தகம் வாசித்துகொண்டிருக்கிறேன். சுமார் 80 வருடங்களுக்கு முன்பாக செட்டியார் அவர்கள் அவரின் பருவ வயதில் பல்வேறு உலக நாடுகளுக்கு மேற்கொண்ட பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. அதிர்ட்டம் வாய்ந்த ஆத்மா. எத்தனை பேருக்கு வாலிபத்தில் வாய்க்கும் இந்த வாய்ப்பு. பார் என் மொழிப் பாண்டித்யத்தை என்றில்லாமல் மிக மிக எளிய நடையில் வாசிக்கும் வண்ணம் புஸ்தகம் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

முதல் அத்தியாயம் மகாத்மா காந்தியடிகள் பற்றி. உலக நாடுகளுக்கு இந்தியாவின் முகமாக காந்தி இருந்திருக்கிறார் ; இருக்கிறார். ஹாவாய் தீவுகள் பற்றிய குறிப்புகளும் , விவரணைகளும் நேரில் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றது.

அமெரிக்காவின் நிறவெறியை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். இன்றும் அது தொடர்வதை நினைக்கையில் உள்ளபடியே வருத்தம் தருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தான் அதீதமான நிறதுவேஷம் என்று சொல்கிறார். இப்போது நிலைமை எப்படியென சீனுவிடம் கேட்கவேண்டும். அனேக நாடுகளில் பாரிஸ் நீங்கலாக டர்ப்பன் கட்டாத இந்தியர்கள் நீக்ரோக்களைப் போலவே நடத்தப்படுவதாகவும் சொல்கிறார். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடுத்தவராக இருந்தபோதிலும், பிரெசிலை கண்டுபிடித்து பின் அதை புஸ்தகமாக வெளியிட்ட அமெரிக்கோ வெஸ்புக்கி பெயர்தான் அந்நாட்டிற்கு சூட்டப்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியமென்பதற்கான உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் ஓர் அத்தியாயம் என்று முறை வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். முழுமையாக வாசித்துவிட்டு மீண்டுமொருமுறை ஆவணப்படுத்த வேண்டும். நாட்டுக்கு பேர் வைக்காவிடிலும்✨


★★★★★★

நண்பரொருவர் தனது மகளுக்கு ரூபாய் முப்பத்தைந்தாயிரம் கட்டி ஜனவரியிலேயே எல்.கே.ஜி சீட் வாங்கியிருந்தார். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான். ஊரில் பெயர்பெற்ற பள்ளி இப்போதே சீட் வாங்கினால்தான் ஆச்சு என்ற முன்திட்டமிடல். என்னையும் வேறு வற்புறுத்தி கடைசியில் மகள் மீது அக்கறையில்லாதவன் என்று என்னையே எண்ணவும் வைத்துவிட்டர் . ஆனாலும் நான் அசரவில்லை . இப்போது கோரோனோ காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகிறதல்லவா. கூடுதலாக கரோனா டூரிஸ்ட் விசாவில் வரவில்லை , வொர்க் பரமிட்டில் வந்திருப்பதால் இரண்டு வருடங்கள் நம்மோடு வாழப்போகிறது என்றும், ஆதலால் இந்த வருடம் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற வாட்ஸாப் செய்தியையும் படித்துவிட்டு, நண்பர் பள்ளிக்கு போய் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார். வாய்ப்பில்லை ராஜா , போங்க போய் ஆன்லைன் வகுப்புக்கு தயார் படுத்துங்கள் என்று சொல்லி ஒரு சிட்டையை கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். சிட்டையில் 40 அங்குல ஸ்மார்ட் டி.வியோ அல்லது உள்ளங்கை அகல ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஸ்மார்ட் போனோ வாங்கச்சொல்லி சிபாரிசித்திருக்கிறார்கள். கூடவே 4ஜி வேகத்தில் தங்கு தடையற்ற இணையமும். முப்பதைந்தாயிரம் இப்போ ஐம்பதாயிரமாக எகிறியிருக்கிறது. எல்லாம் செலவு பண்ணி , மாலை 4 to 5 ஆன்லைன் வகுப்புக்கு மகளை அமரச்சொன்னால் போராடிக்குதுப்பான்னு பத்து நிமிசத்தில் ஓடிவிடுகிறாளாம். சொல்லிப் பொருமிக்கொண்டிருக்கிறார் . உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அதெல்லாம் போகப்போக சரியாயிடும்னு சமாதானம் சொல்லி தேற்றி வைத்தேன்.

ஏம்பா ஆய்போகத் தெரியாத குஞ்சு குலுவானுகளுக்கெல்லாம் ஆன்லைன் வகுப்பா!? ன்னு கேட்கத்தோன்றுகிறது. அநேகமாக அடுத்த கல்வியாண்டிலிருந்து , பள்ளிக்கூடக் கொள்ளையில் புஸ்தகம், சீருடை , ஷூ லிஸ்டில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் , மோடமெல்லாம் சேர்ந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை✨


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு







Jun 4, 2020

#பேசாத_வார்த்தைகள்~040620





அச்சுப் புஸ்தகம் வாங்கி ஆண்டுகள் சில ஆயிற்று. ஏற்கனவே வாங்கிய புஸ்தகங்களில் அன்பளிப்பாகக் கொடுத்ததுபோக கைவசமிருந்த ஒன்றிரண்டையும் தர்ஷினி தன் விளையாட்டு பொம்மைகளாக்கிவிட்டாள். எந்தப்புஸ்தகத்தையும் கிழிப்பதில்லை ; ஆனால் கிறுகிறுக்க வைக்குமளவிற்கு கிறுக்கிவைத்து விடுவாள். பிறகு எங்கேயாவது கண் காணாத இடத்தில் கொண்டுபோய் கிடத்திவிடுவாள். வீடடங்கிய காலத்தில் சுத்தம்பண்ணும்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பை அலமாரியின் அடியிலிருந்து கண்டெடுத்தேன். அவசியம் வாசிக்க வேண்டிய ஐந்து தமிழ்ப் புஸ்தகங்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டதில் ஒன்று புதுமைப் பித்தனின் சிறுகதைகள் என்று நினைவு. எவ்வருடம் என்று துல்லியமாக நினைவில் இல்லை, கோவை கொடிசீயாவில் நடைபெற்ற புஸ்தகக் கண்காட்சியில் மலிவு விலையில் வங்கியது. கூடுதலாக வண்ணதாசனின் 2 புஸ்தகங்களும் , எஸ்.ரா அவர்களின் 4 புஸ்தகங்களும், மகள் தர்ஷினிக்காக இரண்டு புஸ்தகங்களுமாக சுமார் இரண்டாயிரம் சில்லறைகளுக்கு கொள்முதல் செய்திருந்தேன். புஸ்தகங்களுக்காக ஒரே தவணையில் அதிகமாக முதலீடு செய்ததில் இபோதுவரைக்குமான என் வாழ்நாள் உச்சம் அது. கொடிசீயா , பிரதான சாலையிலிருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமையப்பெற்றது. போகும்போது கைகளை வீசிக்கொண்டு சென்றதில் அயர்ச்சி தெரியவில்லை. உள்ளே சுற்றியலைந்து கணிசமான எடையோடு வெளியேறியபோது சோர்ந்துவிட்டேன். திரும்பும்போதும் நடராஜாவில் பிராயணப்பட்டு பாதி வழியில் தூக்கமுடியாமல்போகவே, வாடகை ஆட்டோ அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்ததும் நினைவிலிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு 900 பக்கங்கள் கொண்ட கெட்டிப் பதிப்பு, திருமகள் பதிப்பகத்தார் அசல் விலையிலிருந்து பத்து சதவீதக் கழிவில் கொடுத்தார்கள். 300ம் சில்லறையுமானதாக நினைவு. விலை தான் மலிவேயொழிய புஸ்தகத்தின் உள்ளடக்கமும், வடிவமைப்பும் அபாரமான தரம். சற்றேறக்குறைய 100 சிறுகதைகள் இருக்கும். கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு நுணுக்கமாக மொய்ப்பு பார்த்திருப்பார்கள் போல. பளிச்சென வெள்ளைத்தாளில் தாராளமான சமூக இடைவெளியோடு அச்சிடப்பட்ட புஸ்தகம். மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஆத்மார்த்தமாக புத்தகத்தை வடித்திருக்கிறார்கள் திருமகள் பதிப்பகத்தார். இன்றையிலிருந்து சுமார் 80 முதல் 90 வருடங்களுக்கு முன்பாக பல்வேறு பத்திரிக்கைகள், சமிஞ்கைகளில் வெவ்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள். நூறு வருடங்களை எட்டிபிடிக்கப்போகிற கதைகளாயினும் இப்பொழுதும் வாசிப்பின்பத்தைத் தருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத கதைகள் , வாக்கியங்கள் பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி புரிகிறது. புதுமைப் பித்தனின் வார்த்தைத் தெரிவுகள் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. வாக்கியங்களை அடிக்கோடிடுவது போல நான் வார்த்தைகளை மொபைல் நோட்புக்கில் குறித்துக்கொள்வதை பழக்கமாக்கியிருக்கிறேன். இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தனித்த நேரம் எதுவும் ஒதுக்கிக்கொள்ளாமல் குழந்தையைக் கொஞ்சுவதுபோல அவ்வப்போது வாசிப்பதுண்டு. புஸ்தகத்தின் அசவுகரியமாகப்படுவது , அதன் எடை . ஆசையாக மடியில் எடுத்து வைத்தோ ; மல்லாக்கப் படுத்துக்கொண்டோ வாசிக்கயியலவில்லை என்ற வருத்தமிருக்கிறது. ஓங்கி அடித்தால் ஒன்னரை டன் வெயிட் கணக்காக கனக்கிறது✨

★★★★★★


மல்லிகைப்பூ என்றவுடன் நிறம் , மணத்திற்கு அடுத்து எனக்கு நினைவுக்குவருவது தமிழ்ச்சினிமாவின் முதலிரவுக் காட்சிகள் , வடிவேலுவின் மதுரை மல்லி நகைச்சுவை , குஷ்புவுக்கு முன்பான மல்லிகைப்பூ இட்டலி என்ற பதம். மல்லிகை என்று தொடங்கும் பாடல்கள் மட்டுமே அம்பதுக்கும் பக்கம் தமிழில் வந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பாக மல்லிகைப்பூ ஒரு முழம் கேட்டதுக்கு 120 ரூபாயென்றார் பூக்காரம்மா. நொடிநேரம் சூப்பர் ஸ்டாராயிப்போனேன். இப்போது கிலோவே நூறு ரூபாய்தானாம். சமீபமாக "மாலை நேரம் மல்லிப்பூ மல்லிப்பூ" என்றொரு பாடல் அடிக்கடி தொலைகாட்சி இசைச் சேனல்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. தர்ஷினிக்குப் பிரியமான பாடல். பாக்கியராஜ் போல பகுமானமாக கைகால்களை நீட்டி மடக்கி நடனம் புரிவாள். இசையும் , குரலும் பின் மல்லிப்பூவும் உந்தித்தள்ள மேலதிக தகவல்களைக் கண்டடைந்து  படத்தை தரவிறக்கினேன். படத்தின் நாமம் ஏ 1. நாமம் மட்டுமே.

முதல் ஐந்து நிமிடங்கள் தொல்லைக்காட்சிகளின் விருது வழங்கும் விழாவில் காட்டப்படும் கிளிஷேவான ஆவணப்படம் போன்ற ஒன்றை எச்சரிக்கையாக ஒளிபரப்புகிறார்கள். உஷார்ப்பேர்வழிகள் அக்கணமே லேப்டாப்பை மூடியிருப்பார்கள். எண்ட்ரீ சீன்ல சந்தானம் டூ வீலர்லேயே கிணறு தோண்டுகிறார். பிறகு நாலைந்து சீனியர் சிட்டிசன்ங்களை ஜாக்கிசானாக மாறி அடித்துத் துவைத்து விரட்டுகிறார் . இசையமைப்பாளர் வயலினை நம் கழுத்துச் சங்கில் வைத்து மீட்டுகிறார். இட்டலி ; சட்னி ; பொங்கல் எல்லாம் வைத்து ஒரு அட்வைஸ் படையலொன்று பிரேக் அப் சீனில். அப்பிடியே சுவத்தில் போய் முடிக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் அடுத்த வசனத்தில் ஈடு செய்துவிடுகிறார்கள். 

சந்தானம் படத்தில் அவரைத்தவிர வேறு யாரையும் நாம் கவனிப்பதுமில்லை ; கவனிக்கவைக்கும் அளவிற்கான யாரும் எவரும் வெளிப்படவுமில்லை. சந்தானமே அதைத்தான் விரும்புகிறார்போல. சந்தானம் மூவிங்குற லேபிளே போதுமென. உண்மையிலேயே சந்தானம் உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்.  புல்லட் புரூஃப் போல எப்போதும் லொள்ளு "ஷப்பா" டீமை தூக்கி சுமக்காமலும்;  நாலைந்து படங்களுக்கு அக்குளில் இருக்கும் நக்கல்களை அடியில் போட்டு நசுக்கிவிட்டும் ,  இயக்குனர் ஒருவரிடம் தன்னை ஒப்புக்கொடுப்பாரேயானால் நிச்சயம் பிரகாசிப்பார் என்றே எண்ணுகிறேன். படம் முழுவதும் சிரிப்பு நடிகர்கள் தான். ஆனால் பாருங்கள் முதல்சிரிப்புக்கு முப்பத்தைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டியத்திருக்கிறது. சுந்தர்.சி ரகப் படம். சுமாராக வந்திருக்கிறது✨

★★★★★★

வழக்கமான கோடைகாலங்களில் வரும் சீசனல் தண்ணீர் சிக்கன அக்கறை இவ்வருடம் கரோனா காரணமாக நித்திரையிலிருக்கிறது. இன்றும் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதி மட்டும்தான் கொண்டிருக்கிறோம் , காவல் துறை உங்கள் நண்பன் என்பதினைப்போல. நான் ஏற்கனவே சொல்லியதைப்போல , ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், ஆலைக்கும் தண்ணீர் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவேண்டும். நாம் எவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோம் விரயமாக்குகிறோம் என்று தெரியாமலே , அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலே அலட்சியமாக இருக்கிறோம். தெருக் குழாயில் தண்ணீர் கொணர்ந்து பயன்படுத்திய போது நாம் செலவழித்த தண்ணீரை விட இப்போது ஐந்து மடங்கு அதிகம் செலவழிக்கிறோம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. முன்பு  உள்ளங்கை நிறைய தண்ணீர் மோந்து முகம் கழுவிய இந்தியன் இப்போது குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறான் என்று சொல்கிறது பிறிதொரு புள்ளி விவரம். தவமாய்த் தவமிருந்து படத்தில் , கிராமத்தில் இருக்கும் பெற்றோரை மகன் சேரன் நகரத்து அப்பார்ட்மென்டுக்கு கூட்டி வந்திருப்பார். டாய்லெட் போய் வந்த சரண்யா பொன்வண்ணன் என்ன தம்பி இந்தக் கக்கூஸ்ல போற தண்ணிய வெச்சு ஒரு போகம் விவசாயமே பார்த்துடலாம் போலயே என்பார். இது ஓர் உதாரணம்.
இப்பொழுது மின்சாரம் தனியார் மயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்து நிச்சயமாக தண்ணீராகத்தான் இருக்கும். கோவையில் போனவருடமே அதற்கான முஸ்தீபுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. எதிர்ப்பு காரணமாக கொஞ்சம் பொறுதிருக்கிறார்கள் அவ்வளவுதான். அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் தனது துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனில் அதற்கான எளிய வழியாக கைகொள்வது தனியாருக்குத் தாரைவார்த்தல் என்பதுதான். இயன்றவரை தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தப் பழகுங்கள். குழந்தைகளைப் பழக்குங்கள். இல்லையெனில் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதுவதற்கு தேவையே இராமல் போய்விடும் வரும் தலைமுறைக்கு✨



என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.