May 26, 2020

பேசாத வார்த்தைகள் ~ 260520

பேசாத வார்த்தைகள் ~ 260520



சொந்த வேலையொன்றை நிறைவேற்றும் பொருட்டு சுமார் இரண்டு மாத காலங்களுக்குப்பிறகு மாநகருக்குள் பிரவேசித்து வந்தேன். உம்பன் புயலால் வெக்கை தணிய வாய்ப்புள்ளதாக சொல்லியிருந்தார்கள். வெளிச்சென்றுவர எத்தனித்ததற்கு அதுவுமொரு காரணம். பத்துமணிக்கு மேலாக பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மனித மற்றும் எந்திர பழுதுநீக்கும் நிலையங்களிலும், மருந்துக்கடைகளிலும் கணிசமான கூட்டத்தைக் காணமுடிந்தது. ஏனைய ஸ்தாபனங்களில் மருந்துக்கும் மனிதர்களில்லை. கவசத்துடன்கூடிய கடைச் சிப்பந்திகள் கரோனாவை நொந்துகொண்டு வெம்மையில் வெந்துகொண்டிருந்தனர். வியாபார ஸ்தலங்களில் குளிர்சாதன வசதியை இயக்கினால் அறுபது நாட்களுக்கு கடை சீல் வைக்கப்படுமாம். அநேகர் விதியை பின்பற்றுகின்றனர். அதேசமயம் அலுவலகங்களில் விதி காற்றில் பறக்கிறது. 

சென்ற வேலை தாமதமாகியதால் நண்பரின் அலுவலகம் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். நண்பர் அசைவப் பிரியர். இருவருமாகச் சேர்ந்து மதியச் சாப்பாட்டிற்காக மட்டன் பிரியாணி வழங்கும் கடையைத் தேட ஆரம்பித்தோம். எக்கடையிலும் அமர்ந்துண்ண அனுமதிக்காதபடியால் கடைசியில் தலப்பாக்கட்டியில் தஞ்சமடைந்தோம். அங்கேயும் பொட்டலம் மட்டுமே . பசி உந்தித்தள்ள பொட்டலத்தை வாங்கி எதிரில் ட்ராவல்ஸ் வண்டிகள் நிறுத்துமிடத்தில் கிடந்த வேப்பமரக்கல்லில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தோம். இரண்டு மட்டன் பிரியாணி , ஒரு பள்ளிப்பாளையம் செமி கிரேவி. பிரியாணி அளவான காரத்தில் நல்ல சுவை. தயிர் பச்சடி அபார சுவையோடு இருந்தது. தண்ணீர்ப் போத்தலோடு சேர்த்து  800ம் சில்லறையுமானது விலை. தலைப்பாகட்டியில் சேர்ந்தாற்போல நான்கு நாட்கள் சாப்பிடவேண்டுமானால் சாமான்யன் தன் தலையை செட்டியார் கடையிலோ ,சேட்டு கடையிலோ அடமானம்தான் வைக்கவேண்டும். நாளது தேதிக்கு ஹிருதயம் சிறுநீரகம் அளவிற்குக்கூடப் பெறாது நம் தலை. ஆனால் அதில்தான் அதிகமான எடையைச் சுமக்கிறோம். போகட்டும். இருக்கப்பட்டவன் அள்ளித்தினிக்கிறான். 

திரும்ப வரும் வழியில் , வளர்மதி பாலத்திலிருந்து ஸ்ரீ சக்தி தியேட்டர் போகும் வழியில் நடராஜர் செட்டியார் நகைக்கடை வாசலில் நிறுத்தினார் நண்பர்.  பர்பிக்யூ ஸ்டைலில் ஒரு மோட்டார் கடை. ARC பியூர் என்று நினைக்கிறேன். சிக்கனை விதம் விதமாக வதம் செய்துகொண்டிருந்தனர் இருவர். நண்பர் வாடிக்கையாளராம். அபாரமான சுவையோடு இருக்கும் ஆளுக்கொரு பள்ளிப்பாளையம் ரோல் சாப்பிடுவோம் என்றார். ஏற்கனவே உள்ளே தள்ளியிருந்த பாதிப் பிரியாணியே ஏகப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு சிக்கன் ரோலைத் திணித்தால் வீட்டிற்கு உருண்டுதான் போகப்போகிறோம் என்ற பயமிருந்தாலும் நண்பரின் மனம் கோணக்கூடாது என்பதற்காக சரியென்றேன். மைதா மாவை சப்பாத்தி பதத்தில் உருட்டித் தேய்த்து அதில் நறுக்கிய தேங்காய்ச்சில் , மசாலாவுடன் நன்கு வேகவைத்த போன்லெஸ் சிக்கனை இன்னபிற இனம்காணவியலாத சில அயிட்டங்களோடு ஸ்டஃப் செய்து சுருட்டி ஒரு பட்டர் பேப்பரில் வைத்து அதையும் சுருட்டி கையில் திணிக்கிறார்கள். அதைக் கைப்பற்றுவதென்பது தொடரோட்டத்தில் கட்டையை கைமாற்றும் வைபவம் போல் ரஸமான சம்பவமாக உள்ளது. பட்டர் பேப்பரை தின்றுவிடமல் அதே சமயம் கீழேயும் சிந்திவிடாமல் லாவகமாக சாப்பிட வேண்டும். நான் இரண்டு அங்குல நீளத்தை உள்ளே தள்ளுவதற்க்குள் நண்பர் ஜாலவித்தைக்காரரைப்போல சடுதியில் சாப்பிட்டு கையைத்துடைத்துவிட்டார். அடிக்ட் ஆகக்கூடிய அளவிற்கான அபாரமான சுவையென்று சொல்லமுடியாது ஆனாலும் தகும். அடுத்த முறை வேறொரு அயிட்டத்தை சுவைத்துப்பார்க்கவேண்டும். இரண்டு பள்ளிப்பாளையம் சிக்கன் ரோல் 200 ரூபாயாகிறது. 

★★★★★★

துல்லியமான கணக்கில்லையெனினும் இதுவரை உத்தேசமாக 30+ மலையாளப் படங்களை பார்த்திருப்பேன். சமீபத்தில் பார்த்த நான்கு படங்களைத் தவிர மற்றவையெல்லாம் சப் டைட்டில் தயவுடன் பார்த்தவை. இப்போது சப் டைட்டில் உதவியின்றியே ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. சரியாக பிடிபடாத வசனங்களை மட்டும் ரீவைண்ட் செய்து கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது புரிந்துவிடுகின்றது. கவனித்தீர்களா பார்வை பல விசயங்களை மழுங்கடித்து விடுகிறது. சில இடங்களில் / விஷயங்களில் கண்களை மூடிக்கொண்டிருப்பது சாலச்சிறந்தது. மலையாளத்தில் ராவு என்றால் காலையில் என்றர்த்தம் ஆகிறதுபோல. நான் இரவென்று நினைத்துக்கொண்டு இதுகாறும் பார்த்துவந்தேன். நேற்றுதான் நண்பரொருவர் சொன்னார். இதுபோன்ற சில அனர்த்தங்கள் ஆகின்றபோதும் மலையாளப் படங்கள் எனக்கு பிடித்தமானவையாகவே இருக்கிறது. இன்னுமொரு 30+ படங்களை சப் டைட்டில் உதவியின்றி பார்த்துவிட்டால் , பேச்சு மலையாளத்தில் பாண்டித்தியம் பெற்றுவிடுவேனென்று எண்ணுகிறேன். ஒருவருக்கு எத்துனை மொழி தெரியுமோ அவர் அத்தனை மனிதருக்குச் சமானம் என்று சும்மாவாக சொன்னார்கள். 

கடந்த இரு வாரங்களில் ஒன்னரை கன்னடப் படங்களையும் , இரண்டரை தெலுங்குப் படங்களையும் காண நேர்ந்தது.  தெலுங்கில் நானி, வி.தே நீங்கலாக ஏனைய ஹீரோக்கள் அனைவருமே ஆக்சுமாரான தோற்றம் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். ரவி சரண் தேஜா என்றொருவர் மணிபர்ஸை அன் ஷிப் பண்ணியது போல சிரிக்கிறார். ப்பே.! கன்னடம் இதைக்காட்டிலும் மோசம். சமீபத்தில் மகீரா என்றொரு படம் பார்த்தேன். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகைமையில், சேர்க்கலாம். ஓரளவு நல்ல கதை மற்றும் இயக்கம் தான் ஆனாலும் நடிகர்களின் சோபையான நடிப்பில் சுமாராக வெளிப்பட்டிருக்கிறது. 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 5 லட்ச ரூபாய்க்கு நடிக்கிறண்டா என்பதினைப்போல இசை. ரொம்ப ரிச் ஆக இருக்கின்றது . பிரதான வில்லன் , கடைகளுக்கு சாம்பிராணி புகை போடுபவரைப்போல உள்ளார். வில்லனின் அடியாள் ரோபோ சங்கரின் ஒன்றுவிட்ட தம்பி போலுள்ளார். துப்பறிவதில் கில்லாடி என்றழைக்கப்படும் ஆசாமி , பபூன் போல உள்ளார். உருவக் கேலி இல்லை , கொஞ்சமாவது நம்பும்படியாக இருக்கவேண்டுமல்லவா. குறைந்தபட்சம் நடிப்பிலாவது. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பேமிலி மென் என்றொரு சீரிஸ் பார்த்தேன் அமேசான் பிரைமில். அதில் பிராதான வேடமேற்றிருப்பவர் டொக்காகத்தான் தோற்றமளிப்பார். சாயலுக்கு லோ பட்ஜெட் சந்திரபாபுவைப் போன்று. ஆரம்பத்தில் நகைப்பாக தோன்றுபவர் சீரிஸ் முடியும்போது த்தா இந்தாள விட்டா வேற எவனாலும் இப்டி பண்ணிருக்கமுடியதுடா என்று வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.  ஆனால் நம் கன்னட மதீரா நடிகர்கள் யாரையும் காணச் சகிக்கவில்லை. ஒருவரிடம் கூட கொஞ்சம் கூட மிடுக்கில்லை. பெங்களூரு அழகான நகரம், டெக்னாலஜி ஹப் என்கிறார்கள் சினிமா மட்டும் விதிவிலக்கு போல. ஒப்பீட்டளவில் தெலுங்கு ரொம்ப ஆர்டிபிஷியலாகவும் ; மலையாளம் அதீத இயல்புத்தன்மையோடும் உள்ளதாகப்படுகிறது. தமிழ் சினிமா அந்தளவில் பேலன்ஸ்டாக இருப்பதாகவே தெரிகிறது. கன்னடம் ஆட்டத்திலேயே சேர்த்தியில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு நல்ல படங்கள் தேறலாம். ஆகையினால் மீண்டும் கடவுளின் தேசத்திலே கரையொதுங்கலாம் என்றிருக்கிறேன்.

★★★★★★

கடந்த இரண்டு வாரங்களும் கரோனவை பின்னுக்குத்தள்ளி பேசுபொருளாக இருந்தது மதுப்பிரியர்களும் டாஸ்மார்க்கும்தான். இதையொட்டி சொல்வதற்கு மூன்று விஷயங்கள் இருக்கிறது .

கரோனா காலங்களில் கைக்கொண்ட(கால்!?) ஒரே நற்பழக்கம் நடைப்பயிற்சி. பெரும்பாலும் நடைப்பயிற்சிக்கு துணை சேர்ப்பதில்லை. நடப்பதற்கே மூச்சு வாங்குகிறது இதிலெங்கே பேசுவது . அதுவும் அநேகர் தாமரை மணாளன்களாகவே அமைகிறார்கள். அதனால் ஆல்வேஸ் தனியன் தான். சமயங்களில் நடை முடிந்து ஓய்ந்து உட்காரும்போது அக்கம்பக்கம் பிளாட் அண்ணன்ங்களுடன் பேச நேரிடும். பெரும்பாலும் சம்பாஷனைகளில் கலந்துகொள்வதில்லை, கவனிப்பதைபோன்ற பாவனையோடு நிறுத்திக்கொள்வேன். அப்படியான சம்பாஷணை ஒன்று மதுவை முன்னிட்டு போன வாரம். நீ தண்ணியடிப்பியா தம்பி என்ற கேள்வியை என்னை நோக்கி எழுப்பினார் அண்ணன் ஒருவர், பாவனை எடுபடவில்லை. இல்லையென்றேன் . இப்பொழுதா எப்பொழுதுமா என்றார் . எப்பொழுதுமே என்றேன். என்னப்பா பொண்டாட்டியோட மட்டுமே இருக்குற எனக்கே பிரஷர் ஏறிடுது , கட்டிங் போட்டாதான் நிம்மதியா தூங்கி எழ முடியுது,  நீயோ மாமியார், மருமகள் , மகள்னு தெறி'ப்பிக்கான காம்பினேஷன்ல இருக்க , ஆனா தண்ணியடிக்குறதில்லைன்னு சொல்ற. பார்த்துப்பா பிரஷர் அதிகமாயி ஸ்டரோக்ல கொண்டுபோயி விட்டுடப் போவுதுன்னு பீதியைக் கிளப்பிவிட்டு கிளம்பிவிட்டார். முன்பெல்லாம் தண்ணியடித்தால் தான் வியாதிகள் அண்டும் என்று பயமுறுத்துவார்கள் இப்போது தண்ணியடிக்கவில்லை என்றால் வியாதி வருமென்று பயமுறுத்துகிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நிசம் தானா!?

சமீபத்தில் அரசனின் அரண் சிறுகதை வாசித்தேன். வட்டார மொழி நடையில் கதைகள் எழுதுவதில் அரசன் முடிசூடா அரசன். முதல் புத்தகமான இண்டமுள்ளுவை கிண்டிலில் டவுன்லோடி வைத்திருந்தேன். ஒற்றைத்தலைவலி உக்கிரமாக ஆரம்பித்திருப்பதினால் , மொபைலில் படம் பார்ப்பது , மொபைல் கிண்டில் வாசிப்பதையெல்லாம் முற்றாக நிறுத்தியாயிற்று. அச்சுப் பதிப்பு வாங்கவேண்டும். அரண் சிறுகதை யாவரும் இணையதளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வட்டார மொழி நடையெனினும் வாசிப்பதற்க்கு சுளுவாகவே இருக்கிறது. மதுவின்பால் அடிமைப்பட்டு தனது தொழில் மற்றும் இல்லறக் கடமைகளிலிருந்து தடம்புரளும் சவரத் தொழிலாளி ஒருவரை ஊர்ப் பெரியவர் ஒருவர் நட்புடன் நலவழிப்படுத்துவதுதான் கதை. இருவருக்குமான நட்பு வழியே மது , தீண்டாமை , சாதீய வேறுபாடுகள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். வரிக்கு வரி கதை காட்சிகளாக விரிகிறது. அவ்வசியம் வாசிக்கவேண்டிய சிறுகதை.


சத்யம் பறஞ்சா விசுவாசிக்குமோ என்றொரு மலையாளப் படத்தினைப் பார்த்தேன். பிஜு மேனன் பிரதான வேடம். அய்யப்பனும் கோஷியும் பாத்திரத்திற்கு நேரெதிரான பொறுப்பற்ற குடும்பத்தலைவன். பிஜு அண்ட் கோ கட்டிட வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள். அனைவரும் அதீத மதுப்பிரியர்கள். கட்டிட வேலைக்குச் சென்றயிடத்தில் , கட்டட ஓனரின் மகளை காதலித்து கட்டி முடிக்கப்படாத கட்டிடமொன்றில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார். காலப்போக்கில் குடித்தனத்தின் வெளிப்பாடாக மகளொருவர். ஆனபோதிலும் குடியை விட்டாரில்லை. வீட்டை எதிர்த்து காதலித்து கட்டிக்கொண்ட கணவனால் அவமானமும் , வறுமையும் எதிர்கொள்கிறது குடும்பம். மறுநாள் மகளின் பிறந்தநாள் , லேட் நைட் குடிபோதையில் பிஜு வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார் , வழியில் மதுப் போத்தல்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. குடிகார புத்தி குறுக்கு வழிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்த சம்பவங்கள்தான் படம். கேரளாவின் ஏதோ ஒரு கிராமத்தில் நான்கைந்து நாட்கள் கேமராவை வைத்துவிட்டு பின் எடிட்டிங் செய்தது போல அவ்வளவு இயல்பாக உள்ளது படம். படத்தின் சுவாரஸ்யக் குறைச்சல் அதிகம். அதனாலேயே என்னவோ டாகுமெண்ட்ரி பீல் வந்துவிடுகிறது. அதீதக் குடியால் குடும்பம் , குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு




May 16, 2020

பேசாத வார்த்தைகள் ~ 160520



பேசாத வார்த்தைகள் ~ 160520


2011ல் டூவீலர் வாங்கியபோது அப்போதைய மேனேஜர் என்ன நம்பர் வாங்கப்போகிறாய் என்று கேட்டார். உள்ளபடியே அப்படியான பிரத்யேகமான எண் தான் வேண்டுமென்கிற விருப்பமோ, திட்டமோ ஏதுமில்லை எனக்கு . குறிப்பாக இந்த எண் வேண்டுமென்று எதுவும் கேட்கவில்லை , அவர்கள் தருவது எதுவாகியினும் சம்மதம்தான் என்றேன். 6564 என்று கிடைத்திருந்தது. பரவாயில்லை இறங்குமுகமாக இருந்தாலும் கூட்டுத்தொகை 3ல் முடிகிறது , ராசியான வண்டியாக அமையுமென்றார் அதே மேனேஜர் பிறிதொரு நாளில். அடுத்த நாளே பூமித்தாயை முத்தமிட்டுத்திரும்பினேன். ராசின்னு சொன்னீர்களேன்னு கேட்டதற்கு , ஆமாம்யா அதான் பெரிய அடியெல்லாம் எதுவுமில்லாம சில்லறை அடிகளோடு தப்பியிருக்கிறாய் என்றார். சரிதான். மிகச்சரியாக அன்றிலிருந்து எனக்கும் தொற்றிக்கொண்டது இந்த கூட்டுத்தொகை போஃபியா. எதிர்ப்படும் வாகன எண் , வீட்டு எண் , மொபைல் எண் என்று கண்ணில்படும் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கூட்டிப்பழக ஆரம்பித்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் அபார்ட்மென்டில் வீடு தேடும்போது , வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு வந்த அனேக வீடுகளில் சுவாரஸ்யமான ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்.
அனைத்து பிளாட்டுகளின் கூட்டு எண்ணும் 8 ல் முடிவதாக இருந்ததது. அட என்று மேலதிக தகவல்களுக்காக மேலோட்டமாக கூகிளை பீராய்ந்தால் , இந்தியர்களுக்கு 8 நம்பர் அலர்ஜியாம். ராசியற்ற எண் என்று திடமாக நம்புகிறார்கள். இப்டியிருக்கையில் பில்டர்கள் ஏன் 8ல் முடியுமாறு வீட்டு எண்களை வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 16 ஆம் எண் வீட்டிற்குப் பிறகு 16 ஏ என்று வைக்கலாம் இல்லையா. அதிலெதுவும் சட்ட சிக்கல் இருக்கின்றதா என்று தெரியவில்லை. போகட்டும். இதுதொடர்பாக மருத்துவமனையில் வேலைபார்க்கும் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , அட நீங்க வேற எங்க ஆஸ்ப்பிட்டல்லே நிறையப் பேஷண்ட் எட்டாம் நம்பர் ரூமையே வேண்டாம் என்கிறார்கள். இதற்காக ஆப்ரேஷனைக்கூட தள்ளி வைத்த பேஷண்ட்களை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று பகீர் செய்தியை சொன்னார். வாகனம் , வண்டி , வீடு எல்லாம் கூட்டுத்தொகை பார்த்து 8ஐ தவிர்த்துவிடலாம் , ஆனால் எனைப்போன்று எட்டாம் தேதி பிறந்தவர்கள் எங்கே போய் முட்டிக்கொள்வதாம்!?

★★★★★

பிறந்த தேதி என்றதும் நினைவுக்கு வருகிறது. அடியேன் இன்றுடன் அகவை முப்பதியெட்டை பூர்த்தி செய்கிறேன். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் பள்ளிக்கூடத்தோடு நிறைவுக்கு வந்துவிடுகிறது என்றெண்ணுகிறேன்.  வறிய குடும்பச் சூழலில் பிறந்த எனக்கு பிறந்தநாட்கள் அரிசிப்பாயாசமும், ஆரஞ்சு மிட்டாய்களாகவும் கடந்து போனது. அதிர்ட்டம் இருந்த வருடங்களில் அரைக்கால் சட்டையோ, டிரவுசரோ கூடுதலாக கொண்டாடக் கிடைத்திருக்கிறது. வேலைக்கு சேர்ந்த பிறகு , பிறந்தநாட்கள் என்பவை வண்ணதாசன் அவர்கள் சொல்வதைப்போல வாசல் முன் தேங்கியிருக்கும் நீர்த்திட்டை தாண்டி வருவது போலத்தான். இந்த வருடம் எனக்கு நினைவில் கொள்ள ஒரு சிறப்புண்டு. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக 19 வயத்திற்குள்ளாகவே படிப்பை நிறுத்திக்கொண்டு  வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படிப் பார்த்தால் இதுவரையிலான 38 ஆண்டுகளில் சரிபாதி ஆண்டுகள் பொருளீட்டுவதற்காக செலவிட்டிருக்கிறேன். பெரிய சொத்து எதுவும் சேர்க்கவில்லையெனினும் வறுமைக்கோட்டிற்கு வெகு ஆழத்தில் இருந்த குடும்பத்தை இந்த 19 வருடங்களில் நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கிறேன். மின்சார இணைப்பிலிருந்து , வீடு மராமத்து செய்தது வரை ஒரு சராசரி குடும்பம் என்ற வடிவிற்கு கொண்டுவரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் தலைவன் பொருளீட்டுவதில் பிசகினால் அதற்கு ஈடாக அடுத்த தலைமுறை இழப்பது அதிகம். லஞ்சம், கமிஷன் , அன்பளிப்பு என்ற அற்ப சந்தோஷங்களுக்கு விலைபோகாமல் ; அதேசமயம் அண்ணாச்சி அதிகமாக கொடுத்த ஐந்து ரூபாய் சில்லறையை திருப்பிக் கொடுக்கலாமா வேண்டாமா என்று மறுகித்தவிக்கும் சராசரி சம்சாரியாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரிதாக மகிழ்ச்சியுமில்லை ; கவலையுமில்லை.

★★★★★

இத்தனை வருட உத்தியோக அனுபவத்தில் முதன்முறையாக தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் ; வருமானமுமில்லாமல் வீட்டிலிருந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திலிருந்து மற்றோரு நிறுவனத்திற்கு மாறியபோது கூட  ஓய்வெடுத்துக்கொண்டதில்லை. முதல் நாள் மாலை விடைபெற்று மறுநாள் காலை புதிய நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறேன். வெளிநாடுகளிலெல்லாம் சில நிறுவனங்களில் கட்டாயமாக ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுப்பார்களாம். ஊழியரின் தனிப்பட்ட விஷயங்களுக்காகவும் ; ஒரு வேலை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்ற நிலையை மாற்றவும் அப்படி வழங்குவதாக படித்திருக்கிறேன். நீ இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கிறது பார் என்ற மறைமுக செய்தியும் அதிலுண்டு. இதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்கமுடியாது. என்னால் தான் நிறுவனமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற தொழிலாளர்களும் ; காசை விட்டெறிந்தால் ஆயிரம் பேர் என்ற எண்ணம் கொண்ட 
முதலாளிகளும் மலிந்திருக்கிறார்கள் இங்கே. விசுவாசம் , மனிதாபிமானமெல்லாம் பணத்திற்குபிறகே. வேலைக்குப்போகும் எல்லோருக்கும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சலிப்படைந்து , ஒரு ரெண்டு மூணு மாசம் இந்த டைமிங், அட்டண்டன்ஸ், டார்கெட் இல்லாமல் நிம்மதியாக வீட்டிலிருந்து , நினைக்கும் போது தூங்கி, சாப்பிட்டு , படம் பார்த்து என்ஜாய் பண்ணனும்ன்ற எண்ணம் இருந்திருக்கும். இனி அப்படியொரு எண்ணமே இருக்காது. அப்படியெல்லாம் இருப்பது என்ஜாய் அல்ல பனிஷ்மண்ட் என்றறிந்திருப்பார்கள். வொர்க் ஃபிரம் ஹோம் கூட வரமல்ல ; சாபம் என்று சொல்கிறார்கள். ஒருவழியாக இவ்வளவையும் கடந்து வேலைக்குப் போகலாம் என்று சந்தோஷத்தோடு கிளம்பினால்,   நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு , சலுகைகள் ரத்து என்று அடுத்தடுத்து அம்புகளை ஏவ சித்தமாய் இருக்கிறார்கள். கமிட்மெண்ட்கள் கண்முன்னால் வந்து பயம் காட்டுகின்றன. இனிவரும் நாட்கள் அனேகருக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கல்களை கொண்டுவருவது நிச்சயம். இயன்றவரை செலவுகளை சிக்கனப்படுத்திப் பழக வேண்டும். நான் வேலை பார்க்கும் ஆயத்த ஆடை துறை மீண்டு வர ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள். கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. நல்லதே நடக்கட்டும். இப்பொழுது நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேலைக்குச் செல்லவிருப்பது, படித்து முடித்து புதிதாக வேலைக்குப் போவதைப்போல உணர்கிறேன். பொதுவாக படுத்துக்கொண்டு போகுமளவிற்கு இருக்கைகள் காலியாய் இருப்பினும் தனியார் பேருந்துகளில் ஏறவே மாட்டேன்
அதை ஒரு கொள்கையாகவே கடைபிடிக்கின்றேன். அரசுபேருந்துகள் நாளையிலிருந்து கூடுதல் கட்டணத்தோடு இயங்குமென்று சொல்கிறார்கள். நல்லநாளிலே நம் அரசுப் பேருந்துகள் தேவிஸ்ரீ பிரசாத் போல சத்தம் கொடுக்கும். இரண்டுமாதம் கழித்து இயக்கத்திற்கு வருகிறது , தனித்தவில் போல முன்னத்தி  சக்கரம் மட்டும் கழண்டு ஓடாமல் இருக்கவேண்டும். போலவே ஓட்டுனர்களும் எங்கேடா இங்க இருந்த பிரேக் என்று தேடாமல் இருக்கவேண்டும். மருதமலை முருகா காத்தருள்வாயாகா!


★★★★★


அலுவலகம் செல்வதற்காக தோராயமாக தினமும் நான்கு மணி நேரம் பேருந்துப் பிரயாணம் செய்பவன் நான். அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சாரு , எஸ்.ரா , கேபிள் சங்கர் போன்றவர்களின் இணையதளத்தில் வாசிக்கும் வழக்கமுண்டு.  முதலிருவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று இடுகைகளாவது எழுதியிருப்பார்கள். ஜெ. மோ தளத்தில் நாளொன்றுக்கே நான்கு இடுகைகள் வருகிறது. ஆனால் அவரது எழுத்துகள் ஆங்கில இந்து வாசிப்பதைப்போல இருப்பதினால் தவிர்த்துவிடுவேன்.  கேபிள் சங்கர் அவர்களின் எழுத்துகளை வாசிப்பதென்பது நீண்ட வேலை நாளின் நிறைவில் அருந்தும் தேநீர் போன்றதொரு refreshing. முன்பெல்லாம் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றிரண்டு தனது தளத்தில் எழுத்திக்கொண்டிருந்தார். இப்பொழுது மாசத்திற்கு ஒன்று என்று அருகி சமயங்களில் எதுவுமில்லை என்று ஆகிவிட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகமும் செல்லவில்லை , மேற்படி மூவரின் தளத்திற்கும் போகவில்லை. இரண்டு ஜி சுத்தோ சுத்து என்று சுத்துவதும் ஒரு காரணம். கரோனா நாட்களில் மற்றவர்களைப்போல கேபிளும் நிறைய குறுங்கதைகள் எழுதியிருக்கிறார். லாக்டவுன் சிறுகதைகள் என்ற லேபிளின் கீழே நிறைவாக எழுதியிருக்கும் 2040 என்ற விபரீத கற்பனைக் கதையை வாசித்தேன். வழக்கம்போல ரெஃப்ரேஷிங் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ். கரோனா தொற்று தொடங்கிய அடுத்த 20வது ஆண்டில் நிகழ்வதான கதை. மனைவியை நெருங்குவதே மனித வெடிகுண்டை நெருங்குவதைப்போன்ற சூழல். இளம் தம்பதியொன்றை ஆர்கானிக்காக குழைந்தை பெற்றுக்கொள்ளத் தூண்டும் மருத்துவரின் ஆராய்ச்சியை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் மேற்படி கதையில். எதிர்காலத்தில் தொடுதல் என்றொரு உணர்வே இல்லாமல் போய்விடுமோ என்றுகூட தோன்றுகிறது. 2040 ல் நடைபெறுவதாக செல்லும் கதையின் ஒரு பத்தியில் , பாரதப் பிரதமர் தொலைகாட்சியில் தோன்றி டாஸ்க் கொடுப்பதாகவும், வங்கி கணக்கில் 15கோடி ரூபாய் வரவு வைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுப்பதாகவும் வருகிறது. ஆக 2040 லும் ஜி தான் என்று சொல்கிறார். விபரீத கற்பனை என்று சொன்னேனில்லையா அது இதுதான். மற்றபடி மதுக்கடை கூட்டத்தையும் ; மத்துவந்தியின் பேச்சையும் கேட்கும்போது இந்த கதை நிஜமாகும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.