May 16, 2020

பேசாத வார்த்தைகள் ~ 160520



பேசாத வார்த்தைகள் ~ 160520


2011ல் டூவீலர் வாங்கியபோது அப்போதைய மேனேஜர் என்ன நம்பர் வாங்கப்போகிறாய் என்று கேட்டார். உள்ளபடியே அப்படியான பிரத்யேகமான எண் தான் வேண்டுமென்கிற விருப்பமோ, திட்டமோ ஏதுமில்லை எனக்கு . குறிப்பாக இந்த எண் வேண்டுமென்று எதுவும் கேட்கவில்லை , அவர்கள் தருவது எதுவாகியினும் சம்மதம்தான் என்றேன். 6564 என்று கிடைத்திருந்தது. பரவாயில்லை இறங்குமுகமாக இருந்தாலும் கூட்டுத்தொகை 3ல் முடிகிறது , ராசியான வண்டியாக அமையுமென்றார் அதே மேனேஜர் பிறிதொரு நாளில். அடுத்த நாளே பூமித்தாயை முத்தமிட்டுத்திரும்பினேன். ராசின்னு சொன்னீர்களேன்னு கேட்டதற்கு , ஆமாம்யா அதான் பெரிய அடியெல்லாம் எதுவுமில்லாம சில்லறை அடிகளோடு தப்பியிருக்கிறாய் என்றார். சரிதான். மிகச்சரியாக அன்றிலிருந்து எனக்கும் தொற்றிக்கொண்டது இந்த கூட்டுத்தொகை போஃபியா. எதிர்ப்படும் வாகன எண் , வீட்டு எண் , மொபைல் எண் என்று கண்ணில்படும் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கூட்டிப்பழக ஆரம்பித்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் அபார்ட்மென்டில் வீடு தேடும்போது , வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு வந்த அனேக வீடுகளில் சுவாரஸ்யமான ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்.
அனைத்து பிளாட்டுகளின் கூட்டு எண்ணும் 8 ல் முடிவதாக இருந்ததது. அட என்று மேலதிக தகவல்களுக்காக மேலோட்டமாக கூகிளை பீராய்ந்தால் , இந்தியர்களுக்கு 8 நம்பர் அலர்ஜியாம். ராசியற்ற எண் என்று திடமாக நம்புகிறார்கள். இப்டியிருக்கையில் பில்டர்கள் ஏன் 8ல் முடியுமாறு வீட்டு எண்களை வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 16 ஆம் எண் வீட்டிற்குப் பிறகு 16 ஏ என்று வைக்கலாம் இல்லையா. அதிலெதுவும் சட்ட சிக்கல் இருக்கின்றதா என்று தெரியவில்லை. போகட்டும். இதுதொடர்பாக மருத்துவமனையில் வேலைபார்க்கும் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , அட நீங்க வேற எங்க ஆஸ்ப்பிட்டல்லே நிறையப் பேஷண்ட் எட்டாம் நம்பர் ரூமையே வேண்டாம் என்கிறார்கள். இதற்காக ஆப்ரேஷனைக்கூட தள்ளி வைத்த பேஷண்ட்களை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று பகீர் செய்தியை சொன்னார். வாகனம் , வண்டி , வீடு எல்லாம் கூட்டுத்தொகை பார்த்து 8ஐ தவிர்த்துவிடலாம் , ஆனால் எனைப்போன்று எட்டாம் தேதி பிறந்தவர்கள் எங்கே போய் முட்டிக்கொள்வதாம்!?

★★★★★

பிறந்த தேதி என்றதும் நினைவுக்கு வருகிறது. அடியேன் இன்றுடன் அகவை முப்பதியெட்டை பூர்த்தி செய்கிறேன். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் பள்ளிக்கூடத்தோடு நிறைவுக்கு வந்துவிடுகிறது என்றெண்ணுகிறேன்.  வறிய குடும்பச் சூழலில் பிறந்த எனக்கு பிறந்தநாட்கள் அரிசிப்பாயாசமும், ஆரஞ்சு மிட்டாய்களாகவும் கடந்து போனது. அதிர்ட்டம் இருந்த வருடங்களில் அரைக்கால் சட்டையோ, டிரவுசரோ கூடுதலாக கொண்டாடக் கிடைத்திருக்கிறது. வேலைக்கு சேர்ந்த பிறகு , பிறந்தநாட்கள் என்பவை வண்ணதாசன் அவர்கள் சொல்வதைப்போல வாசல் முன் தேங்கியிருக்கும் நீர்த்திட்டை தாண்டி வருவது போலத்தான். இந்த வருடம் எனக்கு நினைவில் கொள்ள ஒரு சிறப்புண்டு. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக 19 வயத்திற்குள்ளாகவே படிப்பை நிறுத்திக்கொண்டு  வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படிப் பார்த்தால் இதுவரையிலான 38 ஆண்டுகளில் சரிபாதி ஆண்டுகள் பொருளீட்டுவதற்காக செலவிட்டிருக்கிறேன். பெரிய சொத்து எதுவும் சேர்க்கவில்லையெனினும் வறுமைக்கோட்டிற்கு வெகு ஆழத்தில் இருந்த குடும்பத்தை இந்த 19 வருடங்களில் நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கிறேன். மின்சார இணைப்பிலிருந்து , வீடு மராமத்து செய்தது வரை ஒரு சராசரி குடும்பம் என்ற வடிவிற்கு கொண்டுவரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் தலைவன் பொருளீட்டுவதில் பிசகினால் அதற்கு ஈடாக அடுத்த தலைமுறை இழப்பது அதிகம். லஞ்சம், கமிஷன் , அன்பளிப்பு என்ற அற்ப சந்தோஷங்களுக்கு விலைபோகாமல் ; அதேசமயம் அண்ணாச்சி அதிகமாக கொடுத்த ஐந்து ரூபாய் சில்லறையை திருப்பிக் கொடுக்கலாமா வேண்டாமா என்று மறுகித்தவிக்கும் சராசரி சம்சாரியாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரிதாக மகிழ்ச்சியுமில்லை ; கவலையுமில்லை.

★★★★★

இத்தனை வருட உத்தியோக அனுபவத்தில் முதன்முறையாக தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் ; வருமானமுமில்லாமல் வீட்டிலிருந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திலிருந்து மற்றோரு நிறுவனத்திற்கு மாறியபோது கூட  ஓய்வெடுத்துக்கொண்டதில்லை. முதல் நாள் மாலை விடைபெற்று மறுநாள் காலை புதிய நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறேன். வெளிநாடுகளிலெல்லாம் சில நிறுவனங்களில் கட்டாயமாக ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுப்பார்களாம். ஊழியரின் தனிப்பட்ட விஷயங்களுக்காகவும் ; ஒரு வேலை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்ற நிலையை மாற்றவும் அப்படி வழங்குவதாக படித்திருக்கிறேன். நீ இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கிறது பார் என்ற மறைமுக செய்தியும் அதிலுண்டு. இதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்கமுடியாது. என்னால் தான் நிறுவனமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற தொழிலாளர்களும் ; காசை விட்டெறிந்தால் ஆயிரம் பேர் என்ற எண்ணம் கொண்ட 
முதலாளிகளும் மலிந்திருக்கிறார்கள் இங்கே. விசுவாசம் , மனிதாபிமானமெல்லாம் பணத்திற்குபிறகே. வேலைக்குப்போகும் எல்லோருக்கும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சலிப்படைந்து , ஒரு ரெண்டு மூணு மாசம் இந்த டைமிங், அட்டண்டன்ஸ், டார்கெட் இல்லாமல் நிம்மதியாக வீட்டிலிருந்து , நினைக்கும் போது தூங்கி, சாப்பிட்டு , படம் பார்த்து என்ஜாய் பண்ணனும்ன்ற எண்ணம் இருந்திருக்கும். இனி அப்படியொரு எண்ணமே இருக்காது. அப்படியெல்லாம் இருப்பது என்ஜாய் அல்ல பனிஷ்மண்ட் என்றறிந்திருப்பார்கள். வொர்க் ஃபிரம் ஹோம் கூட வரமல்ல ; சாபம் என்று சொல்கிறார்கள். ஒருவழியாக இவ்வளவையும் கடந்து வேலைக்குப் போகலாம் என்று சந்தோஷத்தோடு கிளம்பினால்,   நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு , சலுகைகள் ரத்து என்று அடுத்தடுத்து அம்புகளை ஏவ சித்தமாய் இருக்கிறார்கள். கமிட்மெண்ட்கள் கண்முன்னால் வந்து பயம் காட்டுகின்றன. இனிவரும் நாட்கள் அனேகருக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கல்களை கொண்டுவருவது நிச்சயம். இயன்றவரை செலவுகளை சிக்கனப்படுத்திப் பழக வேண்டும். நான் வேலை பார்க்கும் ஆயத்த ஆடை துறை மீண்டு வர ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள். கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. நல்லதே நடக்கட்டும். இப்பொழுது நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேலைக்குச் செல்லவிருப்பது, படித்து முடித்து புதிதாக வேலைக்குப் போவதைப்போல உணர்கிறேன். பொதுவாக படுத்துக்கொண்டு போகுமளவிற்கு இருக்கைகள் காலியாய் இருப்பினும் தனியார் பேருந்துகளில் ஏறவே மாட்டேன்
அதை ஒரு கொள்கையாகவே கடைபிடிக்கின்றேன். அரசுபேருந்துகள் நாளையிலிருந்து கூடுதல் கட்டணத்தோடு இயங்குமென்று சொல்கிறார்கள். நல்லநாளிலே நம் அரசுப் பேருந்துகள் தேவிஸ்ரீ பிரசாத் போல சத்தம் கொடுக்கும். இரண்டுமாதம் கழித்து இயக்கத்திற்கு வருகிறது , தனித்தவில் போல முன்னத்தி  சக்கரம் மட்டும் கழண்டு ஓடாமல் இருக்கவேண்டும். போலவே ஓட்டுனர்களும் எங்கேடா இங்க இருந்த பிரேக் என்று தேடாமல் இருக்கவேண்டும். மருதமலை முருகா காத்தருள்வாயாகா!


★★★★★


அலுவலகம் செல்வதற்காக தோராயமாக தினமும் நான்கு மணி நேரம் பேருந்துப் பிரயாணம் செய்பவன் நான். அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சாரு , எஸ்.ரா , கேபிள் சங்கர் போன்றவர்களின் இணையதளத்தில் வாசிக்கும் வழக்கமுண்டு.  முதலிருவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று இடுகைகளாவது எழுதியிருப்பார்கள். ஜெ. மோ தளத்தில் நாளொன்றுக்கே நான்கு இடுகைகள் வருகிறது. ஆனால் அவரது எழுத்துகள் ஆங்கில இந்து வாசிப்பதைப்போல இருப்பதினால் தவிர்த்துவிடுவேன்.  கேபிள் சங்கர் அவர்களின் எழுத்துகளை வாசிப்பதென்பது நீண்ட வேலை நாளின் நிறைவில் அருந்தும் தேநீர் போன்றதொரு refreshing. முன்பெல்லாம் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றிரண்டு தனது தளத்தில் எழுத்திக்கொண்டிருந்தார். இப்பொழுது மாசத்திற்கு ஒன்று என்று அருகி சமயங்களில் எதுவுமில்லை என்று ஆகிவிட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகமும் செல்லவில்லை , மேற்படி மூவரின் தளத்திற்கும் போகவில்லை. இரண்டு ஜி சுத்தோ சுத்து என்று சுத்துவதும் ஒரு காரணம். கரோனா நாட்களில் மற்றவர்களைப்போல கேபிளும் நிறைய குறுங்கதைகள் எழுதியிருக்கிறார். லாக்டவுன் சிறுகதைகள் என்ற லேபிளின் கீழே நிறைவாக எழுதியிருக்கும் 2040 என்ற விபரீத கற்பனைக் கதையை வாசித்தேன். வழக்கம்போல ரெஃப்ரேஷிங் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ். கரோனா தொற்று தொடங்கிய அடுத்த 20வது ஆண்டில் நிகழ்வதான கதை. மனைவியை நெருங்குவதே மனித வெடிகுண்டை நெருங்குவதைப்போன்ற சூழல். இளம் தம்பதியொன்றை ஆர்கானிக்காக குழைந்தை பெற்றுக்கொள்ளத் தூண்டும் மருத்துவரின் ஆராய்ச்சியை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் மேற்படி கதையில். எதிர்காலத்தில் தொடுதல் என்றொரு உணர்வே இல்லாமல் போய்விடுமோ என்றுகூட தோன்றுகிறது. 2040 ல் நடைபெறுவதாக செல்லும் கதையின் ஒரு பத்தியில் , பாரதப் பிரதமர் தொலைகாட்சியில் தோன்றி டாஸ்க் கொடுப்பதாகவும், வங்கி கணக்கில் 15கோடி ரூபாய் வரவு வைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுப்பதாகவும் வருகிறது. ஆக 2040 லும் ஜி தான் என்று சொல்கிறார். விபரீத கற்பனை என்று சொன்னேனில்லையா அது இதுதான். மற்றபடி மதுக்கடை கூட்டத்தையும் ; மத்துவந்தியின் பேச்சையும் கேட்கும்போது இந்த கதை நிஜமாகும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.



5 comments:

  1. //முதலாளிகளும் மலிந்திருக்கிறார்கள் இங்கே. விசுவாசம் , மனிதாபிமானமெல்லாம் பணத்திற்குபிறகே. //


    உண்மைதான்

    ReplyDelete
  2. என்னோட வண்டியோட கூட்டு 8 தான் :)

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ஜாதகம், ஜோதிடம், ராசி, இன்னமும் பலவற்றும் ________

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete

Related Posts with Thumbnails